பாஜகவுடன் கூட்டணி சேரப் போகிறதா திமுக?.. டக்கென சிரித்த கனிமொழி.. அப்புறம் சொன்ன பதில் இருக்கே!
சென்னை : பிரதமர் மோடி முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் அதிக இணக்கம் காட்டியதன் மூலம், திமுக பாஜக கூட்டணி அமையுமா என்ற கேள்வியைக் கேட்டதும் டக்கெடன சிரித்துவிட்டு, பதில் சொல்லியுள்ளார் திமுக எம்.பி கனிமொழி.
பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்த நிலையில், அவரும் முதல்வர் ஸ்டாலினும் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இணக்கம் காட்டியது அரசியல் அரங்கில் பல்வேறு யூகங்களைக் கிளப்பியது.
இந்நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, சிரித்தவாறே பதில் கூறியுள்ளார் திமுக எம்.பியும், முதல்வர் ஸ்டாலினின் சகோதரியுமான கனிமொழி.

ஸ்டாலின் - மோடி நெருக்கம்
சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி பொங்க வரவேற்றார். பிரதமர் மோடியும், முதல்வர் ஸ்டாலினும் மேடையில் மகிழ்ச்சியாக உரையாடினர். மேடையில் இருவரும் சிரித்தபடி நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். எப்போதும் இல்லாத அளவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடியுடன் இந்த முறை அதிக நெருக்கம் காட்டினார்.

கடந்த முறை வந்தபோது
கடந்த மே மாத இறுதியில், அதே நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த அரசு விழாவில் பிரதமர் மோடியை மேடையில் வைத்துக் கொண்டே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை கடுமையாக அட்டாக் செய்தார். ஆனால், நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் பிரதமருடன் இணக்கமாக முதலமைச்சர் ஸ்டாலின் நடந்துகொண்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. மேலும், விமான நிலையத்திற்கே சென்று பிரதமரை வழியனுப்பி வைத்தார். பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினின் கூடுதல் நெருக்கம், அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களைக் கிளப்பியது.

கனிமொழி எம்.பி
இந்நிலையில் மகளிர் ஆணையம் சார்பில், மனித கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக எம்.பி கனிமொழி பங்கேற்றுப் பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.பி கனிமொழியிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். பிரதமர் மோடியும் முதல்வர் ஸ்டாலினும் அதிக இணக்கம் காட்டுகிறார்களே, விரைவில் திமுக, பாஜக கூட்டணியில் இணையப் போகிறதா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

சிரித்த கனிமொழி
செய்தியாளர்களின் அந்தக் கேள்வியைக் கேட்டதும் டக்கென சிரித்த கனிமொழி, "உலக நாடுகளின் கவனத்தை தமிழகம் நோக்கி திருப்பும் வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சிறப்பாக முன்னெடுத்திருக்கிறது தமிழக அரசு. முதலமைச்சர் பிரதமரை ஒரு நிகழ்ச்சிக்கு அழைக்கிறார். தமிழகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்கிறார். அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை வைத்து கட்சியின் நிலைப்பாட்டை சந்தேகிப்பதா? இதை வைத்து பாஜகவுடன் கூட்டணி என முடிச்சுப் போடுவது அர்த்தமில்லாதது" என பதிலளித்தார்.

போராட்டம் தொடரும்
மேலும் பேசிய கனிமொழி எம்.பி, நாடாளுமன்றத்தில் மக்களின் பிரச்சனைகளை விவாதிக்க வேண்டும் என்பதற்காக குரல் எழுப்பினோம். மத்திய அரசு தவறான நடவடிக்கையால் எம்பி.க்களை இடைநீக்கம் செய்துள்ளது. எம்.பிக்கள் நீக்கப்பட்டது தவறான நடவடிக்கை. இதனால் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதில் நாங்கள் பின்வாங்கப் போவதில்லை. எங்கள் கோரிக்கை விவாதிக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்றார்.












Click it and Unblock the Notifications