ஆடைக்கட்டுப்பாடா?.. “அது பெண்கள் விருப்பம்”.. ஆளுநர் தமிழிசைக்கு எம்பி கனிமொழி சுளீர் பதிலடி!
கோவை: சமீபத்தில் கோவைக்கு வந்திருந்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு அவசியம் என்று கூறியிருந்தார்.
கடந்த நூற்றாண்டுகளில் சொன்ன பழமைவாத கருத்துக்களை தற்போது தமிழிசை கூறியுள்ளதாக முற்போக்கு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில் இன்று கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கனிமொழி ஆடை கட்டப்பாடு குறித்த தமிழிசையின் கருத்துக்கு பதிலளித்துள்ளார்.

சிறப்புரை
கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில் '21ம் நூற்றாண்டின் உயர்கல்விக்கு மாணவிகளை தயார்ப்படுத்துதல்' எனும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றிருந்தார். இதில் அவர் சிறப்புரையாற்றுகையில், புதிய கல்விக்கொள்கை குறித்தும், மாணவிகளின் கல்வி குறித்தும் உரையாற்றியிருந்தார்.

ஆடைக்கட்டுப்பாடு
மேலும், "பெண்கள் சில கட்டுப்பாடுகளை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக ஆடைக் கட்டுப்பாடு அவசியம். பெண்கள் ஆடைகளை குறைப்பதை தவிர்த்து அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். தமிழ் கலாச்சாரம்தான் உலகில் சிறந்தது. சேலை கட்டுவது ஒரு மார்டன் ஸ்டைல் என்பதை பெண்கள் உணர வேண்டும். நமது கலாச்சார ஆடைகளை அணிய வேண்டும்." என்று கூறியிருந்தார். ஆடைக்கட்டுப்பாடு குறித்து ஏற்கெனவே பல விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில் தமிழிசையின் இந்த கருத்து பரபரப்பாக பேசப்பட்டது.

மொழி
இந்நிலையில் இது குறித்து கோவையில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசிய திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, "ஆடை என்பது அவரவர் விருப்பம்" எனக் கூறியுள்ளார். அவர் தனது பேட்டியில் கூறியுள்ளதாவது, "மொழி என்பது என்னுடைய அடையாளம். முதலமைச்சர் கூறியது போல இன்னொரு மொழிப்போர் வந்துவிடக்கூடாது என்பதுதான் எல்லோருடைய விருப்பம். மொழிகளை பொறுத்த அளவில் உலகத்துடன் தொடர்பு கொள்ள ஆங்கிலம் அவசியம். வீட்டில் பேசுவதற்கு தாய்மொழி வேண்டும்.

பதில்
அண்ணா சொன்னதைப்போல வீட்டிற்கு ஒரு கதவு இருந்தால் போதுமானது." என்று கூறினார். அப்போது, ஆடைக்கட்டுப்பாடு தொடர்பாக தமிழிசையின் கருத்து குறித்து கேள்வியெழுப்பியதற்கு, "பெண்கள் என்ன உடை அணிய வேண்டும் என்று அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் அது அலங்காரமாக இருந்தாலும் சரி ஆடையாக இருந்தாலும் சரி அடுத்தவர்கள் அல்ல" என்று கூறியுள்ளார். கனிமொழியின் இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications