பதவியேற்ற போது கஞ்சா வழக்கில் கைதான பெண்...இன்று ஊராட்சி துணைத் தலைவராக தேர்வு
ஊராட்சி மன்ற உறுப்பினராக நேற்று பதவியேற்றபோது கஞ்சா வழக்கில் கைதான பெண் இன்று ஊராட்சி துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தாம்பரம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று பதவியேற்க வந்த பிரபல ரவுடியின் மனைவியைப் பதவியேற்பு விழா கூட்டத்தில் வைத்தே கஞ்சாக் கடத்தல் வழக்கில் போலீசார் கைது செய்த நிலையில், இன்று அவர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விஜயலட்சுமியை எதிர்த்து போட்டியிட யாரும் முன்வரவில்லை என்பதால் அவர் போட்டியின்றி துணைத்தலைவராக தேர்வானார்.
Recommended Video
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகவும், 28 மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான தேர்தல் கடந்த 9ஆம் தேதியும் நடைபெற்றன. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் கடந்த 12ஆம்தேதி முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

செங்கல்பட்டு மாவட்டம் நெடுங்குன்றம் ஊராட்சியில் 9வது வார்டு உறுப்பினராக வெற்றிபெற்றுள்ள விஜயலக்ஷ்மி என்பவர் பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூர்யாவின் மனைவி ஆவார். சூர்யா மீது 50க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன.
உள்ளாட்சித் தேர்தலில் தன் மனைவியை எதிர்த்து யாரும் நிற்கக் கூடாது, என் மனைவிக்கு ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பதவி கொடுக்க வேண்டும் என சிறையிலிருந்தபடியே ரவுடி சூர்யா மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து சூர்யாவின் மனைவி விஜயலட்சுமியை எதிர்த்து போட்டியிட முன்வரவில்லை.
தேர்தலில் வெற்றி பெற்ற விஜயலக்ஷ்மி நேற்று பதவியேற்க வந்த போது அவரை பதவியேற்பு விழா மேடையில் வைத்தே காவல்துறையினர் கைது செய்தனர். கஞ்சா கடத்தி விற்று வந்தது தெரியவந்ததால் அவரை கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட விஜயலட்சுமி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், நெடுங்குன்றம் ஊராட்சி மன்றத் துணைத்தலைவருக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது.
விஜயலக்ஷ்மியின் வழக்கறிஞர்கள் மனுதாக்கல் செய்திருந்தனர். தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சி துணை தலைவர் பதவிக்கு விஜயலட்சுமியைத் தவிர வேறு யாரும் போட்டியிடாததால் சிறையில் இருக்கும் அவர் துணை தலைவராக வெற்றி பெற்றார்.












Click it and Unblock the Notifications