எல்லா பக்கமும் சுத்து போட்ட ஸ்டாலின்.. வேலுமணிக்கு ‘செக்’- இன்று கோவையில் இறங்கும் டேவிதார் கமிஷன்!
கோவை: கடந்த அ.தி.மு.க ஆட்சியில், ஒன்றிய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டம், சென்னை, கோவை மதுரை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாநகராட்சிகளில் செயல்படுத்தப்பட்டது.
இந்தத் திட்டத்தில் பல கோடிக்கணக்கில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. முந்தைய ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக செயல்பட்ட எஸ்.பி.வேலுமணி இதில் பெரும் தொகையை முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
மு.க.ஸ்டாலின், தேர்தலுக்கு முன்பே, தி.மு.க ஆட்சி அமைந்தபிறகு எஸ்.பி.வேலுமணியின் ஸ்மார்ட் சிட்டி ஊழல் குறித்து விசாரிக்கப்பட்டு அவர் சிறைக்கு அனுப்பி வைக்கப்படுவார் எனப் பேசி வந்தார்.
அ.தி.மு.க - அ.ம.மு.க இணைப்பு: சசிகலா முயற்சிகள் தோல்வியடைவது ஏன்?
டேவிதார் கமிஷன்
தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ஸ்மார்ட் சிட்டி ஊழல் முறைகேடு குறித்து விசாரிப்பதற்காக ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷனை தமிழக அரசு அமைத்தது. டேவிதார் 3 மாதங்களுக்குள் தனது விசாரணை அறிக்கையை அரசிடம் சமர்ப்பிப்பார் எனவும் தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி, டேவிதார், ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்ட மாநகராட்சிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். 3 மாதங்களே அவகாசம் கொடுக்கப்பட்டிருப்பதால் இந்த விசாரணை முழு நாளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருப்பூரில் ஆய்வு
நேற்று திருப்பூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை டேவிதார் ஆய்வு செய்தார். திருப்பூர் பேருந்து நிலையம், டவுன்ஹால் மாநாட்டு அரங்கம் உள்ளிட்ட கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் ஆய்வு செய்தார். பணிகள் நிறைவடைந்த பூங்காக்கள், சாலைகள், ஆகியவற்றையும் பார்வையிட்டார்.
திருப்பூரில் நேற்று காலை தொடங்கிய இந்த ஆய்வு மாலை வரை நீடித்தது. ஆனாலும், ஆய்வு முடிவடையாததால் இரண்டாவது நாளாக இன்றும் ஆய்வு தொடரும் என்றும் மதியம் வரை நடக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
கோவையில் இன்று
திருப்பூரில் மதியத்திற்குள் ஆய்வு முடிவடைந்தால் கோவையில் மதியம் தொடங்கி நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. கோவை மாநகராட்சியில், சுமார் 1,000 கோடி ரூபாய்க்கு, 56 பணிகள் திட்டமிடப்பட்டன. அவற்றில் பாதி முடிவடைந்துள்ளன. அனைத்துத் திட்டங்களிலும், டெண்டரிலும், கட்டுமானப் பணிகளிலும் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
கோவையில் இன்று டேவிதார் ஆய்வு மேற்கொள்ளவிருப்பதால் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மட்டுமல்லாமல், மாநகராட்சி அதிகாரிகளும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
வேலுமணி மீது இறுகும் பிடி
முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை நோக்கிச் செல்லும் அதே நேரத்தில், அவர் மீதான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையும் இறுகி வருகிறது. இந்த நேரத்தில் கோவை மாநகராட்சியில் டேவிதார் கமிஷனும் விசாரணைக்கு இறங்கியுள்ளதால் கிட்டத்தட்ட, எஸ்.பி.வேலுமணி சுற்றிவளைக்கப் பட்டுள்ளார்.
வேலுமணிக்கு செக்
வருமானத்தை விட அதிகமாக, 58 கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமான இடங்கள் அவரது உறவினர்கள், நண்பர்கள், பினாமிகள் வீடு, அலுவலகம் என, 59 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சில மாதங்களுக்கு முன்பு சோதனை நடத்தினர்.
அப்போதே, மாநகராட்சி அதிகாரிகள் சிலரது வீடுகளிலும் ரெய்டு நடத்தப்பட்டது. இரண்டு முக்கிய அதிகாரிகள் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
இனி தப்பிக்க முடியாது
டேவிதார் விசாரணை கமிஷனில், ஸ்மார்ட் சிட்டி முறைகேடுகள் குறித்த மதிப்பு வெளியானால், அது முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்களே வாயைப் பிளக்கும்படியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும் எஸ்.பி.வேலுமணிக்கு காப்பு மாட்ட தி.மு.க அரசு தயாராகிவிடும் என தி.மு.கவினர் தெரிவிக்கின்றனர்.