பொது சிவில் சட்டம் VS முஸ்லிம் என்று குறுக்குவது தவறு! பிற மதங்களிலும் பல சட்டங்கள்! முழு விளக்கம்
சென்னை: "ஒரே நாட்டில் இரு வேறு வகையான சட்டங்கள் எப்படி இருக்க முடியும்.." என்று பிரதமர் நரேந்திர மோடி, ஜூன் மாதம் 27ஆம் தேதி, மத்திய பிரதேச மாநில தலைநகரம் போபாலில், பாஜக கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில், பேசினாலும் பேசினார், பொது சிவில் சட்டம் தொடர்பான விவாதங்கள் நாடு முழுக்க அனல் பறக்க தொடங்கி இருக்கின்றன.
முஸ்லிம் மதப் பிரிவினருக்கு எதிரானது இந்த சட்டம் என்று ஒரு தரப்பும், ஆம் அப்படித்தான் அவர்களை ஒரே சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று பாஜக ஆதரவு தரப்பும், மாறி மாறி பேசத் தொடங்கி இருக்கின்றன. ஆனால் உண்மை அது கிடையாது. ஒரு குறிப்பிட்ட மதத்தினரை "தேசிய நீரோட்டத்துக்குள்" கொண்டு வருவதற்கு இந்த சட்டம் பயன்படும் என்று அமைக்கப்படும் பிம்பங்கள் போலியானவை என்பதே கள யதார்த்தம்.பொது சிவில் சட்டம் என்றால் என்ன? என்ற அடிப்படை தெரிந்தால் இந்த குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும். இதோ ஒரு சுருக்கமான பார்வை..

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு 2014 ஆம் ஆண்டு பதவியேற்ற பிறகு பொது சிவில் சட்டம் நோக்கி தனது பார்வையை திருப்பியது. உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பல்பீர் சிங் சவுகான் தலைமையில், 2016 ஆம் ஆண்டு 21 வது சட்ட கமிஷன் அமைக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக அக்கறை எடுத்து இந்த கமிஷனை அமைத்தார் என்பார்கள். தொடர்ந்து இரண்டு ஆண்டு காலம் மிக நீண்ட ஆய்வுகளை மேற்கொண்ட சட்ட கமிஷன், 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது (21st law commission report on ucc). அதில், "தற்போதைய நிலையில் இந்திய நாட்டுக்கு பொது சிவில் சட்டம் அவசியமற்றது, விரும்பத்தக்கது அல்ல" என்று தெள்ளத் தெளிவாக குறிப்பிடப்பட்டது.
22வது சட்ட கமிஷன்: இது தொடர்பாக எந்த ஒரு முடிவையும் எடுக்காத மத்திய அரசு, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரித்து ராஜ் அவஸ்தி தலைமையில் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி, 22 வது சட்ட கமிஷனை அமைத்தது. இந்த கமிஷன் பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும். இந்த கமிஷன் கடந்த மாதம் அதாவது ஜூன் மாதம், 14ஆம் தேதி பொது சிவில் சட்டம் தொடர்பாக பொதுமக்களுக்கு ஒரு கோரிக்கையை விடுத்தது. அதன்படி மக்கள் தங்கள் கருத்துக்களை ஜூலை 13ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. இதுவரை சுமார் 46 லட்சம் பேர் பொது சிவில் சட்டம் தொடர்பாக தங்கள் கருத்துக்களை பதிவு செய்து இருக்கிறார்கள். ஒரு பக்கம் கருத்து கேட்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே பிரதமர் நரேந்திர மோடி, "ஒரே நாட்டில் இரு வேறு சட்டங்கள் இருக்க முடியாது.." என்று தேர்தலை எதிர்நோக்கியுள்ள மத்திய பிரதேசத்தில் நின்றபடி கூறியதுதான் விவாதத்துக்கான ஆரம்ப புள்ளியாகியுள்ளது.
இருவகை இல்லை: மோடி கூறியது போல ஒரே நாட்டில் இரு வகை சட்டங்கள் இருக்கிறதா என்றால், "இல்லை" என்பதே விடை. ஆம்.. சரியாக சொல்லப்போனால், இந்தியாவில் பல்வேறு வகைப்பட்ட சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டு கொண்டு இருக்கின்றன. அதை இருவகை என சுருக்குவதே தவறானதுதான். முஸ்லிம்கள் மட்டுமல்ல, வேறு பல, இனம் மற்றும் மத பிரிவினர்தான் பொது சிவில் சட்டம் தொடர்பாக அதிகம் அறிந்து வைத்திருக்க வேண்டியவர்கள்.

