கோவை பரபரப்பு.. போலீஸ் டிசிபியிடமே அத்துமீறிய ஆர்எஸ்எஸ் தொண்டர்கள்.. பாய்ந்தது வழக்கு
கோவையில் காவல்துறையினர் அளித்த புகாரின் பேரில் ஆர்.எஸ்.எஸ். மாவட்ட செயலாளர் முருகன், பாஜகவை சேர்ந்த காளிதாஸ், இந்து முன்னணியை சேர்ந்த கோவிந்தன், ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த அருண், கருப்புசாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு
கோவை: காவல் துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த இந்து அமைப்புகளை சேர்ந்த 5 பேர் மீது பீளமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ். மாவட்ட செயலாளர் முருகன், பாஜகவை சேர்ந்த காளிதாஸ், இந்து முன்னணியை சேர்ந்த கோவிந்தன், ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த அருண், கருப்புசாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
கோவை விளாங்குறிச்சி பகுதியில் உள்ள தர்மசாஸ்தா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பயிற்சி முகாம் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளியின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகம் உட்பட பல்வேறு அமைப்பைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் பள்ளியின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்ற நபரை இந்து முன்னணியினர் தாக்கினர். இதுதொடர்பாக அளித்த புகாரின் பேரில் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 3 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கோவை கல்வி கூடங்கள் ஆர்எஸ்எஸ் ஷாகா வன்முறை பயிற்சி கூடமா? எதிர்த்தவர்கள் கைது ஏன்? கி. வீரமணி சுளீர்
புகார் கொடுத்த தபெதிக அமைப்பு
நேற்றைய தினம் தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், மக்கள் அதிகாரம் உட்பட பல்வேறு அமைப்பினை சேர்ந்தவர்கள் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதாவிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில் அரசு மற்றும் தனியார் பள்ளி வளாகங்களில் மதவெறியைத் தூண்டும், பிரிவினையை ஏற்படுத்தும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்க கூடாது எனவும் வலியுறுத்தினர்.
போலீஸ் குவிப்பு
இதனிடையே நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம் நடைபெறும் தனியார் பள்ளி முன் குவிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அங்கு பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அந்த பள்ளியின் முன்பு இருந்த கடைகள், பேக்கரிகள் உள்ளிட்டவைகள் மூடப்பட்டன. இதனால் விளாங்குறிச்சி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
முற்றுகைப் போராட்டம்
துணை ஆணையர் ஜெயச்சந்திரன் தலைமையில் கூடுதலாக 50க்கும் மேற்பட்ட போலீசார் அந்த வழியாக வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதித்தனர். முற்றுகை போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினரை காவல் துறையினர் கைது செய்தனர்.
தள்ளுமுள்ளு
இதனிடையே பள்ளி வளாகத்திற்குள் செல்ல முயன்ற துணை ஆணையர் ஜெயச்சந்திரனை, இந்து அமைப்பினர் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல் துறையினருக்கும், இந்து அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்நிலையில் காவல் துறை அதிகாரிகளை பள்ளிக்குள் செல்ல விடாமலும், பணி செய்ய விடாமலும் தடுத்த இந்து அமைப்புகளை சேர்ந்த 5 பேர் மீது பீளமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஐவர் மீது வழக்குப் பதிவு
உதவி ஆய்வாளர் ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில் ஆர்.எஸ்.எஸ். மாவட்ட செயலாளர் முருகன், பாஜகவை சேர்ந்த காளிதாஸ், இந்து முன்னணியை சேர்ந்த கோவிந்தன், ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த அருண், கருப்புசாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.