ரொம்ப எதிர்பார்த்த "தொகுதி".. தட்டி தூக்கிய பாமக.. போராடி பெற தவறிய பாஜக.. குஷ்பு செம்ம ஷாக்!
குஷ்புவுக்கு பாஜக சேப்பாக்கத்தில் போட்டியிட சீட் தரவில்லை
சென்னை: நேரம் பார்த்து குஷ்புவை பாஜக கழட்டிவிட்டதோ என்ற பேச்சு எழுந்து வருகிறது.. காரணம், பாஜகவின் தொகுதிப் பட்டியலில் குஷ்பு ஆவலோடு காத்திருந்த சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியே இல்லை.
காங்கிரஸ் கட்சியில் மிகுந்த விசுவாசத்துக்குரியவராக இருந்தார் குஷ்பு.. ஆனால், அளவு கடந்த அதிருப்தி காரணமாக பாஜக பக்கம் தாவ இருப்பதாக செய்திகள் வர தொடங்கின.
குஷ்பு இப்படி கட்சி மாற போகிறார் என்று தெரிந்தும், அவரிடம் காங்கிரஸ் தரப்பு சமாதான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை.. மற்றொரு புறம் பாஜக தலைமையிடம் குஷ்பு பேச்சுவார்த்தையும் நடத்தி வந்தார்
முக்கிய பொறுப்பு
அப்போது பாஜகவில் இணைந்தால், முக்கிய பொறுப்பு அல்லது தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தர வேண்டும் என்று ஓபனாகவே தன்னுடைய கோரிக்கையை எடுத்து வைத்ததாக தெரிகிறது. தனக்கு அப்படி ஒரு வாய்ப்பினை காங்கிரஸில் வழங்காததால், கட்சி தாவ தயாராக இருப்பதாகவும் எடுத்து சொல்லப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவாதம் பாஜகவிடம் கிடைத்த பிறகே குஷ்பு, அக்கட்சியில் இணைந்தார் என்றும் தகவல்கள் வந்தன.
பரபரப்பு
பலரது எதிர்ப்புக்கு நடுவில், பரபரப்புக்கு நடுவில், தமிழக மக்களின் அதிர்ச்சிக்கு நடுவில் குஷ்பு அக்கட்சியில் இணைந்தார்.. இவர் இணைந்த அடுத்த சில தினங்களிலேயே வானதி சீனிவாசனுக்கு தேசிய அளவில் பொறுப்பு கிடைத்தது.. ஒருவேளை குஷ்புவுக்கு ரூட் க்ளியர் செய்வதற்காகவே வானதிக்கு பதவி தரப்பட்டது என்றுகூட கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை.
அண்ணாமலை
நாள் ஆக ஆக, பாஜக குஷ்புக்கு எந்தவித பொறுப்பும் தரவில்லை.. புதிதாக கட்சியில் சேர்ந்த அண்ணாமலைக்கு சீட் தரும்போது அரசியலில் சீனியர், அண்ணாமலையைவிட வயதில் பெரியவர், அண்ணாமலையைவிட துணிச்சலும், தைரியமும் நிறைந்தவர், அண்ணாமலையை விட அறிவு, ஞானம் மிக்கவர், அண்ணாமலையை விட திராவிட அரசியலை நுணுக்கமாக கவனித்து உடனிருந்து பயணித்தவர், அப்படி இருக்கும்போது, குஷ்புக்கு இப்போதுவரை பதவி தராதது ஏன் என்ற சந்தேகமும் வலுத்தது.
தொகுதி பட்டியல்
அந்த சமயத்தில்தான், வரப்போகும் தேர்தலில் குஷ்புக்கு சீட் தரப்படும் என்ற மற்றொரு தகவல் வெளியானது.. அதிலும் முக ஸ்டாலினுக்கு எதிராக குஷ்புவை களம் நிறுத்த பாஜக யோசித்து வருவதாகவும் கூறப்பட்டது.. இதற்கு காரணம், ஸ்டாலின் மீது குஷ்புக்கு இருந்த கோபத்தை நிச்சயம் பிரச்சாரத்தில் காட்டுவார் என்றும் அதற்காகவே குஷ்புவுக்கு கொளத்தூர் தொகுதியை பாஜக ஒதுக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
ஸ்டாலின்
இறுதியில் உதயநிதியுடன்தான் போட்டியிடுவார் என்று முடிவானது.. என்னுடன் மோத உதயநிதி தயாரா என்று குஷ்புவும் பகிரங்கமாக சவால் விட்டார்.. அநேகமாக சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியில் குஷ்பு நிறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. உதயநிதி அங்குதான் போட்டியிடுவார் எனக் கூறப்படுவதால், முஸ்லிம் ஓட்டுக்களை மொத்தமாக அள்ளி திமுகவுக்கு ஒரு ஜெர்க் கொடுக்கலாம் என்றும் அரசியல் நோக்கர்களும் கருத்து சொன்னார்கள்.
பாஜக
குஷ்புவை எதிர்க்க வேண்டும் என்றால், அதற்கு ஒவைசி போன்றோரின் தயவு தேவை என்று உதயநிதியே ஒருகட்டத்தில் யோசிக்கவும் நேர்ந்தது.. இப்படி ஒரு சூழல் உள்ளநிலையில்தான் பாஜகவுக்கான தொகுதிகளை இன்று அதிமுக வெளியிட்டுள்ளது.. அதில் குஷ்பு ஆவலோடு காத்திருந்த சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியே இல்லை. அதை பாமகவுக்கு ஒதுக்கி விட்டனர்.
குஷ்பு
குஷ்பு இதனால் ரொம்பவும் ஏமாந்து போயிருப்பதாக கூறப்படுகிறது. தொகுதிக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்தார் குஷ்பு. சீட் கிடைத்து விட்டதாகவே அவர் நினைத்திருந்தார். கிட்டத்தட்ட பி ரசாரமும் மேற்கொண்டு வந்தார். இதனால் அதிமுக தரப்பு கடுப்பாகி தொகுதியே கிடையாதுஎன்று கூறி விட்டதாக சொல்லப்படுகிறது. அதேசமயம், குஷ்புவுக்காக இந்தத் தொகுதியை ஏன் பாஜக கேட்டுப் பெறவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.
கேள்வி
ஒரு வேளை ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்புவை பாஜக நிறுத்தத் திட்டமிட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது. எனவே குஷ்பு கதை முழுமையாக முடிந்து விட்டதாகவும் கருத முடியாது. அல்லது கொங்கு தொகுதி ஒன்றில் அவர் நிறுத்தப்படவும் வாய்ப்புள்ளது. ஆக மொத்தம் குஷ்புவுக்கு இந்தத் தொகுதிப் பட்டியல் எந்த அளவுக்கு சந்தோஷம் தரும் என்று தெரியவில்லை. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.