கோவையில் தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீச்சு.. ஹைஅலர்ட்டில் போலீஸ்.. களமிறங்கிய அதிவிரைவு படையினர்!
கோவை: கோவை பாஜக அலுவலகம் உள்பட அந்த கட்சியின் நிர்வாகிகளின் கடைகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட நிலையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதிவிரைவுப்படையினர் களம் இறக்கப்பட்டு கொடி அணிவகுப்பு நடத்தினர்.
திமுக எம்பி ஆ ராசா இந்து மதம்பற்றி சில கருத்துகளை தெரிவித்தார். இது சர்ச்சையான நிலையில் பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனை கண்டித்து பாஜக சார்பில் கோவையில் போராட்டங்கள் நடத்தப்பட்டது. ஆ ராசாவை மிரட்டியதாக கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே தான் நேற்று என்ஐஏ சார்பில் கோவையில் சோதனை நடத்தப்பட்டது. நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு சொந்தமான அலுவலகங்கள் மீது நடந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் கோவையில் நடந்தன.
பெரிய சதி? கோவை, பொள்ளாச்சி, ஈரோட்டை உலுக்கிய பெட்ரோல் குண்டு வீச்சு.. களமிறங்கிய
பெட்ரோல் குண்டு வீச்சு
இதற்கு மத்தியில் தான் நேற்று இரவு கோவையில் உள்ள பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. கோவை சித்தாபுதூர் பகுதியில் மாநகர பாஜக அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் மீது தான் நேற்று இரவு பெட்ரோல் நிரப்பிய பாட்டில் வீசப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த பெட்ரோல் குண்டு வெடிக்கவில்லை. இதனால் அசம்பாவித சம்பங்கள் எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் காட்டுத்தீயாக பரவியது. இதனால் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல் குண்டு வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோஷமிட்டனர். இதுபற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிர்வாகிகளின் கடைகளில் பெட்ரோல் குண்டு
இந்த பிரச்சனை முடிவுக்கு வராத நிலையில் தான் வேறு சில இடங்களிலும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. கோவை ஓப்பணக்கார வீதியில் உள்ள துணிக்கடை மற்றும் 100 அடி சாலையில் உள்ள வெல்டிங் கடை மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த கடை ரத்தினபுரி பாஜக மண்டலத் தலைவர் மோகனுக்கு சொந்தமானதாகும். இதுதவிர மேட்டுபாளையத்தில் உள்ள பிளைவுட் கடை மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அதோடு மேலும் பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் பாஜக நிர்வாகிகள் பொன்ராஜ், சிவா மற்றும் இந்து முன்னணி வார்டு பொறுப்பாளர் சரவணக்குமார் ஆகியோர் வசித்து வருகின்றனர். இன்று அதிகாலையில் அடையாளம் தெரியாத நபர்கள் பொன்ராஜ் மற்றும் சிவாவின் கார் கண்ணாடிகளை கோடாரியால் அடித்து உடைத்துள்ளனர். இதேபோல சரவணக்குமார் என்பவரின் ஆட்டோ கண்ணாடி உடைக்கப்பட்டது.
3 பேரிடம் தீவிர விசாரணை
கோவை மாவட்டத்தில் அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்கள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தின. இதுதொடர்பாக போலீஸ் நிலையங்களில் புகார்கள் பதிவு செய்யப்பட்டன. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக 3 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே தான் கோவையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டம் -ஒழுங்கை பாதுகாப்பும் பணியில் தமிழக அரசு தீவிரமான நடவடிக்கையை எடுத்துள்ளது.
அதிவிரைவுப்படையில் அணிவகுப்பு
அதன்படி கோவை காந்திபுரத்தில் ‛ரேப்பிட் ஆக்சன் போர்ஸ்' எனும் அதிவிரைவுப்படையில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் காந்திபுரத்தில் கொடி அணிவகுப்பு நடத்தினர். அதிவிரைவுப்படையினர் போலீசார் என 100க்கும் அதிகமானவர்கள் காந்திபுரத்தில் மக்கள் அதிகம் கூடும் இடத்தில் இந்த ஊர்வலத்தை நடத்தினர். மேலும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படையினர் காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையத்தில் தொடங்கி கிராஸ் கட் ரோடு வழியாக ராம்நகர் சென்று மீண்டும் காந்திபுரம் சென்றடைந்தனர்.