34 நாட்களுக்கு பின்.. கோவைக்கு சில நல்ல செய்தி.. பேக்கடிக்கும் ஆக்டிவ் கேஸ்கள்.. செம்ம மாற்றம்!
கோவை: கொரோனா தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட கோவைக்கு நீண்ட நாளைக்கு பிறகு நல்ல செய்தி வந்துள்ளது. நோய் தொற்று எண்ணிக்கை வெகுவாக இன்று குறைந்திருக்கிறது. அத்துடன் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையும் முதல்முறையாக குறைந்துள்ளது.
கடந்த வாரம் வரை தமிழத்திலேயே கோவை. கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றது. குறிப்பாக தமிழகத்திலேயே அதிக கொரோனா தொற்று பாதிப்பை சந்தித்த மாவட்டமாக (சென்னையை முந்தி) கோவை மாறியது.
சென்னையில் கடந்த வாரங்களில் வேகமாக குறைய தொடங்கிய கொரோனா, கோவையில் தினசரி புதிய உச்சத்தை தொட ஆரம்பித்தது. அத்தியாவசிய தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ள கோவையில் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதால் உடனே அரசு ஆக்சனில் இறங்கியது.
குறைய தொடங்கிய கொரோனா
விதிகளை மீறி அதிக ஆட்களை வைத்து வேலை செய்த தொழில் நிறுவனங்கள் ஊரடங்கு முடியும் வரை செயல்பட அரசு தடை விதித்தது. அடுத்தகட்டமாக மளிகை, காய்கறி கடைகள் உள்பட அனைத்துக்கும் தடைவிதித்து தளர்வுகளற்ற ஊரடங்கையும் தமிழக அரசு அறிவித்தது. அதேநேரம் மக்களிடையேயும் விழிப்புணர்வு அதிகரித்ததால் வீடுகளுக்குள்ளேயே இருக்க தொடங்கினர். இதன் காரணமாக தொற்று பாதிப்பு கோவையில் கடந்த சில நாட்களாக குறைய தொடங்கியது.
நோயாளிகள் அதிகம்
ஆனாலும் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை முந்தைய நாளை ஒப்பிடும் போது அடுத்த நாள் அதிகரிப்பது என்ற நிலையே இருந்தது. அதாவது குணம் அடைபவர்கள் எண்ணிக்கையைவிட தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை கோவையில் அதிகமாக இருந்தது.
கோவையில் சரிவு
இந்நிலையில் கடந்த மூன்று வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த ஆக்டிவ் நோயாளிகள் (மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள்) எண்ணிக்கை முதல்முறையாக குறைந்துள்ளது. நேற்று வரை 40577 ஆக இருந்த நோயாளிகளின் எண்ணிக்கை இன்று 39112 ஆக குறைந்துள்ளது. இன்று மட்டும் 4488 பேர்நோய் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.
கோவைக்கு நல்ல செய்தி
கோவிட் டேட்டா அனலிஸ்ட் விஜய் ஆனந்த் இதுபற்றி டேட்டாக்களுடன் வெளியிட்டுள்ள பதிவில், கோயம்புத்தூருக்கு சில நல்ல செய்திகள். உச்சத்தை எட்டி வந்த கொரோனா குறைந்துள்ளது, மேலும் ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 40,570 லிருந்து 39,112 ஆக குறைந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 34 நாட்களுக்குப் பிறகு எதிர்மறையான வளர்ச்சி தொடங்கியுள்ளது. இன்று தினசரி பாதிப்பும் 3061 ஆக குறைந்துள்ளத" என்று கூறியுள்ளார்.