வேட்பாளர் பட்டியல்... முந்திக்கொண்ட அதிமுக... திகைத்த பாஜக... யார் எங்கு போட்டி..?
சென்னை: 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து கூட்டணிக் கட்சியான பாஜகவை திக்குமுக்காட வைத்துள்ளது அதிமுக தலைமை.
நாட்களை கடத்தினால் கூட்டணியில் இட ஒதுக்கீடு தொடர்பாக தங்களுக்கு நிர்பந்தம் எதுவும் ஏற்படுமோ என்ற ஐயத்தால் வேட்பாளர் பட்டியல் வெளியீட்டில் வேகம் காட்டியுள்ளது அதிமுக தலைமை.
இதனிடையே கூட்டணி இடப் பங்கீடு குறித்த விவகாரத்தில் இந்தமுறை மாவட்டச் செயலாளர்களின் கை அதிமுகவில் ஓங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
சீச்சீ.. நிர்வாணமாக பெண்கள் முன்பு நின்ற போலீஸ்காரர்.. அதிர்ச்சி செயலால் கொந்தளித்த மக்கள்
உள்ளாட்சித் தேர்தல்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, ஆகிய 9 மாவட்டங்களில் அக்டோபர் 4 மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து பாமக வெளியேறிய நிலையில் பாஜக மட்டும் கூட்டணியை தொடர்கிறது. இதையடுத்து 9 மாவட்டங்களில் யார் யார் எங்கெங்கு போட்டியிடுவது என்பது குறித்து அதிமுகவுடன் பேச பாஜக சார்பில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
பொறுப்பாளர்கள்
அதன்படி நயினார் நாகேந்திரனும், சசிகலா புஷ்பாவும் நெல்லை மாவட்டத்திற்கும் பேராசிரியர் ஸ்ரீனிவாசனும் காந்தி எம்.எல்.ஏ.வும் தென்காசி மாவட்டத்திற்கும் பாஜக பொறுப்பாளர்களாக உள்ளனர். வி.பி.துரைசாமியும், சரஸ்வதி எம்.எல்.ஏ.வும் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கும், கருப்பு முருகானந்தம் விழுப்புரம் மாவட்டத்துக்கும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், கார்த்தியாயினி, வினோஜ் பி செல்வம், நரசிம்மன் ஆகியோர் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட பாஜக பொறுப்பாளர்களாக உள்ளனர்.
இடப்பகிர்வு
தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு வானதி சீனிவாசன், கு.க.செல்வம், கராத்தே தியாகராஜன், கரு.நாகராஜன் ஆகியோர் பாஜக பொறுப்பாளர்களாக உள்ளனர். மேற்கண்ட இவர்கள் தங்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ள மாவட்டங்களின் அதிமுக செயலாளர்களுடன் கூட்டணி இட ஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஒரு சில மாவட்டங்களில் உள்ளூர் புரிந்துணர்வு அட்டிபடையில் இடம் பகிர்ந்துகொள்ளப்பட்டன.
திகைப்பு
ஒரு சில மாவட்டங்களில் கேட்ட இடங்கள் கிடைக்காமல் பாஜக திகைப்புக்கும் உள்ளாயின. தமிழகம் முழுவதும் மூன்றாயிரத்து 67 இடங்களுக்கு தேர்தல் நடைபெறும் நிலையில், அதில் 25% இடங்களையாவது பாஜக எதிர்பார்த்தது. இதனை நாசூக்காக கையாண்ட அதிமுக தலைமை, பாஜக தேர்தல் பொறுப்பாளர்களிடம் பதமாக பேசி இடப்பங்கீட்டை சுமூகமாக முடிக்குமாறு மாவட்டச் செயலாளருக்கு அறிவுறுத்தியிருந்தது.
தாமதமின்றி
அதன்படி சீட் ஷேரிங் பேச வந்த பாஜக பொறுப்பாளர்களுக்கு அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் புள்ளியியல் விவரத்தை எடுத்துக்கூறி ஒரு வழியாக இடப்பங்கீட்டை 80% நிறைவு செய்துவிட்டனர். இதையடுத்து வேட்பாளர் பட்டியலை தாமதப்படுத்தினால் அது மேலும் தங்களுக்கு அழுத்தத்தை கொடுக்கும் எனக் கருதிய அதிமுக தலைமை, அதிரடியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. அந்த பட்டியலில் பாஜக போட்டியிடுவதற்கு மாவட்ட அளவில் பேசி பகிர்ந்துகொள்ளப்பட்ட இடங்களுக்கு மட்டும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.