கோவையில் விழுந்தடித்து வந்த வித்யா.. வடவள்ளி ஸ்டேஷனில் அப்பாவை பார்த்ததுமே.. கோயம்புத்தூருக்கே குஷி
கோவை: கோவை வடவள்ளி ரயில்வே ஸ்டேஷனில், டென்ஷனும், பரபரப்புமாக ஓடிவந்தார் வித்யா.. அங்கே தன்னுடைய அப்பாவை பார்த்ததுமே, ஆனந்த கண்ணீர் வடித்து, கட்டிப்பிடித்து கொண்டார்.. இந்த சம்பவம் கோவை மாவட்ட மக்களுக்கும் மகிழ்ச்சியை தந்து வருகிறது.
20 வருடங்களுக்கு முன்பு, மகேந்திரன் என்பவரின் மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரி வீட்டைவிட்டு வெளியேறி, கழிவுநீர் சாக்கடையில் விழுந்திருக்கிறார். எத்தனையோ பேர், இந்த பெண்ணை பார்த்தும்கூட, கண்டும் காணாமல் கடந்துபோயிருக்கிறார்கள்..

ஆனால், ஒரே ஒரு ஆட்டோ டிரைவர் மட்டும் சாக்கடையில் இறங்கி, அப்பெண்ணை சுத்தப்படுத்தி அவரின் வீட்டிற்கு தன்னுடைய ஆட்டோவில் கொண்டுவந்து சேர்த்திருக்கிறார். சகோதரியின் இந்த சம்பவம்தான், ஈரநெஞ்சம் அறக்கட்டளையை துவங்குவதற்கு மகேந்திரனுக்கு வித்தாக அமைந்திருக்கிறது.
ஆதரவற்றோர்: கோவை ஆர்.எஸ் புரத்தில், ஈரநெஞ்சம் அறக்கட்டளை காப்பகம் செயல்பட்டு வருகிறது. எத்தனையோ ஆதரவற்றவர்களை காத்து, அடைக்கலம் தந்து வருகிறது.. இதுவரையில் 1000-க்கும் மேற்பட்ட மனநல குறைபாடுடையவர்களை பாதுகாத்து, அவர்களின் உறவினர்களுடன் மகேந்திரன் சேர்த்திருப்பதாக ஒரு வார இதழிலும் செய்தி வெளியாகியிருந்தது.
அதுமட்டுமல்ல, இதுவரையில் காப்பகத்திலேயே 3 பிரசவமும் பார்க்கப்பட்டிருக்கிறதாம். ஆதரவற்று இறக்கும் வயதானவர்களின் உடல்களை, எல்லா சடங்குகளுடன் அடக்கம் செய்வது, கால் இழந்தவர்களுக்கு இலவசமாக செயற்கை கால் பொருத்த உதவுவது போன்ற உதவிகளையும் இவர் செய்து வருவதாக, அந்த பிரபல பத்திரிகையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அறக்கட்டளை: இந்நிலையில், ஈரநெஞ்சம் அறக்கட்டளை செய்துள்ள மற்றொரு சிறப்பான சம்பவம் இப்போது இணையத்தில் பலராலும் ஈர்க்கப்பட்டு வருகிறது. அதாவது, வடகோவை ரயில்வே ஸ்டேஷனில்,, ஒரு தாத்தா மயக்கம் போட்டு விழுந்துவிட்டார்.. அவருக்கு 85 வயதுக்கு மேல் இருக்கலாம்.. இவரது வீடு எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை.. அதனால், வழிதெரியாமல் தேடி தேடி அலைந்துள்ளார்..
வடகோவை ரயில்வே தண்டவாளம் அருகில் வந்தபோது, தடுமாறியிருக்கிறார்.. அதற்கு மேல் தாத்தாவால் நடக்க முடியவில்லை.. அதனால், அங்கேயே உட்கார்ந்துவிட்டார்.. பிறகு ஒருகட்டத்தில் சோர்வாகி, மயங்கி கீழே விழுந்துவிட்டார்..
பயணிகள்: அப்போதுதான், அங்கிருந்த பயணிகள் சிலர், அவரை மீட்டு உட்காரவைத்து, குடிப்பதற்கு தண்ணீர் தந்துள்ளனர்.. பிறகு டீ வாங்கி தந்துள்ளனர்.. சிறிது நேரம் கழித்து, தன்னுடைய பெயர் கிருஷ்ணசாமி என்று சொல்லி, சுந்தரம் வீதி என்று தன்னுடைய வீட்டு முகவரியையும் சொல்லி உள்ளார்.. ஆனால், அதற்கு மேல் அவரால் வேறு தகவல்களை சொல்ல முடியவில்லை.
இதையடுத்து, அங்கிருந்தவர்கள் உடனடியாக ஈரநெஞ்சம் அறக்கட்டளைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து தாத்தாவிடம் விசாரித்தபோது, அவர் சொன்ன சுந்தரம் வீதி, ரத்தினபுரி பகுதியில் இருப்பது தெரியவந்தது.. பிறகு அங்கு சென்று, வீட்டு முகவரியை கண்டுபிடித்து, தாத்தாவை பற்றி தகவல் தெரிவித்தனர்... அப்போதுதான், தன்னுடைய அப்பாவை 3 நாட்களாக காணவில்லை என்றும் அவரை அனைவரும் தேடி கொண்டிருப்பதாகவும், அவரது மகள் வித்யா சொன்னார்.
மகிழ்ச்சி: பிறகு, உடனடியாக வடகோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு விரைந்து வந்த வித்யா, தன்னுடைய அப்பாவை பார்த்ததுமே மகிழ்ச்சியாகிவிட்டார்.. உடனே அப்பாவை கண்ணீர் மல்க கட்டிப்பிடித்துக் கொண்டார்.. பிறகு தன் அப்பாவை பத்திரமாக மீட்டு, ஒப்படைத்த ஈரநெஞ்சம் அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு, நன்றி தெரிவித்து, தன்னுடைய தந்தையையும் பத்திரமாக வீட்டுக்கு அழைத்து சென்றார்.. இந்த சம்பவம் இணையத்தில் வெளியாகி, பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications