2 நாளாச்சு.. தமிழக சுகாதாரத்துறையின் மாலை நேர பிரஸ் மீட் நடக்கவில்லை கவனித்தீர்களா? இனி இப்படித்தான்
சென்னை: கடந்த இரு நாட்களாக தமிழக சுகாதாரத் துறையின் மாலை நேர பிரஸ்மீட்டில் ஒரு வித்தியாசத்தை பார்த்திருப்பீர்கள். என்ன என்கிறீர்களா? பிரஸ் மீட்டே, நடக்கவில்லை என்பதுதான் அந்த வித்தியாசம்.
Recommended Video
கொரோனா வைரஸ் பாதிப்பு ஆரம்பித்த சில நாட்கள் தொடங்கி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாலை நேரத்தில் செய்தியாளர்களை சந்தித்து அன்றைய தின நிலவரங்களை எடுத்துச் சொன்னார்.
இதன் பிறகு என்ன ஆயிற்றோ தெரியவில்லை. திடீரென அவர் வருவதை நிறுத்திக்கொண்டார். இது தொடர்பாக பல்வேறு யூகங்கள் றெக்கைகட்டி பறந்தன.
கொரோனா நம்மை துரத்திக் கொண்டே இருக்கும்.. உலகில் இருந்து இப்போதைக்கு போகாது.. "ஹு" தலைவர் வார்னிங்!
பீலா ராஜேஷ்
விஜயபாஸ்கருக்கு பதிலாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். சில நாட்களிலேயே அவருக்கென்று பெண்கள் தரப்பில் ஒரு ரசிகை வட்டாரமே உருவாகிவிட்டது. அவரது பேட்டி ஸ்டைல், உடை உள்ளிட்டவை பெண்கள் மத்தியில் பேசு பொருளாக மாறின. அவரது பிரஸ்மீட் லாவகம் பற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூட வெளிப்படையாக பாராட்டு தெரிவித்தார்.
சண்முகம்
இதையடுத்து, சில நாட்களில் தலைமைச் செயலாளர் சண்முகம் அடுத்தடுத்து இரு நாட்கள் பிரஸ்மீட் செய்தார். அதன்பிறகு பீலா ராஜேஷ் மறுபடி வந்தார். இதன் பிறகு பெரிய திருப்பமாக இரண்டு வாரங்களுக்கும் மேலாக செய்தியாளர்களிடம் மாலைநேர சந்திப்பு நிகழ்த்தாத, விஜயபாஸ்கர் மீண்டும் என்ட்ரி கொடுத்தார்.
செய்திக்குறிப்பு
எது எப்படியோ.. யாரோ ஒருவரால், செய்தியாளர் சந்திப்பு மட்டும் நடந்துகொண்டிருந்தது. ஆனால் நேற்று மற்றும் நேற்று முன்தினம் செய்தியாளர் சந்திப்பு நடக்கவில்லை. செய்திக் குறிப்பு மட்டும் ஊடகங்களில் வெளியிடப்பட்டு வருகிறது. இதற்கு முக்கியமான காரணம், கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதுதான் என்று சொல்கிறார்கள்.
பரவிய கொரோனா
செய்தியாளர் சந்திப்பு நடைபெற்ற கட்டிடத்திலேயே ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது இரண்டு வாரங்களுக்கு முன்பே கண்டறியப்பட்டது. ஆனால் இதன் பிறகும் செய்தியாளர் சந்திப்பு நடந்து கொண்டிருந்த நிலையில்தான் சுமார் 30 பத்திரிக்கையாளர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு கண்டுபிடிக்கப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
புறக்கணிப்பு
இரண்டு நாட்களுக்கு முன்பாகவே விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்திக்க அழைத்தபோதே, ஊடகத்தினர் தரப்பில் ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. செய்தியாளர் சந்திப்பை தவிர்த்துவிட்டு நீங்கள் வீடியோ வேண்டுமானால் அனுப்புங்கள் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் விஜயபாஸ்கர் நிருபர்களை சந்தித்தார். இதையடுத்து, ஒரு 24 மணி நேர செய்தி சேனல், அந்த செய்தியாளர் சந்திப்பை புறக்கணித்தது. நேரலை மட்டுமல்ல, அவர் கூறிய விவரங்களை கூட செய்தியாக வெளியிடவில்லை. ஊடகத்தினரின் மனக்குமுறலை அடுத்து நேற்று முதல் செய்தியாளர் சந்திப்பு நடத்தாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. இனிமேல், கொரோனா வைரஸ் பிரச்சினை ஓயும் வரை, மாலை நேர செய்தியாளர் சந்திப்பு நடைபெறாது என்று அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கு பதிலாக ஊடகங்களுக்கு பிரஸ் ரிலீஸ் அனுப்பி வைக்கப்படும்.