அதிர்ச்சி தந்த ஆடியோ கால்.. ஒருமையில் பேசிய அன்வர் ராஜா.. அதிமுகவிலிருந்து நீக்கம் ஏன்? நடந்தது என்ன
சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் கட்சியில் இருந்து பலர் நீக்கப்படலாம், மூத்த தலைவர்கள் பலர் வெளியேறலாம் என்று ஏற்கனவே நம்முடைய செய்திகளில் குறிப்பிட்டு இருந்தோம். குறிப்பிட்டபடியே தற்போது அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நீக்கப்பட்டு இருக்கிறார்.
Recommended Video
கட்சி விதிகளை மீறியதாகவும், கட்சியின் மாண்பிற்கு களங்கம் ஏற்படுத்தியதாகவும், கழகத்தின் கொள்கை- குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாகவும் கூறி அன்வர் ராஜா கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிக்கை வெளியிட்டு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
அதிமுகவிற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அன்வர் ராஜா செய்தது என்ன? முக்கியமாக எடப்பாடி பழனிசாமி தரப்பு அன்வர் ராஜா மீதி கொதிப்பில் இருக்க என்ன காரணம்? என்று பார்க்கலாம்.
அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நீக்கம்.. ஓபிஎஸ் - இபிஎஸ் அறிவிப்பு
அதிமுக எதிர்ப்பு
அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்கு பின் சசிகலா ஆதரவாளராக இருந்த அன்வர் ராஜா, ஓ பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தத்தை எதிர்த்து வந்தார். அதன்பின் அதிமுகவில் ஓபிஎஸ் - இபிஎஸ் ஒன்றான பின் கட்சியில் ஒற்றை தலைமை வேண்டும் என்று கூறி வந்தார். அதோடு பாஜகவுடன் கூட்டணி வைத்ததையும் விமர்சனம் வைத்து வந்தார். அன்வர் ராஜாவை பொறுத்தவரை அதிமுகவின் தோல்விக்கு பாஜக கூட்டணியும், எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகளும்தான் காரணம்.
எடப்பாடி பழனிசாமி
இதை அன்வர் ராஜா வெளிப்படையாகவே பல இடங்களில் பேசி இருக்கிறார். , எடப்பாடி பழனிசாமியின் தலைமைப்பண்பு சரியில்லை. அவரின் கூட்டணி முடிவுகளில் தவறு செய்துவிட்டார். வன்னியர் இட ஒதுக்கீட்டில் சறுக்கிவிட்டார். பாஜகவிற்கு அதிமுக கட்டுப்பட்டு நடக்கிறது. சசிகலாவை மீண்டும் கட்சிக்குள் சேர்க்க வேண்டும். சசிகலாதான் கட்சியை வழி நடத்த வேண்டும் என்று அன்வர் ராஜா பல இடங்களில் வெளிப்படையாகவே பேசி இருக்கிறார்.
மோதல்
இதுதான் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு அன்வர் ராஜா மீது கோபம் ஏற்பட காரணம் என்கிறார்கள் தொடக்கத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அன்வர் ராஜா நெருக்கமாவே இருந்தார். ஆனால் அதன்பின் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் ஆதிக்கம் கட்சியில் அதிகம் ஆனதால் அன்வர் ராஜா அதிருப்திக்கு உள்ளாகி இருக்கிறார். இந்த நிலையில்தான், சமீபத்தில் அமமுக நிர்வாகி ஒருவரிடம் எடப்பாடி பழனிசாமி குறித்து அன்வர் ராஜா ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.
ஆடியோ கால்
எடப்பாடி பழனிச்சாமி மட்டும் தேர்தலில் வென்று இருந்தால் தன்னை எம்ஜிஆர் என்று கூறி இருப்பார். அவர் வலுவான தலைவராக இல்லை. சசிகலா மீண்டும் வர வேண்டும். சசிகலா காலில் விழுந்தவர்கள் அவரை ஏன் ஏற்க தயங்குகிறார்கள் என்று அன்வர் ராஜா பேசியதாக கூறப்படும் ஒரு போன் கால் ஆடியோ ஒன்றுதான் சர்ச்சையானது. இந்த ஆடியோ காலை கடந்த வாரம் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மீட்டிங்கில் நிர்வாகிகள் சிலர் பொதுவில் ஒலிபரப்பி உள்ளனர். இது குறித்து இந்த மீட்டிங்கில் ஆலோசனை செய்துள்ளனர். இதற்கு அன்வர் ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எடப்பாடி ஆதரவாளர்கள் கூறியதாக தெரிகிறது.
சண்டை
இதையடுத்து அன்வர் ராஜா.. தான் ஒருமையில் பேசிய சில கருத்துக்களுக்கு கூட்டத்திலேயே மன்னிப்பும் கேட்டு இருக்கிறார் என்கிறார்கள். ஆனால் அதே சமயம் அந்த கூட்டத்திலேயே சசிகலா குறித்து அன்வர் ராஜா பேசியதாகவும் கூறப்படுகிறது. சசிகலாவை கட்சிக்குள் கொண்டு வர வேண்டும் என்று அன்வர் ராஜா பேசி இருக்கிறாராம். இதையடுத்து அவர் மீது கோபம் அடைந்த முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அவரை அடிக்க பாய்ந்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
ஒப்புக்கொண்டார்
அன்வர் ராஜா கூறிய சில கருத்துக்களை ஏற்காமல் சிவி சண்முகம் இப்படி கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதில் சிவி சண்முகம் அன்வர் ராஜாவையும் அதிமுகவின் மற்ற தென் மண்டல தலைவர்களையும் விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறது. சிவி சண்முகத்தின் இந்த கருத்துக்கு முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், செங்கோட்டையன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனராம். இது பெரிய மோதலில் முடிந்துள்ளது. இதுதான் நடந்த பிரச்சனை.
டிவி விவாதம்
அப்போதே அன்வர் ராஜா கட்சியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி குறித்து ஆடியோ காலில் பேசியது உண்மை என்றும், சசிகலாவை அதிமுகவிற்குள் கொண்டு வர வேண்டும் என்றும் கூறி அன்வர் ராஜா பல்வேறு தொலைக்காட்சி விவாதங்களில் வெளிப்படையாக அன்வர் ராஜா பேசி இருந்தார். இதையடுத்தே தற்போது அன்வர் ராஜா நீக்கப்பட்டுள்ளார்.
இன்னும் சிலர்
அதிமுக செயற்குழு கூட்டம் இன்று நடக்க உள்ளது. பிரச்சனைகளை எப்படியாவது முடிவிற்கு கொண்டு வரும் விதமாக செயற்குழு கூட்டத்தை நடத்த அதிமுக தரப்பு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் கூட்டத்திற்கு முன்பாக அன்வர் ராஜா நீக்கப்பட்டுள்ளார். அன்வர் ராஜா நீக்கம் வெறும் டீசர்தான்.. இன்னும் பல முக்கிய தலைகள் வரும் நாட்களில் கட்சியில் இருந்து வெளியேறும் வாய்ப்புகள், சூழ்நிலைகள் வரலாம் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.