ஈஷா மையத்தில் மாயமான பெண்.. 13 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு.. போலீஸ் விசாரணை.. கோவையில் பரபரப்பு!
கோவை: ஈஷா யோகா மையத்தில் யோகா வகுப்பிற்கு சென்ற சுபஸ்ரீ மாயமான கடந்த டிசம்பர் 18ம் தேதி மாயமானார். மாயமானதாக கூறப்படும் சுபஸ்ரீ, காரில் இறங்கி நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியது. இந்தநிலையில் கிட்டத்தட்ட 13 நாட்களுக்கு பின் சுபஸ்ரீ, விவசாய கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவினாசியைச் சேர்ந்தவர் பழனிகுமார். இவருக்கு சுபஸ்ரீ என்ற மனைவியும், 11 வயதில் மகளும் உள்ளனர். சுபஸ்ரீ தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார்.
சுபஸ்ரீ கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக ஈஷா யோகா மையத்துக்கு வந்து யோகா பயிற்சி பெற்றுள்ளார். மீண்டும் யோகா பயிற்சியில் கலந்து கொள்ள டிசம்பர் 18ம் தேதி காலை ஈசா யோகா மையத்துக்கு வந்துள்ளார். பின்னர் யோகா பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டுள்ளார்.
ஈஷா யோகா மையம்
பின்னர் சுபஸ்ரீயை அழைத்துச் செல்ல அவருடைய கணவர் பழனிகுமார் ஈஷா யோகா மையத்திற்கு வந்துள்ளார். ஆனால் பயிற்சி வகுப்பு முடிந்து அனைவரும் சென்றுவிட தனது மனைவி வராததால் அதிர்ச்சியடைந்த கணவர் வரவேற்பு அறையில் உள்ளவரிடம் தனது மனைவி குறித்து விசாரித்துள்ளார். பின்னர் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து பார்த்ததில் அவர், காலை 9:30 மணிக்கு கால் டாக்ஸியின் மூலம் ஏறி சென்றது தெரியவந்தது.
பழனிகுமார் புகார்
இதனைத் தொடர்ந்து கால் டாக்ஸி ஓட்டுநரிடன் விசாரணை மேற்கொண்ட போது சுபஸ்ரீயை இருட்டுப்பள்ளம் அருகே இறக்கிவிட்டு சென்றதாக கூறியுள்ளார். இதனால் மனைவி மாயமானது குறித்து கணவர் பழனிகுமார் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அந்தப் புகாரில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக எனது மனைவி சுபஸ்ரீ கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் சைலன்ஸ் என்ற ஒரு வார யோகா பயிற்சியில் முதல் முறையாக கலந்து கொண்டார்.
மனைவில் மாயம்
அதேபோல் கடந்த 11ம் தேதி மீண்டும் அதே வகுப்பில் கலந்து கொள்ள வேண்டி எனது மனைவியை காலை 6 மணிக்கு ஈஷா யோகா மையத்தில் விட்டுவிட்டு சென்றேன். அதன் பிறகு ஒரு வாரம் கழித்து கடந்த 18ம் தேதி அன்று காலை 11 மணிக்கு வகுப்பு முடிந்து மனைவியை கூட்டிச் செல்வதற்காக காலை 7 மணிக்கே ஈஷா யோகா மையத்தில் வந்து காத்திருந்தேன். ஆனால், 11 மணியைத் தாண்டியும் எனது மனைவி வெளியே வராததால் உள்ளே சென்று விசாரித்தேன்.
காணவில்லை
காலையிலேயே வகுப்பு முடிந்த பிறகு அனைவரும் சென்றுவிட்டனர் என தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்ததில் சுபஸ்ரீ சர்ப்ப வாசல் வழியாக ஒரு டாக்சியில் ஏறிச் செல்வது தெரியவந்தது. இந்த நிலையில், ஒரு நம்பரில் இருந்து எனது போனுக்கு ஒரு மிஸ்ட் கால் வந்திருந்தது. பிறகு அந்த நம்பருக்கு திரும்ப அழைத்தேன்.
பழனிகுமாருக்கு வந்த அழைப்பு
அதில் பேசிய நபர், ஒரு பெண் எனது கணவருக்கு பேச வேண்டும் என்று என்னுடைய போனை வாங்கி போன் செய்தார். ஆனால், அழைப்பை எடுக்காததால் செல்போனை என்னிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார் எனத் தெரிவித்தார். எனது மனைவி எங்கு சென்றார் என்று தெரியவில்லை. அக்கம்பக்கத்தில் எல்லாம் தேடிப் பார்த்தும் கிடைக்காததால், எனது மனைவி சுபஸ்ரீயை கண்டுபிடித்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
போலீஸ் விசாரணை
பழனிகுமார் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி சுபஸ்ரீயை தேடி வருகின்றனர். இதனிடையே வெள்ளை உடை அணிந்த பெண் காரில் இறங்கி வேகமாக ஓடுவது சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்தது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஆலந்தூர் காவல்நிலைய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
சடலமாய மீட்பு
இந்த நிலையில் ஈஷா மையத்தில் காணாமல் போன சுபஸ்ரீ, கோவை செம்மேடு பகுதியில் விவசாய கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுபஸ்ரீ-யின் விரலில் இருந்த ஈஷா மைய மோதிரத்தை வைத்து சுபஸ்ரீயின் சடலத்தை கணவர் பழனிகுமார் உறுதிப்படுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து மாயமான சுபஸ்ரீ சடலமாக மீட்கப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.