அரசியல் சாசனம்: இந்திய அரசியல் சாசனத்தின் சட்டப் பிரிவு 44ல் பொது சிவில் சட்டம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவான அதாவது மதம் சாராத பல்வேறு சமூகச் செயல்களுக்கு, அதிலும் குறிப்பாக இரு நபரிடையே ஒப்பந்தங்கள், சொத்துப் பரிமாற்றத்துக்கான சட்டங்கள், பணப் பரிமாற்ற ஆவணங்கள், கருவிகள் குறித்த சட்டங்களை இயற்றுவதற்கான அதிகாரத்தை இந்த பிரிவு வழங்குகிறது. மத வழக்கங்களுக்கானதல்ல. முஸ்லீம்கள் மட்டும் இல்லை, பல இனங்கள், பல மதங்களில் பல்வேறு வகையான தனிநபர் சட்டங்கள் பின்பற்றப்படுகின்றன.
இந்து திருமண சட்டம்: இந்துக்கள், பௌத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள் ஆகியோர், "1955ஆம் ஆண்டு இந்து திருமண சட்டத்தை" பின்பற்றி வருகிறார்கள். இந்த சட்டத்தின் படிதான் விவாகரத்துக்கு விண்ணப்பிக்க முடியும். இஸ்லாமியர்கள் இந்த விஷயத்தில் வேறுவகை நடைமுறையை பின்பற்றுகிறார்கள். "1939ஆம் ஆண்டு முஸ்லிம்கள் திருமணச் சட்டத்தின் கீழ்" இது வரைமுறை செய்யப்பட்டிருக்கிறது. அதிலும் கூட ஷியா மற்றும் சன்னி பிரிவினர் வெவ்வேறு வகையான விவாகரத்து முறை உள்ளது.
விவாகரத்து: சன்னி பிரிவு சட்டப்படி, வாய்மொழியாகவோ அல்லது எழுத்துப்பூர்வமாகவோ விவாகரத்து கொடுக்க முடியும். அதேநேரம், ஷியா பிரிவு நடைமுறைப்படி, இரண்டு சாட்சியங்களுடன் வாய்மொழியாக விவாகரத்து கொடுக்க வேண்டும் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது. அதே நேரம், உடனடியாக மூன்று தலாக் சொல்லி விவாகரத்து செய்ய முடியாது. ஏனென்றால் உச்ச நீதிமன்றம் இதற்கு தடை விதித்து இருக்கிறது.
கிறிஸ்தவ திருமண சட்டம்: "1869ஆம் ஆண்டு கிறிஸ்தவ திருமண சட்டம்" 2001 ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது. இதன்படிதான், விவாகரத்து உள்ளிட்ட விஷயங்கள் வரைமுறை செய்யப்பட்டிருக்கின்றன. பார்சி இன மக்களுக்கு தனிப்பட்ட திருமண மற்றும் விவாகரத்து நடைமுறை சட்டம் உள்ளது. "பார்சி திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் 1936" இதை கட்டுப்படுத்துகிறது. மூன்று வழிமுறைகளின் படிதான் விவாகரத்து பெற முடியும் என்று அந்த சட்டம் வரையறை செய்துள்ளது.
பார்சி விவாகரத்து: திருமணத்தின் போது அல்லது விவாகரத்துக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும் போது, வாழ்க்கை துணைவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருத்தல், திருமணத்தின்போது மனைவி கர்ப்பமாக இருந்திருப்பது ஆகியவை விவாகரத்துக்கான முதல் இரண்டு காரணங்களாக சமர்ப்பிக்கப்படலாம். மூன்றாவது காரணத்தை, திருமணம் ஆகி இரண்டு வருடங்களுக்கு பிறகுதான் கோர முடியும். அதாவது, திருமணமான முதல் இரண்டு வருடங்களில் கணவன் மற்றும் மனைவியிடையே உடல் உறவு இல்லை என்றால் அதே காரணம் காட்டி விவாகரத்துக்கு விண்ணப்பிக்க முடியும்.எனவே, இந்துக்களுக்கு மற்ற மதத்தினருக்கும் ஒரேவகை சட்டம் இருப்பதை போலவும், இஸ்லாமியர்கள் மட்டும், தனி திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தை பின்பற்றுவது போலவும் பரப்பப்படும் தகவல்கள் அறியாமையாலன்றி சட்டத்திற்கு உட்பட்டது அல்ல என்பது தெளிவாகிறது.

முஸ்லிம் பலதார திருமணம்: பாஜக ஆதரவாளர்களால் முன்வைக்கப்படும் மற்றொரு விமர்சனம் இஸ்லாமியர்கள் மத்தியில் அதிக பெண்களை திருமணம் செய்யும் போக்கு இருக்கிறது என்பாகும். எனவே இதற்கு கடிவாளம் போடுவதற்கு பொது சிவில் சட்டம் உதவும் என்கிறார்கள் அவர்கள். ஆனால் பலதார மணம் என்பது இந்தியாவில் பழங்குடியினர் மக்களிடம் தான் அதிகபட்சமாக இருக்கிறது. 21 வது சட்ட கமிஷன் இதை தெளிவுபடுத்தி இருக்கிறது. இந்தியாவில் பலதார மணம் என்பது பழங்குடியின மக்களிடம் 15.25% என்ற அளவிலும் பவுத்தர்களிடம் 9.7 சதவீதம், சமணர்களிடம் 6.72 சதவீதம் எனவும், இந்துக்களிடம் 5.8 சதவீதம் எனவும், முஸ்லிம்களிடம் 5.7 சதவீதம் என்ற அளவிலும் உள்ளது. வட கிழக்கு பழங்குடியினர் பலரும் கிறிஸ்தவர் என்ற அடிப்படையில் பார்த்தால் கிறிஸ்தவர்களிடம் பலதார மணம் அதிகமாக உள்ளது என்று பொருள் கொள்ள முடியும்.
சிஆர்பிசி இல்லை: பிறப்பு முதல் இறப்பு வரை இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு வகையான சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் "சிஆர்பிசி" பல பிரிவுகள் நாகலாந்து மாநிலத்தில் நடைமுறையில் கிடையாது என்பது பலருக்கும் தெரியாது. பழங்குடியினரின் பழக்கவழக்கங்களின் அடிப்படையில் அங்கு மாநில அரசின் சட்டம் தான் குற்றவியல் நடைமுறைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு உதாரணம்தான்.
குழப்பம்: பொது சிவில் சட்டம் என்று வரும்போது இந்தியா முழுமைக்கும் உள்ள இந்த ஒவ்வொரு வேறுபாடுகளையும் மாற்றி ஒரே சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும். இது பல்வேறு இனம் மற்றும் மத குழுவினர் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்துவதோடு பெரும் குழப்பங்களையும் ஏற்படுத்தும். இந்தியாவில் இடது பக்கமாக சாலையில் வாகனம் ஓட்டும் ஒருவர், அமெரிக்கா போன்ற நாடுகளில் வலது பக்கமாக வாகனம் ஓட்டும்போது ஏற்படும் குழப்பத்தை விட மோசமானதாக இருக்கும் இது. எனவேதான் 21வது சட்ட கமிஷன் தெள்ளத் தெளிவாக "இந்தநிலைமையில் இந்தியாவுக்குப் பொது சிவில் சட்டம் விரும்பத்தக்கது இல்லை" என்பதை கூறியிருந்தது.
பரப்பப்படும் கருத்து: பொது சிவில் சட்டம் முஸ்லிம்களை இந்திய தேசிய நீரோட்டத்தின் கீழ் கொண்டுவரும் சட்டம் என்று பரப்பப்படுவது தேர்தலுக்கான பரப்புரை அன்றி வேறு கிடையாது. பொது சிவில் சட்டம் தொடர்பாக முஸ்லிம்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கருத்துக்கணிப்புகள் நடத்துவதும், சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரப்பப்படுவதும் தேர்தலின்போது மத ரீதியாக மக்களை பிரித்துக்கொள்ள பயன்படக்கூடுமே தவிர, இந்திய சட்டங்களின் நிலவரம் அப்படி சொல்லவில்லை. ஒருவேளை இந்த சட்டம் கொண்டுவரப்பட்டால் பிற மதங்கள் மற்றும் பிற இனக் குழுவை சேர்ந்தவர்கள்தான் தங்களது வாழ்வியல் நடைமுறைகளில் பல மாற்றங்களை செய்து கொள்ள வேண்டி இருக்கும். முஸ்லீம்கள் மட்டுமே அல்ல.












Click it and Unblock the Notifications