இதுமட்டும் நடக்கலைனா.. சிக்கல்.. திமுகவிற்கு காத்திருக்கும் "ஆசிட் டெஸ்ட்".. ஸ்டாலின் கையில் முடிவு
சென்னை: முதல்வர் இல்லத்தை வருகிற 16-ந்தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்த சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் முடிவு செய்துள்ளது. இந்த போராட்டத்திற்கு முன்பாக நடக்க உள்ள பட்ஜெட் கூட்டத்தொடர் கவனம் பெற்றுள்ளது,
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் பிப்ரவரி 12ம் தேதி துவங்குகிறது. பிப்ரவரி 19-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு. ஏற்கனவே சட்டசபைத் தேர்தலில் திமுக கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. உதாரணமாக பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், பால் விலை குறைப்பு நிறைவேற்றப்பட்டுவிட்டது.

இன்னொரு பக்கம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 கொடுக்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அதே சமயம் இன்னும் சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. உதாரணமாக பெட்ரோல் விலை குறைப்பு, பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை
கர்நாடகாவில் நிறைவேற்றம்: இப்படிப்பட்ட நிலையில்தான் கர்நாடகாவில் பழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அம்மாநில தேர்தல் வாக்குறுதி அடிப்படையில் முதலமைச்சர் சித்தராமையா இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
தமிழ்நாடு: தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் இடையே பழைய ஓய்வூதிய திட்டம் மிக முக்கிய கோரிக்கையாக இருந்து வருகிறது. ஆனால் இதை செயல்படுத்த முடியாது என்று முன்பு நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையிலேயே தெரிவித்து இருந்தார்.
பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் கடந்த 2022 வருடம் பேசுகையில், தனிநபர் ஒருவருக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் செலவாகிறது. அதேநேரம் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் தனிநபர் ஒருவருக்கு ரூ.50,000 தான் செலவாகிறது. எனவே, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமற்றது" என்று தெரிவித்தார்.
அவரின் இந்த பேச்சு அரசு ஊழியர்கள் இடையே பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் தற்போது லோக்சபா தேர்தல் நெருங்கி வருகிறது.
மறந்துவிட்டார்கள்: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ஒழித்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வருவோம் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி தந்திருந்தது திமுக. ஆட்சிக்கு வந்ததும் அதை மறந்துவிட்டார்கள்.
ஏதேதோ காரணங்கள் சொல்லி வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அரசு ஊழியர்கள், சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் என ஆரம்பித்து பல கட்டப் போராட்டங்களை நடத்தினர். ஆனாலும் அசைந்து கொடுக்கவில்லை அரசு.
இந்த நிலையில், வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, முதல்வர் இல்லத்தை வருகிற 16-ந்தேதி முற்றுகைப் போராட்டத்தை நடத்த சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே இடைநிலை ஆசிரியர்கள் சங்கங்கள் வருகிற 12-ந்தேதியும், ஜாக்டோ ஜியோ அமைப்பு 15-ந்தேதியும் அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளன.
இப்படி இந்த மாதம் ஆர்ப்பாட்டம், போராட்டம் என அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இதனை எப்படி சமாளிக்கப் போகிறார் முதல்வர் என்கிற யோசனையில் இருக்கிறது திமுக. பெரும்பாலும் இந்த மாதம் தாக்கல் ஆகும் பட்ஜெட்டில் அது தொடர்பான அறிவிப்பு இருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications