கோவையில் இன்னொரு சம்பவம்.. 10 ஆம் வகுப்பு மாணவியை கடத்தி திருமணம் செய்வதாக பாலியல் பலாத்காரம்
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடையில் 10 ஆம் வகுப்பு மாணவியை கடத்தி திருமணம் செய்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கேரள இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்தவர் 10 ஆம் வகுப்பு மாணவி. பள்ளி மாணவி தொடர் விடுமுறை காரணமாக கேரள மாநிலம் மன்னார்காடு பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர்,வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
காதல் வளர்ந்தது
போலீசாரின் தீவிர விசாரணையில் மாணவி கேரளாவில் தனது பாட்டி வீட்டிற்கு சென்ற பொழுது அருகில் இருந்த இளைஞர் லோகேஷ் குமார் (வயது 21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.பின்னர்,செல்போன் மூலம் தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர்.
பாலியல் பலாத்காரம்
இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதி கேரளத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்ற மாணவியை இளைஞர் லோகேஷ் குமார் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச்சென்று அன்னூர் விண்ணப்பள்ளியில் உள்ள தனது உறவினர் இல்லத்தில் தங்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். காவல் துறையினரின் தீவிர விசாரணையில் மாணவி இளைஞருடன் அன்னூரில் இருப்பது தெரிய வந்ததை அடுத்து இருவரையும் காரமடை காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
10 போக்ஸோ கேஸ்கள்
இதனையடுத்து இளைஞர் லோகேஷ் குமார் மீது குழந்தை திருமண தடுப்புச்சட்டம்,போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். மாணவி கோவையில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். காரமடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களில் மட்டுமே 10 க்கும் மேற்பட்ட போக்சோ வழக்கு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும் விவாதம்
இதனிடையே கோவையில் பள்ளி மாணவி, ஆசிரியிரின் பாலியல் தொந்தரவு காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கோவை மாணவி தற்கொலை, ஆசிரியர் தொந்தரவு விவகாரம் பெரும் விவாதத்தை சமூக வலைதளத்தில் ஏற்படுத்தி உள்ளது.