அழகிரி செய்த காரியத்தை பார்த்தீங்களா.. காம்ரேடுகளுக்கே கொஞ்சம் ஷாக்தான்.. அசந்துபோன நாகர்கோவில்!
அழகிரி நாகர்கோவிலில் கம்யூனிஸ்ட் கட்சிக்காக பிரச்சாரம் செய்துள்ளார்
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கேஎஸ் அழகிரி பற்றிதான், அரசியல் களத்தில் ஒரே பேச்சாக இருக்கிறது.. இப்படியும் ஒரு தலைவரா? என்று மூக்கின் மேல் எல்லாரும் விரலை வைத்து கொண்டிருக்கிறார்களாம்..!
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் அழகிரியை பொறுத்தவரை கட்சியில் சீனியர்.. 85-ம் வருட காலகட்டத்திலேயே ப.சிதம்பரத்துக்கு நெருக்கமானவர்.. தமிழ் மாநில காங்கிரஸ் உருவாவதில், மூப்பனாருக்கு பெரும் உதவியாக இருந்தவர்களில் கே.எஸ். அழகிரியும் ஒருவர்.
இவர் எம்எல்ஏவாக பதவி வகித்த காலங்களில், சட்டமன்றத்தில் மிக அருமையாக பேசுவார்.. எந்த கருத்தையும் அழுத்தமாகவும், ஆணித்தரமாகவும் எடுத்து வைப்பார்.. இதை மறைந்த திமுக தலைவர் கருணாநிதியே பலமுறை பாராட்டி இருக்கிறார்.
சறுக்கல்கள்
குறிப்பாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு சம்பந்தமாக, அழகிரி சட்டமன்றத்தில் பேசிய பேச்சுக்கள், அந்த வழக்குக்கே வலுசேர்க்கும் வகையில் அன்றைய தினம் இருந்ததை மறுக்க முடியாது.. இந்த கருத்துக்கள், ஒரு நூலாகவே வெளிவந்துள்ளது.. இப்போதும் திமுக கூட்டணியில் அங்கம் வகித்தாலும், எத்தனையோ சறுக்கல்களை, அதிருப்திகளை அழகிரி தலைமையிலான மேலிடம் சந்தித்து கொண்டுதானிருக்கிறது.. இருந்தாலும் அனைத்தையும் சமாளித்து கொண்டு, திமுக ஒதுக்கும் சீட்களை பெற்றுக்கொண்டு, கூட்டணிக்கு பலம் சேர்த்து கொண்டிருக்கிறார் கேஎஸ் அழகிரி.
விமர்சனம்
கூட்டணிக்கு பலம் சேர்க்கலாம், அது தவறில்லைதான்.. கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு பாடுபடலாம், அதுவும் தவறில்லைதான்.. ஆனால், நாகர்கோயிலில் அழகிரி செய்த காரியத்தை பார்த்து, கதர் தொண்டர்கள் மலைத்து போய் உள்ளனர்.. அழகிரியை விமர்சிக்கவும் முடியாமல், வெளிப்படையாக பேசவும் முடியாமல் உள்ளுக்குள்ளேயே அழகிரி பற்றி ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருக்கிறார்களாம்.. விஷயம் இதுதான்..!
காமரேடுகள்
சமீபத்தில் நாகர்கோவிலில் பிரச்சாரம் செய்தார் கே.எஸ்.அழகிரி... நாகர்கோவில் மாநகராட்சியில் மொத்தம் 52 வார்டுகள் இருக்கின்றன. இதில் காங்கிரஸுக்கு 13 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், திமுக, காங்கிரஸ் கூட்டணியில் உள்ள சிபிஎம் கட்சிக்கு போதிய பிரதிநிதித்துவம் தராததால் நாகர்கோவில் மாநகராட்சியில் தனித்து போட்டியிடுகிறது... நாகர்கோவில் மாநகராட்சி மட்டுமல்லாமல் குளித்துறை நகராட்சியிலும் தனித்து களமிறங்கியுள்ளனர் தோழர்கள்.
தோழர்கள்
இதனால், நாகர்கோவில் மாநகராட்சி வார்டுகளில் திமுக-காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து சிபிஎம் கட்சி 9 வார்டுகளில் தனித்து வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. அவர்களுக்காக வாக்கு சேகரித்து வருகிறார்கள் மார்க்சிஸ்ட் தோழர்கள்... அந்த வகையில், 2 மற்றும் 11 ஆகிய இரண்டு வார்டுகளில் நேரடியாக காங்கிரஸ் வேட்பாளரையும் மீதியுள்ள 7 வார்டுகளில் திமுக வேட்பாளர்களையும் எதிர்த்து சிபிஎம் போட்டியிடுகிறது.
திமுக
இந்த நிலையில், நாகர்கோவிலில் பிரச்சாரம் செய்த கேஎஸ் அழகிரி, காங்கிரஸுக்கும் திமுகவுக்கும் வாக்கு சேகரித்தது மட்டுமல்லாமல் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக சிபிஎம் கட்சி போட்டியிடும் குறிப்பிட்ட 9 வார்டுகளில் பிரச்சாரம் செய்த அவர், சிபிஎம் கட்சியின் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்துக்கும் வாக்கு கேட்டார். சிபிஎம் வேட்பாளருக்கும் வாக்கு கேட்டதால் காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிர்ச்சியடைந்து விட்டனர்.
கை சின்னம்
ஒரே வார்டில் கை சின்னத்துக்கும், அரிவாள் சுத்தியல் சின்னத்துக்கும் எப்படி தலைவரே ஓட்டுப் போட முடியும் என அழகிரியிடமே வேட்பாளர்கள் கேட்டுள்ளனர். இதற்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை. இதுதான் சத்தியமூர்த்திபவனில் உள்ள கதர் கோஷ்டிகள் சொல்லி சொல்லி காமடி செய்து வருகின்றனர்" என்று சிரிக்காமல் சொல்கிறார்களாம் காங்கிரஸ் நிர்வாகிகள்.
ஹைட்ரஜன்
அழகிரி ஏன் இப்படி பிரச்சாரம் செய்தார் என்று தெரியவில்லை.. ஆனால், இவர் ஒரு நாளிதழுக்கு தந்த பேட்டியில் சொன்னது நினைவுக்கு வருகிறது.. "55 வருஷமாக அரசியலில் இருக்கேன்.. கூட்டணி பேச்சுவார்த்தை என்றாலே அதில், மகிழ்ச்சியும் நெருடலும் இருக்கத்தான் செய்யும்.. 'இரவு - பகல், மகிழ்ச்சி - வருத்தம், இப்படி இல்லையா? அதுமாதிரிதான்.. ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் இணைந்து எப்படி தண்ணீராக இருக்கிறதோ, அதேபோன்று இணைந்த விஷயமாகவே இருக்கின்ற இதை, நான் ஒரு பெரிய விஷயமாக எடுத்து கொள்வதில்லை" என்று கூறியிருந்தார் "பெருந்தன்மை" அழகிரி..!