தமிழ்நாட்டில் இனி தனியார் மருத்துவமனைகளிலும்... இலவசமாக கொரோனா தடுப்பூசி.. அமைச்சர் மா.சு அதிரடி
கோவை: தமிழ்நாட்டில் தனியார் மருத்துவமனைகள் மூலம் இலவசமாக கொரோனா தடுப்பூசி போட முடிவு செய்துள்ளதாகச் சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மே மாதங்களில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. இதையடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து வைரஸ் பாதிப்பு மெல்லக் குறையத் தொடங்கியது.
தற்போது மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 2000க்கும் கீழாகவே உள்ளது. இருந்தாலும்கூட, கொரோனா மீண்டும் உயர வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.
'விமானத்தை'விட செம வேகம்..! 600 கிமீ வேகத்தில் செல்லும் மிதக்கும் ரயில்.. சீனாவின் அடுத்த பாய்ச்சல்
அமைச்சர் ஆய்வு
குறிப்பாக, அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதேபோல ஜிகா வைரஸ் தொற்றும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தமிழ்நாடு கேரள எல்லையில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இரு மாநில எல்லையில் அமைந்துள்ள கோவை வாளையாறு சோதனைச் சாவடியில் ஆய்வு செய்தார்.
வேக்சின் ஒதுக்கீட்டில் பாகுபாடு?
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், "எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகளில் போலீசாருடன் இணைந்து சுகாதாரத் துறை அதிகாரிகள், வருவாய்த் துறையினரும் சோதனை பணிகளில் ஈடுபட்டுள்ளனர். வேக்சின் ஒதுக்கீட்டில் சென்னைக்கு அடுத்து கோவைக்குத் தான் அதிகளவில் தடுப்பூசிகள் கொடுக்கப்பட்டுள்ளன. கோவைக்கு மட்டும் 10.97 லட்சம் வேக்சின் டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஜிகா வைரஸ்
இப்போது ஜிகா வைரஸ் குறித்த அச்சமும் அதிகரித்து வருகிறது. இதனால் இரு மாநில எல்லையில் அமைந்துள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் நடைபெறுகிறது. அதேபோல மாநிலத்தில் கொசு ஒழிப்புப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக மட்டும் 21 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன,
இலவசமாகத் தடுப்பூசி
மேலும், தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போட முடிவு செய்துள்ளோம். இந்தத் திட்டமும் கோவையில் தான் தொடங்கப்படவுள்ளது. தனியார் நிறுவனங்களின் சிஎஸ்ஆர் மூலம் மக்களுக்குத் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக வேக்சின் போடப்படும். கோவையில் தொடங்கப்பட்டு, மாநிலம் முழுவதும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும். அதேபோல தனியார் மருத்துவமனைகளுக்கு முறைகேடாக வேக்சின் வழங்கப்பட்டதாக எழுந்த புகார் நிரூபிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் வேக்சின்
தமிழ்நாட்டிற்கு இதுவரை 1.80 கோடி வேக்சின்கள் வந்துள்ளன. ஆனால் மாநிலத்திற்கு மொத்தம் 12 கோடி வேக்சின்கள் தேவை. எனவே மத்திய அரசு 10 கோடி வேக்சின்களை தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டும். அதேபோல தடுப்பூசி மையங்களில் எந்த அரசியல் கட்சியின் தலையீடும் இல்லை. அப்படி ஏதேனும் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.