நகையை அடகு வைத்து... இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு 100 மின்விசிறிகள் வாங்கிக் கொடுத்த கோவை தம்பதி..!
கோவை: கோவை சிங்காநல்லூரில் இயங்கிவரும் இ.எஸ்.ஐ.மருத்துவமனைக்கு, நகையை அடகு வைத்து 100 மின் விசிறிகள் வாங்கிக் கொடுத்த தம்பதிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
மனிதநேயம் இன்னும் சாகவில்லை என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணமாக விளங்குகிறார்கள் அந்தக் கோவை தம்பதியினர்.
100 ரூபாய்க்கு உதவி செய்துவிட்டு அதை ஆயிரம் ரூபாயாக கதை அளந்துவிடும் விளம்பர பிரியர்களுக்கு மத்தியில், தங்கள் பெயர் உள்ளிட்ட எந்த விவரத்தையும் வெளியிட வேண்டாம் என அந்த நல்ல உள்ளங்கள் கேட்டுள்ளன.

குளிர்சாதன வசதி
மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இ.எஸ்.ஐ. மருத்துவமனையானது, மாதம் இருபத்து ஓராயிரம் மற்றும் அதற்கு குறைவாக ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்காக இயங்கி வருகிறது. அந்த வகையில் தொழில் நகரமான கோவையில் இயங்கி வரும் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்னல்
இந்நிலையில் கோவை ராம்நகர் பகுதியை சேர்ந்த தம்பதியினர், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக சிங்காநல்லூரில் செயல்பட்டு வரும் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு சென்றிருக்கின்றனர். அங்கு மின்விசிறிகள் இல்லாமல் நோயாளிகள் படும் இன்னலை நேரில் பார்த்தவுடன் அவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவ வேண்டும் என அங்கேயே அவர்கள் முடிவெடுத்து விட்டனர்.

ரூ.2,20,000 பணம்
இதையடுத்து தங்களிடம் பணம் இல்லாத சூழலிலும், கையில் இருந்த நகைகளை அடகு வைத்து அதன் மூலம் கிடைத்த இரண்டு லட்சத்து இருபதாயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு இ.எஸ்.ஐ. மருத்துவமனை டீனை சந்தித்துள்ளனர். தாங்கள் கொடுக்கும் தொகையை பெற்றுக்கொண்டு 100 மின் விசிறிகள் வாங்கி பொருத்துமாறு கூறியிருக்கிறார்கள். இதைக் கேட்டு வியப்படைந்த டீன், நீங்களே சிரமப்படும் போது எதற்கு இவ்வளவு தொகை, 4 மின் விசிறிகள் வேண்டுமானால் வாங்கிக் கொடுங்கள் எனக் கூறியிருக்கிறார்.

மருத்துவமனை டீன்
ஆனால் அந்த தம்பதியோ, காற்றில்லாமல் நோயாளிகள் படும் கஷ்டத்தை பார்த்த பிறகு தங்களால் நிம்மதியாக இருக்க முடியவில்லை எனக் கூறி 100 மின் விசிறிகளை தங்கள் பணத்தில் வாங்கி பொருத்துமாறு வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து இது குறித்த விவரம் மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர் பெற்றுக் கொள்ளுமாறு கூறியதற்கு பிறகு இ.எஸ்.ஐ.மருத்துவமனை டீன் அந்த தொகையை பெற்றுக் கொண்டார்.

காற்றில்லை
இதனிடையே கோவை சிங்காநல்லூரில் செயல்பட்டு வரும் இ.எஸ்.ஐ. மருத்துவமனையானது முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதி கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் ஏ.சி. இயக்கப்படாமல் இருக்கிறது. இதனால் தான் நோயாளிகள் காற்றில்லாமல் சிரமப்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications