பாஜகதான் லேட்டஸ்ட்.. அது ஏன் இன்னோவா கார்கள்.. தமிழக அரசியலின் அங்கமாக மாறியது எப்படி?
சென்னை: தமிழக அரசியல் மற்றும் இன்னோவா கார் ஆகிய இரண்டும் பிரிக்க முடியாத அங்கங்களாக மாறிப் போய்விட்டன. அதிமுகவில் ஜெயலலிதா ஆரம்பித்து வைத்த இந்த கலாச்சாரத்தை, பாஜகவில் எல்.முருகன் வரை தொடர்ந்து கொண்டுள்ளனர்.
அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் என்றாலே அம்பாசிட்டர் கார் என்று இருந்த நிலைமை, அப்படியே மாறிப்போய், இப்போது இன்னோவா கார்கள் அந்த இடத்தை பிடித்துள்ளன.
2004ல் தேசிய அளவில் டொயோட்டா நிறுவன கார்களை அரசியல்வாதிகள் மத்தியில் ஃபேமஸ் செய்தவர் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங். தனது அம்பாசிட்டர் காரை மாற்றி டொயோட்டோ செடான் வகை காரை வாங்கினார். ஆனால் தமிழகத்தில் டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா எஸ்யூவி வகை காரை அரசியலின் அங்கமாக மாற்றியவர் ஜெயலலிதா.

நாஞ்சில் சம்பத்திற்கு ஜெயலலிதா வழங்கிய இன்னோவா
2012ம் ஆண்டு, நாஞ்சில் சம்பத்திற்கு இன்னோவா காரை தனது கையாலே பரிசளித்து மகிழ்ந்தார் ஜெயலலிதா. மதிமுகவிலிருந்து அதிமுகவுக்கு வந்ததற்காக நாஞ்சில் சம்பத்திற்கு இந்த பரிசு வழங்கப்பட்டது. எனவே ஒரு கட்டத்தில் இன்னோவா சம்பத் என்றே அவர் பெயர் தமிழக அரசியலில் நிலைத்துப் போய்விட்டது. சிறந்த தமிழ் பேச்சாளர் என்பதால், அதிமுகவுக்கு பலம் சேர்க்க இன்னோவா காரை சம்பத்திற்கு கொடுத்திருந்தார் ஜெயலலிதா. ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அந்த காரை நாஞ்சில் சம்பத் திருப்பி கொடுத்து விட்டது வேறு கதை.

அமைச்சர்களுக்கு இன்னோவா
2016ம் ஆண்டு, தொடர்ச்சியாக 2வது முறையாக ஆட்சியை பிடித்தது அதிமுக. அப்போது, 32 அமைச்சர்களுக்கும் இன்னோவா கிறிஸ்டா வகை கார்கள் அரசால் வழங்கப்பட்டது. அரசுக்கு மொத்த செலவு சுமார் 8 கோடியானது. அமைச்சர்கள் அனைவருமே யூனிபார்மாக இன்னோவா கிறிஸ்டா காரில் வலம் வந்தனர்.

பாஜக அரசியல்
இதோ இப்போது, 2021 சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட 20 இடங்களில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு பரிசாக வெற்றியை வசமாக்கிய மாவட்டச் செயலாளர்களுக்கு இன்னோவா கார் பரிசளித்தார் கட்சித் தலைவராக இருந்த இப்போதைய மத்திய இணையமைச்சர் எல்.முருகன். கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவை, ஈரோடு, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பாஜக தலைவர்களுக்கும் இன்னோவா கார் பரிசாக வழங்கப்பட்டது. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கார்களை வழங்கியுள்ளார்.

எளிமையானவர்களிடமும் இன்னோவா
நாகர்கோவில் பாஜக எம்எல்ஏ காந்தி, மிகவும் எளிமையானவராக அறியப்படுபவர். செருப்பு கூட அணிவதில்லை. ஆனால், அவர் இன்னோவா காரில் சட்டசபை வந்தது, பிற கட்சியினரால் விமர்சனம் செய்யப்பட்டது. அவ்வளவு ஏன்.. எளிமைக்கு பெயர் பெற்ற கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இன்னோவா கார் அரசியலுக்கு விதி விலக்கு இல்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கென சொந்தமாக வாகனம் வாங்கப்படுவது காலம் காலமாக உள்ள நடைமுறையாகும். எப்போதும் எளிய முறையில் விலை குறைவான வாகனங்களே வாங்கப்படும், பின்னர் ஒரு கட்டத்தில் அவை விற்கப்பட்டு புதிய வாகனங்கள் வாங்கப்படும். உதாரணத்துக்கு பொலிரோ போன்ற அடக்கமான வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், டொயோட்டா நிறுவனத்தயாரிப்பான இன்னோவா கிரிஸ்டா கார் வாங்கப்பட்டு கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசனுக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. இது விமர்சனங்களையும் ஈட்டியது.

டொயோட்டாவை தேர்ந்தெடுத்த கருணாநிதி, ஜெயலலிதா
இந்த விஷயத்தில் ஒரு உபரித் தகவல் என்னவென்றால், கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரு முன்னாள் முதல்வர்களும் டொயோட்டா நிறுவனத்தின் கார்களைத்தான் பயன்படுத்தினர். தலைவர்கள் அல்லவா, அதனால் இன்னோவாவில் பயணிக்காமல் அதை விட உயர்ந்த ரக கார்களில் பயணித்தனர். டொயட்டோ லேண்ட் க்ரூஸர் ப்ராடோ காரைத்தான் ஜெயலலிதா பயன்படுத்தினார். டொயோட்டா ஆல்பார்ட் ரக கார்கள் மிகவும் சொகுசானவை. அதைத்தான் கருணாநிதி பயன்படுத்தினார்.

இன்னோவா ஏன்
அம்பாசிட்டருக்கு பிறகு, டொயோட்டோ அந்த இடத்தை பிடித்ததற்கு ஒரு பின்னணி இருக்கிறது. இரு நிறுவனங்களுமே, வலிமையான பாடி பில்ட் கார்களை உற்பத்தி செய்வதில் பெயர் பெற்றவை. அரசியல்வாதிகள் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் வலுவான உடலமைப்பு கொண்ட வாகன பிராண்ட்டுகளை விரும்புகிறார்கள். அம்பாசிட்டர் போலவே, ஜப்பானைச் சேர்ந்த டொயோட்டா நிறுவனங்களின் இன்ஜின்களும் நீண்ட காலம் உழைக்க கூடியவை. எனவே அம்பாசிட்டர் காருக்கு பிறகு, அவர்கள் கவனம் டொயோட்டோ மீது திரும்பியுள்ளது. உயரமும், நீளமும் கொண்ட கார் என்பதால், தங்களை தனித்துக் காண்பிக்க, இன்னோவா அவர்கள் முதல் சாய்சாக உள்ளது.












Click it and Unblock the Notifications