மதமென பிரிந்தது போதும்.. கோவையில் இணைந்த இந்து - முஸ்லிம்! மயிலந்தீபாவளியில் ஒற்றுமை கட்டிய மக்கள்
கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள வடசித்தூரில் மத ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் இன்று கொண்டாடப்பட்ட மயிலந்தீபாவளியில் இந்துக்கள், முஸ்லிம்கள் பெரும் திரளாக கலந்துகொண்டு மகிழ்ந்தனர்.
நாடு முழுவதும் சாதி, மதத்தை அடிப்படையாக கொண்டு வன்முறைகளும், கலவரங்களும் தூண்டப்பட்டு வருகின்றன. இதனால் அப்பாவி மக்கள் உயிர்களையும், பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் இழந்து வருகின்றனர்.
மத நல்லிணக்க பூமியான தமிழகத்தில் உள்ள கோவையிலும் மதபதற்றத்தை தூண்டும் வகையில் விரும்பத்தகாத சம்பவங்கள் சமீப காலமாக தொடந்து நடைபெற்று வருகிறது.

மயிலந்தீபாவளி
இந்த நிலையில் இதே கோவை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத நல்லிணக்க நிகழ்வு நடைபெற்று உள்ளது. பொள்ளாச்சியை அடுத்த நெகமம் பகுதியில் உள்ள வடசித்தூர், செல்லப்பகவுண்டன்புதூர், குரும்பபாளையம், சமத்துவபுரம் ஆகிய கிராம மக்கள் பல தலைமுறைகளாக தீபாவளிக்கு மறுநாள் மயிலந்தீபாவளி என்ற பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

மதநல்லிணக்கம்
இந்த நாளில் புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி மகிழ்வதுடன் இஸ்லாமியர்களும் இந்த கொண்டாட்டத்தில் தங்களை அதிகளவில் இணைத்துக் கொள்கின்றனர். இஸ்லாமிய குடும்பத்தினர் அதிகளவில் வசித்து வரும் இப்பகுதியில் இந்துக்களும் முஸ்லிம்களும் சகோதரத்துவத்துடன் பழகி வருகின்றனர். இதனால் ஆண்டு தோறும் மயிலந்தீபாவளி கொண்டாட்டத்தில் முஸ்லிம்களும் கலந்து கொள்கின்றனர்.

புதுமணப்பெண்கள்
இந்து, முஸ்லிம் மக்கள் ஒற்றுமை உணர்வுடன் மயிலந்தீபாவளியை கொண்டாடி மத்தாப்பூ, பட்டாசு, சரவெடி வெடித்து மகிழ்வார்கள். வடசித்தூர் கிராமத்தில் திருமணமாகி சென்ற பெண்கள் புகுந்த வீட்டில் தீபாவளியை கொண்டாடிவிட்டு தாய் வீட்டில் நடக்கும் மயிலந்தீபாவளிக்கு விருந்தினராக வந்து கொண்டாடுவது பாரம்பரிய பழக்கமாக உள்ளது.

திருவிழா
இதற்காக வடசித்தூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே ராட்டினங்கள் உள்பட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டன. அத்துடன் இனிப்பு, பலகார கடைகள், வளையல் கடைகளுடன் ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது. குறிப்பாக இந்த மயிலந்தீபாவளியில் அரசியல் கட்சியினர், திருவிழா கமிட்டி என்று எதுவும் இல்லாமல் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications