கொடநாடு கொலை வழக்கு.. ”தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிக்கனும்” மாஜி எம்எல்ஏ ஆறுக்குட்டி பரபரப்பு!
கோவை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும் என்று முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை தீவிரமடைந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்கி ஓய்வு எடுக்கும் கோடநாடு பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு காவலாளி கொல்லப்பட்டு, அங்கிருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
இந்த வழக்கில் தொடர்புடைய கனகராஜ், சயான், ஜெம்சீர் அலி, மனோஜ் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய சிலர் மர்மமான முறையில் சாலை விபத்துகளில் உயிரிழந்தனர். அதிமுக ஆட்சிக்கு பின், திமுக ஆட்சிப் பொறுப்பேற்றபோது, கொடநாடு வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
இறுதிக்கட்டத்தை எட்டும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு.. டிடிவி தினகரன் நண்பரிடம் விசாரணை!
தொடரும் விசாரணை
இதனைத்தொடர்ந்து கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகரின் மேற்பார்வையின் கீழ் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பாக, ஜெயலலிதாவின் தோழியான சசிகலா மற்றும் அவரது உறவினர் விவேக், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி, அவரது உறவினர்கள் மற்றும் அதிமுக பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல்
இதனிடையே கொடநாடு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தமிழக அரசு தரப்பில் பல்வேறு பதில்கள் அளிக்கப்பட்டது. அதில், விசாரணை நடத்தப்பட்டதில் மூடி மறைக்கப்பட்ட பல விபத்துக்கள் மற்றும் புதிய தகவல்கள் கிடைத்துள்ளது. இதனால் இந்த வழக்கு விசாரணைக்கு கால நிர்ணயம் செய்யக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டார். இதனால் கொடநாடு வழக்கு மீதான கவனம் அதிகரித்தது
ஆறுக்குட்டி பேட்டி
இதனிடையே அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி, அண்மையில் திமுகவில் இணைந்தார். இந்த நிலையில் கொடநாடு வழக்கு தொடர்பாக ஆறுக்குட்டி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், கொடநாடு வழக்கில் தொடர்புடைய உயிரிழந்த கனகராஜ் என்னிடம் ஓட்டுநராக பணியாற்றியவர். இதனால் கொடநாடு வழக்கு தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் என்னிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டனை அனுபவிப்பார்கள். அதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
யாரிடம் விசாரணை?
என் குடும்பத்தில் இருந்து என் மகன், என் உதவியாளர், என் சகோதரர் ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். என்னிடம் இரண்டு ஆண்டுகளாக கனகராஜ் பணியாற்றியுள்ளார். எதற்காக இப்படி செய்தார் என்று தெரியவில்லை. கொடநாடு வழக்கில் நான் குற்றவாளியாக இருந்தாலும் முதலமைச்சர் ஸ்டாலின் நிச்சயம் என் மீது நடவடிக்கை எடுப்பார். ஆனால் எனக்கு எந்த பயமும் இல்லை. ஏனென்றால் என் மீது தவறு இல்லை என்று தெரிவித்துள்ளார்.