தமிழ் கடவுள் முருகனை இழிவுபடுத்தியுள்ளார்கள்; சூர்யாவின் பாடலை நீக்க வேண்டும் என போலீஸில் புகார்
கோயமுத்தூர்: நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் முருகக்கடவுளை இழிவுபடுத்தும் வகையில் வார்த்தைகள் அமைந்துள்ள பாடலை நீக்க வேண்டும் என அகில இந்திய நேதாஜி கட்சி புகார் அளித்துள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள படம் எதற்கும் துணிந்தவன். இந்த திரைப்படத்தில் பாடலாசிரியர் யுகபாரதி உள்ளம் உருகுதைய்யா என்ற பாடலை எழுதி உள்ளார்.
இந்த பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள், தமிழ் கடவுளான முருகனை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும், இப்பாடலை படத்திலிருந்து நீக்க கோரியும் அகில இந்திய நேதாஜி கட்சியினர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
இது குறித்து பேட்டியளித்த அக்கட்சியின் நிறுவனர் ராகுல் காந்தி, 'எதற்கும் துணிந்தவன் படத்தில் வரும் உள்ளம் உருகுதையா பாடல் வெளியாகி பல நாட்கள் ஆகிவிட்ட போதும், இன்று படம் வெளியான பிறகு தான் அதில் முருகனை இழிவுபடுத்தும் காட்சிகள் அமைந்திருப்பது தெரியவந்தது.
இந்தப் பாட்டில் தமிழ் மொழியையும், தமிழ் கடவுள் முருகரையும் இழிவு செய்திருக்கிறார்கள். ஆபாசமான வார்த்தைகளை அந்த பாடலில் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதுபோன்ற செயல் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடந்துவருகிறது. எனவே இந்தப் பாடலை உடனடியாக படத்திலிருந்து நீக்க வேண்டும்.
படத்தில் நடித்த சூர்யா, இயக்குனர் பாண்டிராஜ், இசையமைப்பாளர் டி.இமான், கடவுள் வாழ்த்து பாடல் என தெரிந்தும் இழிவுபடுத்தும் வகையில் வார்த்தைகளை அமைத்த பாடலாசிரியர் யுகபாரதி ஆகியோர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். இது குறித்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடர உள்ளோம். இவ்வழக்கு இந்து கடவுள்களையும், நம்பிக்கைகளையும், இழிவுபடுத்துவோருக்கு ஒரு பாடமாக இருக்கும் என கூறினார்.