அவ்வளவு நம்பினோம்.. கடைசியில் பாஜக கைவிட்டாலும் திமுக வந்திடுச்சே.. புது தெம்பில் ஓபிஎஸ் டீம்!
சென்னை : பாஜக தங்களைக் கைவிட்ட நிலையிலும், திமுக தங்களுக்கு ஆதரவாக இருப்பதாக உற்சாகமடைந்துள்ளனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவியை காலி செய்துவிட்டு, இடைக்கால பொதுச் செயலாளராகி உள்ளார் எடப்பாடி பழனிசாமி. ஓபிஎஸ் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் 45 பேரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளார் எடப்பாடி.
அதிமுகவைக் கைப்பற்ற தனக்கு பாஜக உதவும் என நம்பி இருந்தார் ஓபிஎஸ். ஆனால், இந்த விஷயத்தில் பாஜக பெரிதாக கைகொடுக்காதது ஓபிஎஸ் தரப்புக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

அதிமுக பிரச்சனை
அதிமுகவில் நிலவி வரும் ஓபிஎஸ்-ஈபிஎஸ் மோதலைத் தொடர்ந்து, கட்சி தனது கட்டுப்பாட்டில் இருந்து விலகாமல் இருப்பதற்காக டெல்லி பாஜகவின் உதவியை எதிர்பார்த்தார் ஓ.பன்னீர்செல்வம். டெல்லிக்கே சென்று முகாமிட்டு பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரை சந்திக்கவும் முயன்றார். ஆனால் வேறொரு முக்கிய புள்ளியிடம் மட்டுமே பேசமுடிந்தது. ஓபிஎஸ்ஸுக்கு வெளிப்படையான ஆதரவைக் காட்டுவதில் பாஜக தயங்கியது வெட்டவெளிச்சமானது. அதே நேரம், பாஜக தலைமை சில உத்தரவாதங்களை ஓபிஎஸ்ஸுக்கு கொடுத்துள்ளதாக கூறப்பட்டது.

தமிழக பாஜக
தமிழக பாஜகவை பொறுத்தவரை, அதிமுக விவகாரத்தில் தலையிட மாட்டோம் என்றே கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், அவர்களுமே, கட்சியை தனது பெரும்பான்மையான கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி தரப்பினருடனே இணக்கமாக இருப்பது போன்ற சூழல்கள் இருக்கின்றன. பாஜக ஜனாதிபதி வேட்பாளரின் சென்னை வருகையின்போது எடப்பாடி பழனிசாமிக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதும் கவனிக்கத்தக்கது.

ஒருங்கிணைப்பாளர்
இதற்கிடையே, அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகிவிட்டதாகக் கூறி வரும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர், ஒருங்கிணைப்பாளர் பதவிகளை மொத்தமாக நீக்கி, பொதுச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளைக் கொண்டு வந்துள்ளனர். ஆனால், ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகவில்லை என்று கூறி ஈபிஎஸ் ஆதரவாளர்களை நீக்கி வருகிறார் ஓபிஎஸ். மேலும், இதுதொடர்பாக இருதரப்பினரும் தேர்தல் ஆணையத்திலும் முட்டி மோதி வருகின்றனர். இதனால், யார் சொல்வது சட்டப்பூர்வமாகச் செல்லும் என்பதில் இன்னும் குழப்பங்கள் நீடித்து வருகின்றன.

அண்ணாமலை
இந்நிலையில், கொரோனா அறிகுறிகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனை சென்ற ஓ.பன்னீர்செல்வம் விரைவில் மீண்டு வர பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்தினார். அவரது பதிவில், "முன்னாள் முதல்வர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்ற செய்தியை அறிந்தேன். அவர் பூரண நலம் பெற்று மக்கள் பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்" எனத் தெரிவித்திருந்தார்.

எல்.முருகன்
அதேபோல பாஜகவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும், "சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் முதல்வருமான பன்னீர்செல்வம் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்தேன். அவர் பூரண நலம் பெற்று பொதுப்பணியை முழு உத்வேகத்துடன் விரைவில் தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்றே தெரிவித்தார்.

ஸ்டாலின் ஒரே போடு
பாஜக தலைவர்கள் ஓ.பி.எஸ்ஸை ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிடாத நிலையில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், "கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் விரைந்து முழுமையாக நலம்பெற விழைகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

பாஜகவால் ஏமாற்றம்
அதிமுக குழப்பங்களுக்கு மத்தியில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று ஓ.பன்னீர்செல்வத்தை அழைப்பதை பாஜக தலைவர்கள் நிறுத்திக் கொண்டுள்ளனர். இதன்மூலம், ஓபிஎஸ் தரப்பு சொல்வதை மறுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பு சொல்வதை ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. பாஜக தலைவர்களின் செயலால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஏமாற்றமடைந்தனர்.
Recommended Video

திமுகவால் உற்சாகம்
ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று ஓ.பன்னீர்செல்வத்தை குறிப்பிட்டுள்ளார். ஓபிஎஸ்ஸுக்கு பின்னணியில் திமுக இருக்கிறது என்று ஈபிஎஸ் தரப்பினர் குற்றம்சாட்டி வரும் நிலையில், ஸ்டாலினின் இந்த விளிப்பு அவர்களை சீண்டியுள்ளது. அதேநேரம், பாஜக கைவிட்டாலும் கூட திமுக, தங்களுக்கு ஆதரவாகக் கை கொடுத்திருக்கிறது என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் புதுதெம்பு கிடைத்ததுபோல் உற்சாகமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications