கோவையில் கொரோனா தடுப்பூசி போட மக்கள் ஆர்வம் - டோக்கன் பெற மணிக்கணக்கில் காத்திருப்பு
கோவையில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக, ஊரக பகுதிகளில் தடுப்பூசி டோக்கன் பெற கிராம மக்கள் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கோவை: தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வந்தாலும் மூன்றாவது அலை வீசும் என்று தெரிவித்துள்ளதால் மக்கள் தடுப்பூசி போட ஆர்வம் காட்டி வருகின்றனர். கோவை மாவட்டத்தில் தடுப்பூசி போடுவதற்கான டோக்கன்களைப் பெற்றுக்கொள்வதற்காக மணிக்கணக்கில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கடந்த மாத இறுதியில் இருந்து தொடர்ந்து குறைந்து வருகிறது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 1,891 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,41,168 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,809 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,81,201 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 26,158 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் மேலும் 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 183 பேருக்கும், ஈரோட்டில் 121 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்திலேயே கோவையில் கொரோனா தொற்று அதிகமாக உள்ள நிலையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏராளமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதே வேளையில், தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், பல்வேறு முகாம்கள் செயல்படாத சூழல் உருவாகியுள்ளது.
கோவையில் மாநகராட்சி பகுதிகளில் தட்டுப்பாடு நிலவுவதால் முகாம்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஊரக பகுதிகளில் மட்டும் ஒவ்வொரு மையத்திற்கும் தலா 250 முதல் 300 ஊசிகள் வழங்கப்பட்டது.
கடந்த இரு தினங்களாக ஊரக பகுதிகளில் தடுப்பூசிகள் செலுத்தப்படாத நிலையில் இன்று 70 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதற்காக கோவை தொண்டாமுத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட விராலியூர், தாளியூர் , தென்னமநல்லூர் ஆகிய மையங்களில் காலை 8 மணிக்கு வந்த கிராம மக்கள் டோக்கன் பெற முந்தியடிக்க கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தி கொள்ள வேலைக்கு செல்லாமல் சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவிற்கு காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்துக்கு இதுவரை 1 கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் வந்துள்ளன. இதில் தற்போது 3 லட்சத்துக்கு 42 ஆயிரத்து 820 தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பு உள்ளன. கையிருப்பு உள்ள தடுப்பூசிகள் 20.07.2021 அன்று மதியம் வரை மட்டுமே வரும் என தமிழக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.