"குளிரப்போகும் மனம்".. அதிகரிக்கும் நெருக்கடி.. ஆதீனத்திற்கு அனுமதி தருமா திமுக அரசு? என்ன நடக்கும்?
சென்னை: தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் கொண்டு செல்வது தொடர்பான விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரிதாகி உள்ள நிலையில், ஆளும் திமுக அரசு இதில் என்ன முடிவு எடுக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. பல்வேறு பக்கங்களில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதால் ஆளும் திமுக அரசு இந்த நிகழ்வை அனுமதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தருமபுர ஆதீனகர்த்தராக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியர் பதவி வகித்து வருகிறார். இவரை கோவில் வழிபாட்டிற்காக பல்லக்கில் தூக்கி செல்வது வழக்கம். இதை பட்டினப் பிரவேசம் என்று அழைப்பார்கள்.
அதன்படி ஆட்கள் கூடி இந்த பல்லக்கை தூக்க, அதில் ஆதீனம் வலம் வருவார். இந்த நடைமுறைக்கு விசிக, திக உள்ளிட்ட அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்ல தடை.. திராவிடர் கழகம் எதிர்த்த நிலையில் அரசு அதிரடி
தடை
ஏற்கனவே 2020ல் இந்த நடைமுறைக்கு விசிக, திக உள்ளிட்ட அமைப்புகள், கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. விளைவு, அப்போது நடந்தே செல்கிறேன் என்று ஆதீனம் மாசிலாமணி அறிவித்தார். ஆனால் இப்போது கண்டிப்பாக பல்லக்கில் செல்வேன் என்பதில் ஆதீனம் உறுதியாக இருக்கிறார். இந்த நிலையில்தான் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் பாலாஜி இந்த நிகழ்விற்கு தடை விதித்தார். விசிக, திக உள்ளிட்ட அமைப்புகள் ஆட்சியரிடம் புகார் அளித்த நிலையில், கோட்டாட்சியர் இந்த தடையை விதித்தார்.
ஆதீனங்கள் எதிர்ப்பு
இந்த தடைக்கு ஆதீனங்கள் பலரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். என்ன ஆனாலும் இந்த நிகழ்வு நடந்தே தீரும். இந்து நிகழ்வு, பாரம்பரியம் ஒன்றை தடை செய்ய இவர்கள் யார்? இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. இதை யாராலும் தடுக்க முடியாது. இந்த பாரம்பரிய நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக்கூடாது. முதல்வரே இந்த நிகழ்ச்சியை நேரில் நடத்த வேண்டும் என்று மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியர் தெரிவித்துள்ளார்.
எதிர்ப்பு மேல் எதிர்ப்பு
அதோடு ஆளுநர் ரவி மயிலாடுதுறைக்கு பயணம் மேற்கொண்டதும். அவர் தருமபுரம் ஆதீனத்தை பார்த்ததாலும் அரசு கோபத்தில் இருப்பதாகவும். இதனால்தான் இந்த நிகழ்விற்கு தடை என்று மதுரை ஆதீனம் புகார் வைத்துள்ளார். தேவையில்லாத விஷயங்களில் அரசு தலையிடக்கூடாது. அரசு விதித்த தடையை நீக்க வேண்டும் என்று பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் கூறியுள்ளார். மன்னார்குடி ஜீயர் தொடங்கி பல ஆதீனங்கள், இந்து மத தலைவர்கள் இந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பிரச்சனை நீள்கிறது
அதோடு டெல்லி வரை இந்த விஷயத்தை கொண்டு செல்லவும் பாஜக தயாராகி வருகிறது. பிரதமரை நேரில் சந்தித்து புகார் அளிப்பேன் என்று மதுரை ஆதீனம் ஏற்கனவே கூறிவிட்டார். தேசிய ஊடகங்கள் இந்த விஷயத்தை உன்னிப்பாக கவனித்துக்கொண்டு இருக்கின்றன. இந்த விவகாரத்தில் அதிமுகதான் சட்டசபையில் கவனயீர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. தருமபுரம் ஆதீனத்தில் பல ஆண்டுகளாக பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இது தடை பட்டதே இல்லை.
அதிமுக எதிர்ப்பு
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் தொடா்கிறது. ஆங்கிலேயா் ஆட்சி புரியும் போது கூட இந்த நிகழ்வுக்குத் தடை விதிக்கப்பட்டதில்லை. இதை தடுக்க கூடாது என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூட சட்டசபையில் பேசி இருந்தார். ஆனால் இவரின் ஆட்சியின் போதுதான் 2020ல் பட்டின பிரவேசம் தடை பட்டது என்பது வேறு கதை. அதிமுக இதில் ஆதீனங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ள நிலையில் பாஜகவும் இதே நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
பாஜக எதிர்ப்பு
நானே பல்லக்கை தூங்குவேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். இந்த நிகழ்விற்கு நானும் செல்வேன் என்று பாஜகவின் எச். ராஜாவும் தெரிவித்துள்ளார். என்ன நடந்தாலும் இந்த நிகழ்வை நடத்தி காட்டுவோம் என்று ஆளும் திமுக தரப்பிற்கு எதிராக பாஜக சொல்லி வருகிறது. மே 22 ஆம் தேதிதான் பல்லக்கு தூக்கும் நிகழ்வு நடைபெறும் என்பதால் அதற்குள் அரசுக்கு கடுமையான அழுத்தத்தை கொடுக்க பாஜக திட்டமிட்டு உள்ளது.
கோவில் விவகாரம் - நல்ல பெயர்
இந்த நிலையில்தான் தமிழ்நாடு அரசு இதில் என்ன முடிவு எடுக்க போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே கோவில் தொடர்பான விவரங்களில் தமிழ்நாடு அரசு நல்ல பெயர் எடுத்துள்ளது. கோவில்கள் புனரமைக்கப்பட்டு உள்ளன. பல கோவில்களில் கும்பாபிஷேகம் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில், திடீரென தருமபுர ஆதீனத்தின் பல்லக்கு நிகழ்விற்கு தடை விதித்து கெட்ட பெயர் சம்பாதிப்பதை அரசு விரும்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அழுத்தம் முடிவு
இதுவரை அரசு நேரடியாக இதில் அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. கோட்டாச்சியார் பாலாஜி விதித்த தடை என்று அளவிலேயே இந்த பிரச்சனை உள்ளது. முன்னதாக தருமபுர ஆதீன விவகாரத்தில் ஆதீனங்களுடன் பேசி விரைவில் நல்ல முடிவை முதலமைச்சர் அறிவிப்பார். அதற்குள் சிலர் ஆதீனத்தை வைத்து அரசியல் செய்யப் பார்க்கிறார்கள். விரைவில் சுமுகமான முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு நேற்று அதிமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் சட்டசபையில் பேசினார்.
சிக்னல்
அதன்பின் பேட்டி அளித்த சேகர் பாபு, விரைவில் அனைவரின் மனம் குளிரும்படி நல்ல முடிவு எடுக்கப்படும். தருமபுர ஆதீன பட்டின பிரவேசம் குறித்து சுமுகமான முடிவு எட்டப்படும்.மே 22 ஆம் தேதிதான் பல்லக்கு தூக்கும் நிகழ்வு நடைபெறும் என்பதால் அதற்குள் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து இருக்கிறார். எல்லோரும் குளிரும்படி எடுக்கப்பட உள்ள அந்த முடிவு என்ன.. திமுக அரசு இந்த நிகழ்வை அனுமதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
ஆனால்?
ஆனால் அதே சமயம் இந்த நிகழ்விற்கு அனுமதி அளித்தால் அது திமுகவிற்கு ஒரு வகையில் பின்னடைவை ஏற்படுத்தும் வாய்ப்புகளும் உள்ளன. விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இடையே இது அதிருப்தியை ஏற்படுத்தும். அதேபோல் அரசுக்கு நிலைப்பாடு ரீதியாக ஏற்பட்ட பின்னடைவாகவும் இது அமைந்துவிடும். ஏற்கனவே அயோத்தி மண்டப வழக்கில் பின்னடைவை சந்தித்த காரணத்தால் இதில் உறுதியாக நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய கட்டாயம் ஆளும் திமுகவிற்கு ஏற்படும். எதிர்க்கட்சிகளின் அழுத்தத்திற்கு அடி பணிந்தது போல இது மாறிவிடும் என்பதால் திமுக என்ன முடிவை எடுக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.