தமிழக ஆளுநர் தகவல் கேட்டதில் தவறில்லை.. அனைத்தையும் அரசியலாக்குவதா?- புதுவை ஆளுநர் தமிழிசை
கோவை: தமிழகத்தில் எல்லாமே அரசியல் ஆக்கப்படுகிறது என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி உள்ளார். சில நாட்களுக்கு முன்பு அரசு அதிகாரிகளுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பிய தமிழக தலைமை செயலாளர் இறையன்பு ''"தமிழக ஆளுநர் கேட்கும்போது துறைசார்ந்த விவரங்களை வழங்குவதற்கு அரசு செயலாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்'
தலைமைச் செயலாளர் செய்திருந்த அறிவிப்பு அரசியல் சர்ச்சையாக மாறியது. தமிழக அரசியலில் ஆளுநர் தலையீடுகிறார் என்று செய்திகள் வேகமாக பரவின. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தொடங்கி பலரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
வழக்கமான நடைமுறை
''இது மாநில அரசு பின்பற்றும் வழக்கமான நடைமுறைதான்; ஆனால், தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு விட்டது'' என்று தலைமைச்செயலாளர் இறையன்பு விளக்கம் கொடுத்து இருந்தார். ஆனால் இந்த விவகாரம் இன்னும் பற்றி எரிந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கோவையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
தமிழிசை சவுந்தரராஜன்
அப்போது தமிழக அரசின் நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுகிராரோ? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்கள். இதற்கு பதில் அளித்து தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:- தமிழகத்தில் எல்லாமே அரசியல் ஆக்கப்படுகிறது. மாநில அரசின் செயல் திட்டம் குறித்து ஆளுநர் தகவல் கேட்டது தமிழகத்தில் சர்ச்சையாகி உள்ளது.
நானும் தகவல்கள் கேட்டு இருக்கிறேன்
தெலுங்கானா மற்றும் புதுச்சேரி அரசுகளிடம் நானும் தகவல்கள் கேட்டு இருக்கிறேன். அடுத்த மாதம் 11-ம் தேதி டெல்லியில் நடைபெறும் ஆளுநர்கள் மாநாட்டில் மத்திய அரசுக்கு கொடுப்பதற்காக மாநில அரசின் செயல் திட்டங்கள் குறித்த தகவல்கள் பெறப்படுகிறது. இது எதார்த்தமாக இயல்பாக நடந்தது. ஆனால் இதை தேவையில்லாமல் அரசியல் ஆக்குகிறார்கள்.
முழு ஒத்துழைப்பு வேண்டும்
புதுச்சேரி மற்றும் தெலுங்கானா அரசுகள் ஆளுநருக்கு தகவல் கொடுப்பதில் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றன. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கொடுக்காமல் இருக்கும் கட்சிகள் புதுவையில் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என பேசி வருகின்றனர் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.