"டேட்டிங் ஆப்.." கொஞ்சி அழைத்த பெண்.. ஆசையாக போன இளைஞர்.. அப்புறம் நடந்ததுதான் ட்விஸ்ட்.. கோவையில்!
கோவை: கோவை மாவட்டத்தில் டேட்டிங் அப் மூலம் பேசிய பெண்ணை தனியாக இரவில் சந்திக்க சென்ற 25 வயது இளைஞரை வழிமறித்து கொடூரமாக தாக்கி பைக், செல்போன் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக அந்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இப்போது பள்ளி படிக்கும் மாணவ-மாணவிகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். இதில் சிலர் டேட்டிங் அப் உள்பட எதிர்பாலினத்துடன் பேசும் நோக்கத்தில் இருக்கும் அப்களை பதிவிறக்கி பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த அப்கள் மூலம் சிலர் எதிர்பாலினத்துடன் நட்புகளை வளர்ப்பதுடன் சிலர் மோசடிக்கும் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் இளைஞர்கள் பணம், பொருட்களை இழந்த சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது. அந்த வகையில் தற்போது கோவையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றிய விபரம் வருமாறு:

இளைஞரிடம் பேசிய பெண்
கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிரைண்டர் டேட்டிங் ஆப் எனும் செல்போன் செயலி மூலம் ஆண்களை குறிவைத்து செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு எதிர்முனையில் பெண்கள் போல் பேசி அவர்களை நேரில் வரவழைத்து வழிப்பறியில் ஒரு கும்பல் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் கோவையை சேர்ந்தவர் 25 வயது நிரம்பிய இளைஞர். இவரது செல்போனுக்கு ஜூலை மாதம் 27 ம் தேதி இரவு 10 மணிக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பெண் பேசினார். மேலும் நாகம்மநாயக்கன்பாளையம் வந்தால் தன்னை நேரில் சந்தித்து பேசலாம் என்று கூறியுள்ளார்.

இளைஞரிடம் வழிப்பறி
இதை நம்பிய இளைஞர் சூலூர் நாமகநாயக்கன்பாளையத்துக்கு சென்றார். அங்கு ஒரு பெண் மற்றும் 3 ஆண்கள் இந்தனர். இவர்கள் இளைஞரை வழிமறித்து அவரை தாக்கினர். மேலும் அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ஏடிஎம் கார்டு, இருசக்கர வாகனம் ஆகிவற்றை பறித்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசில் கூறினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

பெண் உள்பட 4 பேர் கைது
பொருட்களை இழந்த இளைஞர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூலூர் பகுதியை சேர்ந்த ரிதன்யா (20), ராஜேஷ் குமார் (24), இளந்தமிழன் (29), சுரேஷ் (23) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து நான்கு சக்கர வாகனங்கள், இரு செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

எஸ்பி அட்வைஸ்
இந்நிலையில் தான் கோவை மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் பொதுமக்களுக்கு அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார். அதன்படி, ‛‛பொதுமக்கள் இதுபோன்ற செல்போன் செயலிகள் மூலம் வரும் குறுஞ்செய்திகள் அல்லது செல்போன் அழைப்புகளை ஏற்க வேண்டாம். இதன்மூலம் மோசடி வலையில் சிக்குவதில் இருந்து விலகி இருக்க முடியும்'' என அட்வைஸ் வழங்கி உள்ளார்.












Click it and Unblock the Notifications