கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சதி வேலையா?..காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்..வலுக்கும் சந்தேகம்
கோவை: கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பதற்கு முதல்நாள் நள்ளிரவு 5 பேர் கனமான பொருளை தூக்கிச் சென்றது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. ஜமேசா முபீனுடன் இருந்த 4 பேர் என்ன பொருளை எடுத்துச் சென்றனர் என்று காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். கோவை நகரத்தின் முக்கிய பகுதிகள் காவல்துறை கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளது. துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை உக்கடம், கோட்டை ஈஸ்வரன் கோயில் பகுதியில் நேற்று முன் தினம் அதிகாலை 4 மணிக்கு, காரின் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த நபர் உயிரிழந்த நிலையில், விசாரணைக்காக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கார் வெடிவிபத்தில் இறந்தவர் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பதும், அவர் பழைய துணி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது. ஏற்கனவே அவரிடம் 2019ம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தியதும், போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டதும் கண்டறியப்பட்டது. ஜமேசா முபின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் நாட்டு வெடிகுண்டு செய்வதற்கான மூலப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

சிசிடிவி காட்சிகள்
ஜமேசா முபினின் வீட்டின் அருகே இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் காவல் துறையினர் ஆய்வு செய்தனர் இதில் கடந்த சனிக்கிழமை இரவு 11.25 மணிக்கு ஜமேசா முபின் வீட்டில் இருந்து முபின் உள்ளிட்ட 5 பேர் ஒரு மூட்டையில் பொருட்களை தூக்கிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளைக் கைப்பற்றிய காவல் துறையினர் மற்ற நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

5 பேர் கைது
சிசிடிவி காட்சிகளில் உள்ள 4 பேர் யார் என்பது குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, கார் வெடி விபத்து தொடர்பாக குன்னூரை அடுத்த ஓட்டுப்பட்டரை பகுதியை சேர்ந்த நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை உக்கடம் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடல் அடக்கம்
இந்நிலையில், ஜமேஷாவின் உடல் கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. சட்ட மருத்துவத்துறை தலைமை மருத்துவர் ஜெயசிங் தலைமையில் ஐந்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பிரேத பரிசோதனை நடத்திய நிலையில், முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து ஜமேசா முபீன் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது மனைவி நஸ்ரத்திடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து ஜமேசாவின் உறவினர்கள் அவரது உடலை வடகோவையில் உள்ள கபர்ஸ்தானில் முறைப்படி அடக்கம் செய்தனர்.

பலத்த பாதுகாப்பு
கோவை மாநகரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைகண்ணன் கோவையில் முகாமிட்டு விசாரனை மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்பார்வையிட்டு வருவதுடன் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் மற்றும் கோவை மாநகர காவல் ஆனையர் பாலகிருஷ்ணன் தலைமையில் இரண்டு டிஐஜி மற்றும் எட்டு மாவட்ட காவல்கண்காணிப்பாளர், 10 மாவட்ட காவலர்களுடன் இணைந்து 240 மத்திய அதிவிரைவு படையினர் என சுமார் 3000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

துப்பாக்கி ஏந்தி துணை ராணுவப்படை
மத்திய அதிவிரைவு படையினர் கோவை உக்கடம் மற்றும் கண்ணப்பன் நகர் பகுதிகளில் இரண்டு குழுக்களாக பிரிந்து வஜ்ரா வாகனங்களுடன் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக மக்கள் அதிகம் கூடுமிடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையங்களிலும் டவுன்ஹால், உக்கடம், கோட்டைமேடு மற்றும் கரும்புக்கடை போன்ற பகுதிகளிலும் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

சதியா? வலுக்கும் சந்தேகம்
கோவையில் நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடி விபத்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. பழமையான சங்கமேஸ்வரர் கோயிலை தகர்க்க திட்டமிட்டு நடத்தப்பட்ட சதியா என்ற கோணத்திலும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கார் வெடி விபத்து நடந்த பகுதியில் பால்ரஸ் குண்டுகள், ஆணிகள், சிறுவர்கள் விளையாடும் கோலி குண்டுகள் ஆகியவற்றை முக்கிய தடயமாக தடயவியல் நிபுணர்கள் கைப்பற்றியுள்ளனர். இது போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1998ஆம் ஆண்டு கோவையில் நிகழ்ந்த கலவரம், குண்டுவெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு அடிக்கடி கோவையில் பதற்றமான சம்பவங்கள் அரங்கேறி மக்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருகிறது.












Click it and Unblock the Notifications