இடைத்தேர்தல் பரபரப்புக்கிடையே ஃப்ளைட் ஏறிய ஓபிஎஸ்.. குஜராத் பயணம்.. "மாஸ் பிளான்".. ஷாக்கில் ஈபிஎஸ்!
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட இருப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து, கூட்டணிக் கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரிய நிலையில், இன்று திடீரென குஜராத்துக்கு புறப்பட்டுள்ளார். ஓபிஎஸ்ஸின் இந்த அதிரடி மூவ் எடப்பாடி தரப்புக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறும் தமிழ் சங்கத்தின் பொங்கல் விழாவில் பங்கேற்பதற்காக அங்கு செல்லும் ஓ.பன்னீர்செல்வம், முக்கிய பாஜக தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக யாருக்கு ஆதரவளிக்கும் என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ள நிலையில், ஓபிஎஸ்ஸின் குஜராத் பயணம் அரசியல் அரங்கில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
’கிட்டி கண்ணன்’ பொய்யும் புரட்டும்! குழப்பத்திற்கு முழு உருவம் ஓபிஎஸ்! கொந்தளித்த மதுரை ’மாஜி’!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் போட்டியிடுகிறது. அதேபோல, அதிமுக கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி தரப்பு போட்டியிடுவதும் உறுதியாகியுள்ளது. இதற்காக ஈபிஎஸ் தரப்பினர் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஆதரவைக் கோரி வருகின்றனர். அதிமுக போட்டியிட தமாகா, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துவிட்டன.
முக்கிய கட்சிகள் திட்டம்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என அறிவித்துவிட்டார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இடைத்தேர்தலில் நாதக போட்டியிடும் என அறிவித்து விட்டார். அமமுக பொதுச் செயலாளர்டிடிவி தினகரன் வரும் 27-ஆம் தேதி தனது நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளார். தேமுதிக ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெற இருக்கிறது. அதன்பிறகே அக்கட்சியின் முடிவு தெரியவரும்.
ஓபிஎஸ் அறிவிப்பு
இந்நிலையில், சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் நாங்கள் போட்டியிடுகிறோம். எனவே, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எங்களுக்கு முழு உரிமை இருக்கிறது. அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் கோரி 'ஏ' மற்றும் 'பி' படிவத்தில் கையெழுத்திடுவேன். அதில் பழனிசாமி கையெழுத்திடுவது அவரது விருப்பம். அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் பாஜக, பாமக, தமாகா, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்தித்து, ஆதரவு கேட்போ எனத் தெரிவித்திருந்தார்.
பாஜக போட்டியிட்டால் ஆதரவு
இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை என்றால், தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிடுவோம். அதேநேரத்தில், இந்த இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவதாக விருப்பம் தெரிவித்தால், நிச்சயம் ஆதரவளிப்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். ஆனால், இதுவரை பாஜக இந்த இடைத்தேர்தலில் போட்டிடுடுவது பற்றி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
அண்ணாமலையுடன் சந்திப்பு
இந்நிலையில், நேற்று ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரைச் சந்தித்து ஆதரவு கோரினர். அதேசமயம், எடப்பாடி பழனிசாமி தரப்பினரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையைச் சந்தித்து ஆதரவு கோரினர். நேற்று 4 மணியளவில் ஓபிஎஸ் தரப்பினர் அண்ணாமலையைச் சந்தித்த நிலையில், அதற்கு சற்று முன்னதாக ஜெயக்குமார் உள்ளிட்ட ஈபிஎஸ் அணியினர் சந்தித்துப் பேசினர்.
பாஜக யாருக்கு ஆதரவு
ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் தத்தம் அணிகளுக்கு ஆதரவு கோரியுள்ளதால், பாஜக யாருக்கு ஆதரவு அளிக்கும் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் ஒன்றுசேர வேண்டும் என்பதே பாஜக தலைமையின் விருப்பமாக இருப்பதாக கூறப்படும் நிலையில், இந்த விஷயத்தில் என்ன நிலைப்பாட்டை பாஜக தலைமை எடுக்கும் என்பது தெளிவு படுத்தப்படாமலேயே உள்ளது.
அங்கீகாரம்?
இந்த இடைத்தேர்தலில் பாஜக ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரில் யாருக்கு ஆதரவு அளிக்கிறதோ அந்த தரப்பையே பாஜக தலைமை அங்கீகரிப்பதாக அர்த்தமாகும். இதனால், பாஜகவின் முடிவு அரசியல் நோக்கர்களால் உற்றுநோக்கப்படுகிறது. இருவரில் ஒருவரை ஆதரிக்குமா? அல்லது பாஜகவே தனித்துக் களமிறங்குமா? அல்லது ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே சமாதானம் செய்து வைக்க முயலுமா என அரசியல் களம் பரபரத்துக் கிடக்கிறது.
குஜராத் புறப்பட்ட ஓபிஎஸ்
இந்நிலையில் தான் திடீரென குஜராத்துக்கு கிளம்பியுள்ளார் ஓபிஎஸ். அவருடன் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் சென்றுள்ளனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்குச் செல்லும் ஓ.பன்னீர்செல்வம், அங்கு தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெறும் பொங்கல் விழாவில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இந்தப் பயணத்தின்போது முக்கிய பாஜக தலைவர்களை சந்திப்பதுதான் ஓபிஎஸ்ஸின் பிரதான திட்டம் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜக தலைவர்களுடன் சந்திப்பு
நேற்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையைச் சந்தித்து இடைத்தேர்தலில் தங்கள் அணிக்கு ஆதரவு கேட்ட ஓபிஎஸ், இன்று காலையே குஜராத்துக்கு கிளம்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆதரவு விவகாரத்தில், தேசிய தலைமைதான் முடிவெடுக்கும் என்பதால், நேரடியாக அங்கேயே செல்ல ஓபிஎஸ் முடிவெடுத்ததாகவும், குஜராத்தில் அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓபிஎஸ்ஸின் இந்த அதிரடி மூவ் எடப்பாடி தரப்புக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.