லிப்ஸ்டிக் பஸ்.. அதிமுக திட்டம் எவ்வளவோ சூப்பரா இருந்துச்சு.. திமுக அரசை விளாசிய வானதி சீனிவாசன்!
கோவை : பெண்களுக்காக பிங்க் கலர் பேருந்து திட்டத்தில் பேருந்தின் முகப்பில் மட்டும் பிங்க் நிற பெயிண்ட் பூசியுள்ளனர். இதனை லிஃப்ஸ்டிக் என சமூக வலைதளங்களில் கிண்டல் அடிக்கும் நிலைமை தான் உள்ளது என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
கோவை தெற்கு மாவட்ட பா.ஜ.க சார்பில் பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட காரச்சேரி கிராமத்தில் கட்சியில் இணையும் விழா நடைபெற்றது.
பாஜக தேசிய மகளிர் அணி செயலாளரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் முன்னிலையில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகியும், புதிதாக கட்சியில் சேர்ந்தவர்கள் என்றும் 500க்கும் மேற்பட்டவர்கள் பா.ஜ.கவில் இணைந்தனர்
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்த வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, திமுக அரசை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
திடீர் வருகை.. பேச்சை 'சட்டென’ நிறுத்திவிட்டு.. ஓடிச் சென்று கையைப் பிடித்து அழைத்து வந்த கனிமொழி!
காத்திருக்க வேண்டியுள்ளது
வானதி சீனிவாசன் பேசுகையில், "அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட அம்மா இருசக்கர வாகன திட்டத்தால் பெண்கள் யாரையும் சார்ந்து இல்லாமல் தங்கள் பணிகளை மேற்கொள்ள இருசக்கர வாகன திட்டம் பயனுள்ளதாக இருந்தது. ஆனால் திமுக ஆட்சி அமைந்தவுடன் இத்திட்டத்தை ரத்து செய்துவிட்டு இலவச பேருந்து திட்டத்தை அறிவித்தார்கள். பேருந்துக்காக பெண்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால், ஸ்கூட்டி என்றால் யாருக்கும் காத்திருக்காமல் பெண்கள் அவர்கள் வேலையைப் பார்த்துக் கொள்வார்கள்.
லிஃப்ஸ்டிக் பஸ்
திமுக அரசின் இலவச பேருந்து திட்டம் பெண்களுக்கு முழுமையாக பயனளிக்கவில்லை. தற்போது பெண்களுக்காக பிங்க் கலர் பேருந்து திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். அதில் பேருந்தின் முகப்பில் மட்டும் பிங்க் நிற பெயிண்ட் பூசியுள்ளனர். இதனை லிஃப்ஸ்டிக் போல் பூசியிருப்பதாக சமூக வலைதளங்களில் கிண்டல் அடிக்கும் நிலைமை தான் உள்ளது.
பெயர் மட்டும் திமுகவுக்கு
நல்ல பேருந்துகளை வழங்கி பெண்களுக்கு உதவி செய்யாமல் பழைய பேருந்துகளுக்கு வண்ணம் பூசி இந்த திட்டத்தை தொடங்கியுள்ளனர். இது மட்டும் இல்லை, பல திட்டங்களை இப்படித்தான் செயல்படுத்துகிறது திமுக அரசு. தமிழகத்தில் செயல்படுத்தப்படும் பெரும்பாலான திட்டங்கள் மத்திய அரசின் நிதியைக் கொண்டுதான் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் பெயர் வைப்பது மட்டும் திமுக அரசு.
ஆதார் எண்ணுடன் இணைப்பு
ஒரே நபர் மூன்று நான்கு இடங்களில் வாக்களிப்பதை தடுக்கவும், கள்ள ஓட்டுக்கள் போடுவதை தடுக்கவும் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் சீர்திருத்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுத்துவருகிறது. இதன் மூலம் ஒரு நபரின் முழுமையான விவரங்களை அறிய முடியும். அரசின் அனைத்து துறைகளிலும் பயனடைய முடியும். இது
வரவேற்கத்தக்க அம்சம். இதை கட்சி வேறுபாடு இன்றி ஆதரவு அளிக்க வேண்டும்.
கள்ள ஓட்டு போட
இந்த திட்டத்தை திமுக எதிர்ப்பதன் மூலம் கள்ள ஓட்டுகளைப் போட மக்களை ஊக்குவிக்கின்றார்கள் என்று தான் அர்த்தம். ஆதார் என்னை வங்கிக் கணக்கில் இருந்து அனைத்து இடங்களிலும் மக்கள் பயன்படுத்தி பழகி விட்டார்கள் இதில் திமுகவிற்கு என்ன சிக்கல்? இதை வேறு விதமாக பயன்படுத்தப் பார்க்கிறார்கள்" என்று குற்றம்சாட்டினார்.