டார்கெட்டே வேற.. எடப்பாடிக்கு செக் வைக்க ‘இலை’ அஸ்திரத்தை எடுத்த ஓபிஎஸ்.. இதான் மீட்டிங் பின்னணியா!?
சென்னை : ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழுவை கூட்டுவதால் அவருக்கு கட்சி ரீதியாக எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை, சின்னத்தை முடக்கலாம் என்ற கணக்கிலேயே ஓபிஎஸ் இந்த திட்டத்தைக் கையில் எடுத்திருக்கிறார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
எடப்பாடி பழனிசாமி தன் பக்கமே பெரும்பான்மை நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால், கட்சி தம் கையை விட்டுப் போகாது என்பதில் உறுதியாக இருந்து வருகிறார்.
இந்த எண்ணத்திலேயே, ஓபிஎஸ்ஸையும் சேர்க்க முடியாது என திட்டவட்டமாகக் கூறி பாஜகவையும் விட்டுப் பிடிக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார் என்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக விடாமல் போராடி வரும் ஓ.பன்னீர்செல்வம், சின்னத்தை முடக்கி ஈபிஎஸ்ஸுக்கு நெருக்கடி கொடுக்கும் முடிவில் இறங்கியிருக்கிறார் எனக் கூறப்படுகிறது.

பொதுக்குழு
பாஜக தலைமை அறிவுறுத்தியும், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் சேர்த்துக்கொள்ள முடியாது என திட்டவட்டமாகக் கூறியிருப்பதால், ஓ.பன்னீர்செல்வமும், விட்டுக் கொடுக்க துளியும் தயாராக இல்லை எனக் கூறப்படுகிறது. மோதிப் பார்ப்பது என இரு தரப்பும் களமிறங்கியுள்ளதால் அடுத்தகட்ட நகர்வுகள் என்னவாக இருக்கும் என அதிமுக தொண்டர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தான் சமீபத்தில், பொதுக்குழு விரைவில் கூட்டப்படும் என்று அறிவித்தார் ஓ.பன்னீர்செல்வம்.

பலன் இருக்குமா?
ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழுவை கூட்டப்போவதாக அறிவித்திருக்கிறார். ஏற்கனவே உள்ள பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பான்மை ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கே இருக்கிறது. தற்போது புதிதாக நிர்வாகிகளை நியமித்து வரும் ஓ.பன்னீர்செல்வம் கூட்டப்போகும் பொதுக்குழுவால் கட்சி ரீதியாகவோ, நீதிமன்றத்திலோ அவருக்கு பெரிய பலன் கிடைக்கப்போவதில்லை எனக் கூறப்படுகிறது. எனினும், பொதுக்குழுவை கூட்டுவதற்குப் பின்னணியில் தந்திரமான கணக்கைப் போட்டிருக்கிறார் ஓபிஎஸ் என்கிறார்கள்.

சின்னம் முடக்கம்?
ஓபிஎஸ் பொதுக்குழுவைக் கூட்டுவதற்குப் பின்னணியில் இருக்கும் ஒரே பிரதான திட்டம், இரட்டை இலை சின்னத்தை யாருக்கும் கிடைக்காமல் முடக்குவதுதான் என்கிறார்கள். அதிமுக சின்னத்தை முடக்குவதற்கான வேலைகளை ஓபிஎஸ் தொடங்கிவிட்டாராம். உச்ச நீதிமன்றத்தில் முடிவு எப்படி வந்தாலும், பொதுக்குழுவைக் கூட்டி, தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களை மீண்டும் சமர்ப்பிக்க திட்டமிட்டிருக்கிறார் ஓபிஎஸ். இதன் மூலம், பொதுக்குழு உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு ஈபிஎஸ்ஸுக்கு என்ற நிலை உடைந்து தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கம் என கணக்கு போட்டிருக்கிறாராம்.

கணக்குகள்
ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த முயற்சிக்கு பாஜக தலைமையும் ஆதரவு அளிக்கும் எனக் கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியை தங்கள் வழிக்குக் கொண்டு வர பாஜக இதைப் பயன்படுத்திக் கொள்ளும். பாஜக, தமிழ்நாட்டில் வலுப்பெற பல்வேறு கணக்குகளில் செயல்பட்டு வருகிறது. அதற்கு, இந்த சின்னம் முடக்கம் உதவக்கூடும் என்கிறார்கள். சின்னம் முடங்கி அதிமுகவுடன் கூட்டணி அமைத்தாலும், தங்களுக்கு பாதிப்பில்லை என பாஜக கருதுவதாகத் தெரிகிறது.

முடங்கினால் ஈபிஎஸ்ஸுக்கு சிக்கல்
இரட்டை இலை சின்னம் முடங்கினால், எடப்பாடி பழனிசாமிக்கு நிச்சயம் பின்னடைவு ஏற்படும். சின்னம் நம் பக்கம் இருக்கும் என்ற எண்ணத்திலேயே பெரும்பாலான நிர்வாகிகள் ஈபிஎஸ் ஆதரவாளர்களாக நின்று கொண்டிருக்கிறார்கள். இரட்டை இலை சின்னம் இல்லையென்றால் எடப்பாடி பழனிசாமி பக்கம் எத்தனை பேர் நிற்பார்கள் என்பது பெரும் கேள்வியாகவே இருக்கிறது. பலர், பாஜகவின் ஆதரவுக் கரம் நீண்டிருக்கும் தன் பக்கம் வருவார்கள் என ஓபிஎஸ் கணக்குப் போட்டிருக்கிறாராம்.

பாஜகவுக்கு லாபம்
அதேநேரம், பாஜக தலைமைக்கும் இதில் லாபம் இல்லாமல் இல்லை என்கிறார்கள். இரட்டை இலை சின்னம் முடங்கினால், எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்து பலர் பாஜகவுக்கும் வரக்கூடும், அதிமுகவில் ஏற்படும் பின்னடைவு, தமிழ்நாட்டில் பாஜக வளரவும் உதவும் என்ற கணக்கு பாஜக தலைமைக்கு இருக்கிறதாம். சின்னத்தை முடக்க ஓபிஎஸ் முயற்சித்தால், அவருக்கு பாஜக நிச்சயம் ஆதரவளிக்கும் என்பது உறுதி என்றும் சொல்கிறார்கள்.

ஆதரவாளர்கள் சொன்ன விஷயம்
ஓபிஎஸ் ஆதரவாளர்களாக இருந்து வந்த மாநில ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் மயிலை மாறன் உள்ளிட்டோர் சமீபத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, அவரது அணியில் இணைந்ததோடு தங்களது பேட்டியில் ஒரு முக்கியமான விஷயத்தையும் குறிப்பிட்டனர். சின்னத்தை முடக்க ஓபிஎஸ் முயற்சித்து வருகிறார். இப்படியே சென்றால் அதிமுக வளராது எனவே ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி வந்து தற்போது எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைந்துள்ளோம் என அவர்கள் கூறியதும் கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications