உங்களால் முடியுமா..? செய்து பாருங்கள்.. திமுக எம்.பி. செந்தில்குமாருக்கு வானதி சீனிவாசன் சவால்!
சென்னை: ‛‛திமுகவின் தொடர்பில் 2 பாஜக எம்எல்ஏக்கள் உள்ளனர். தலைமை இசைவு தெரிவித்தால் இரண்டு பேரையும் திமுகவுக்கு தூக்கிவிடுவோம்'' என தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார் கூறியதற்கு, ‛‛முடிந்தால் தூக்குங்கள்... பார்க்கிறோம்'' என வானதி சீனிவாசன் சவால் விடுத்துள்ளார்.
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் திருச்சி சிவா. மாநிலங்களவை எம்பியான இவர் திமுகவின் கொள்ளை பரப்பு செயலாளராகவும் உள்ளார்.
இவரது மகன் சூர்யா சிவா. திமுகவில் செயல்பட்டு வந்த சூர்யா சிவா பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

பாஜகவில் திருச்சி சிவா மகன்
இதை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் எப்போது இணைவார் என்பதில் கேள்வி நீடித்தது. இந்நிலையில் நேற்று இரவு சூர்யா சிவா, அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். கட்சியில் இணைந்ததை தொடர்ந்து அவருக்கான உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. சூர்யா சிவா கூறுகையில், ‛‛திமுக குடும்பத்தின் கட்சியாக உள்ளது. ஒரு சில குடும்பங்களுக்கு உழைப்பதற்கு பதில் பாஜகவில் இணைந்து மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன்'' என்றார்.

2 எம்எல்ஏக்களுடன் தொடர்பு
திமுகவின் மூத்த தலைவரான திருச்சி சிவாவின் மகனை கட்சிக்கு இழுத்ததை பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தான் தர்மபுரி மக்களவை தொகுதி திமுக எம்பி செந்தில்குமார் இதுபற்றி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். அதில், ‛‛திமுகவில் எந்த பதவியிலும் இல்லாத ஒருவர் உங்கள் கட்சியில் இணைவதை கொண்டாடும் தமிழக பாஜகவினருக்கு ஒரு தகவல். உங்கள் கட்சியின் இரண்டு சட்டசபை உறுப்பினர்கள் தொடர்பில் உள்ளார்கள். எங்கள் தலைமை இசைவு தெரிவித்தால் இரண்டு பேரையும் தூக்கிவிடுவோம்'' என தெரிவித்துள்ளார்.

யார் அந்த எம்எல்ஏக்கள்
இந்த பதிவை தொடர்ந்து பாஜகவின் அந்த 2 எம்எல்ஏக்கள் யார் என்ற கேள்வி எழுந்தது. கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன், நகார்கோவில் எம்எல்ஏ காந்தி, திருநெல்வேலி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி ஆகியோர் தான் தமிழகத்தில் பாஜக எம்எல்ஏக்களாக உள்ளனர். இதனால் இவர்களில் யாராக இருக்கும் என நெட்டிசன்கள் தங்கள் விருப்படி ஒவ்வொருவரின் பெயர்களை பதிவிட்டு வருகின்றனர். இதற்கு பாஜகவினர் பாஜக எம்எல்ஏக்கள் யாரும் திமுகவுடன் தொடர்பில் இருக்க வாய்ப்பில்லை என மறுக்கின்றனர்.

முடிந்தால் தூக்குங்கள்
இதனால் இந்த விவகாரத்தில் சமூக வலைதளத்தில் விவாதமாக மாறியுள்ளது. இந்நிலையில் தான் செந்தில்குமார் எம்பிக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் செந்தில்குமார் எம்பியின் பதிவை ரிடுவிட் செய்து ‛முடிந்தால் தூக்குங்கள்.. பார்க்கிறோம்' என குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications