கோவை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டியது அவசியம்.. எம்எல்ஏ ஈஸ்வரன்
கோவை: கோவை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என சட்டசபை உறுப்பினர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவினாசி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் எண்ணியது எய்துவோம் என்ற தலைப்பில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியும் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளரும் எம்எல்ஏவுமான ஈஸ்வரன் கூறியதாவது: கோயம்புத்தூர் மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை வேகப்படுத்த முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பொறுப்பு கொடுத்துள்ளார். அதை அவர் சரியாக செய்து வருகிறார்.
நாடாளுமன்றத்தில் விவாதங்களை எதிர்கொள்ள பிரதமர் மோடிக்கு தைரியம் இல்லை- ராகுல் காந்தி கடும் தாக்கு
விமான நிலையம்
கோயம்புத்தூர் மாவட்ட விமான நிலைய விரிவாக்கம் என்பது உடனடியாகச் செய்யப்பட வேண்டிய ஒன்று. இது கோயம்புத்தூரின் வளர்ச்சிக்கு வித்திடும். இதன் மூலம் கோவையிலிருந்து நேரடியாக வெளிநாடுகளுக்கு பயணிக்க வாய்ப்புள்ளது. நேரடி ஏற்றுமதி இறக்குமதி வாய்ப்புள்ளது.
முதல்வரின் நோக்கம்
இதனால் தொழில் வளர்ச்சி அடையும். இதுதான் முதல்வரின் நோக்கமாக உள்ளது. அது மட்டுமின்றி ஆனைமலை ஆறு நல்லாறு திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். நொய்யல் நதியை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட வேண்டும். ஜவுளித் தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு நூல் விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
கோவை, அதை சுற்றியுள்ள பகுதிகளில் பொறியியல் தொழிற்சாலைகளைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். கோயம்புத்தூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. பொள்ளாச்சியைத் தலைநகராகக் கொண்டு இன்னொரு மாவட்டம் வேண்டும் என தெரிவித்திருந்தார் ஈஸ்வரன்.
செந்தில் பாலாஜி
இதைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார். அவர் கூறுகையில் கோவையில் 300 சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளதாக குற்றம்சாட்டுபவர்கள் அந்தச் சாலைப் பணிகள் குறித்த பட்டியலை இரண்டு நாட்களுக்குள் வெளியிட வேண்டும் என்றார்.