மின் கட்டணத்தை தொடர்ந்து, தமிழகத்தில் பஸ் கட்டணம் உயருமாம்.. சொல்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
கோவை: தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதை போல் விரைவில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு, பின் தலைமை அலுவலகம் செல்வது, தொண்டர்களை சந்திப்பது, சுற்றுப்பயணம் மேற்கொள்வது, நிர்வாகிகளின் வீட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது என எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில் அதிமுக சார்பாக நடத்தப்படும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக எடப்பாடி பழனிசாமி கோவை மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் பொள்ளாச்சி சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு அக்கட்சியின் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர்.
நாளங்களை அறுத்து ரத்தத்தை உறிஞ்சும்..எடப்பாடி பழனிசாமிக்கு வந்ததே கோபம்! கொந்தளிப்பு ட்விட்டர் பதிவு
நீட் தேர்வு விலக்கு எப்போது?
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதில், திமுக ஆட்சிக்கு வந்த பின், நீட் தேர்வு ரத்து செய்யப்படும். அதுதான் எங்களின் முதல் பணி என்று கூறி தேர்தலின் போது பிரச்சாரம் செய்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்து 15 மாதங்கள் கடந்த பின்னரும், நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை.
இதுதான் திராவிட மாடலா?
திராவிட மாடல் என்று கூறி வரும் திமுக ஆட்சியில், அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. கமிஷன், கரப்ஷன் என்று செயல்படுகிறார்கள். இதுதான் திராவிட மாடலா என்று கடுமையாக விமர்சித்தார்.
மின் கட்டண உயர்வு
தொடர்ந்து, தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு 12 முதல் 52 சதவிகிதம் வரை அமல்படுத்தி உள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் 6 சதவிகிதம் வரை மின் கட்டணம் உயர்த்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் 2026ம் ஆண்டு மின் கட்டணம் 52 சதவிகிதமாக உயரும். இதனால் ஏழை, எளிய மக்கள் மீது பெரும் சுமையை திமுக அரசு ஏற்படுத்தி உள்ளது.
பேருந்து கட்டணம் உயரும்
அதேபோல் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஒவ்வொரு நாளும் சுமார் 200 லாரிகளில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்படுகிறது. இதனை தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது. அதேபோல் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 50 முதல் 150 சதவிகிதம் வரை வரி உயர்வை அமல்படுத்தி உள்ளனர். விரைவில் மின் கட்டண உயர்வை போல் பேருந்து கட்டணத்தையும் தமிழக அரசு விரைவில் உயர்த்தி அறிவிக்கும்.