குஜராத்திற்கு அடுத்து நாம் தான்.. இந்தியாவிலேயே டாப் ஆக ராத்திரி பகலா உழைக்கிறோம் - அமைச்சர் காந்தி
கோவை : குஜராத்திற்கு அடுத்து நாம் தான் ஜவுளித்துறையில் முன்னோடியாக இருக்கிறோம். பருத்தி சாகுபடி வேளாண்துறை உடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம் என அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார்.
பல்வேறு ஜவுளி மற்றும் பின்னலாடை அமைப்புகள் சார்பில் கோவை தென்னிந்திய பின்னலாடை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், 60வது ஜவுளி தொழில்நுட்ப கருத்தரங்கு நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டார். இந்த கருத்தரங்கில், ஜவுளி மற்றும் பின்னலாடைத் துறையின் வளர்ச்சிக்கான ஆலோசனைகள் தொழில்துறையினரால் எடுத்துரைக்கப்பட்டது.
அப்போது, பருத்தி இறக்குமதிக்கான வரியை முற்றிலும் ரத்து செய்ய தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருவதாக அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு
இந்த நிகழ்வில், சிறப்புரையாற்றிய அமைச்சர் ஆர்.காந்தி, தொழில்நுட்பம் சார்ந்த ஜவுளி உற்பத்திக்கான தேவை அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக மருத்துவம் மற்றும் பாதுகாப்புத் துறையில் தொழில்நுட்ப ஜவுளி குறித்த ஆராய்ச்சி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஜவுளி துறையில் அதிகளவு வேலைவாய்ப்புகள் உருவாகி உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், சென்னையில் நடைபெற உள்ள ஜவுளித்துறை தொழில்நுட்ப மாநாட்டிற்கு சர்வதேச அளவிலான நிறுவனங்களை அழைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

குறையை உடனே களைந்தோம்
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் ஆர்.காந்தி, "தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுகளில் ஜவுளித்துறை வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அந்த நடவடிக்கைகள் குறித்து பின்னலாடை உற்பத்தியாளர்களிடம் கேட்டால் அவர்களே சொல்வார்கள். ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் பின்னலாடை நிறுவனத்தினரிடம் அவர்களது குறைகள் கேட்டறியப்பட்டது. பிரதான குறையாக செஸ் வரியை முன்வைத்தனர். அடுத்த இரண்டு மாதங்களில் அது ரத்து செய்யப்பட்டது.

தனித்தனி ஆணையர்
ஜவுளி, நெசவு மற்றும் கூட்டுறவுக்கென ஒரே ஆணையர் இருந்த நிலையில் டெக்ஸ்டைல் துறைக்கு தனியாக ஆணையர், ஜவுளித்துறைக்கு தனியாக ஆணையர் போடப்பட்டுள்ளது. ஜவுளித்துறை அமைப்புகளுடன் ஆலோசனை செய்யப்பட்டு அத்துறை மேம்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட வாரியாக திட்டங்கள் அறிவித்து செயல்படுத்தி வருகிறோம். சேலத்தில் 119 ஏக்கரில் யூனிட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஆய்வு
ஆறு மாதங்களுக்கு முன்பு இத்திட்டம் குறித்து நாங்கள் விசாரணை நடத்தி ஆய்வு செய்ததில், மானிய தொகையை கட்டடங்கள் கட்டவும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் திட்டத்தில் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்ட நிலையில் தற்போது 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளனர். அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு விண்ணப்பதாரர்கள் குறித்து ஆய்வு செய்து திட்டம் அமல்படுத்தப்படும்.

குஜராத்துக்கு அடுத்து தமிழ்நாடு
மேலும், தமிழக முதல்வர் சேலத்தில் டெக்ஸ்டைல் பூங்கா அறிவித்து 150 ஏக்கர் பரப்பளவில் சுமார் 500 கோடி மதிப்பிலான திட்டம் தயாராகி வருகிறது. இந்தியாவில் தற்போது ஜவுளி துறையில் குஜராத்திற்கு அடுத்ததாக இரண்டாவது நிலையில் தமிழகம் உள்ளது. ஜவுளித்துறை மட்டுமின்றி அனைத்து துறை மேம்பாட்டிற்காகவும் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத ஜவுளி உற்பத்திக்கு அரசு உறுதுணையாக இருக்கும்.

இந்தியாவிலேயே டாப்
ஜவுளி பயன்பாட்டிற்கான பருத்தி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பருத்திக்கான 11 சதவீத இறக்குமதி வரி தமிழக அரசின் வலியுறுத்தலின்படி நவம்பர் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதை நிரந்தரமாக நீக்க மத்திய அரசை வலியுறுத்தி உள்ளோம். யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அதை செய்வதாக மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளார். முதல்வரின் ஆணைப்படி அனைத்து துறைகளிலும் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்மாதிரியாக இருக்க இரவும் பகலுமாக உழைத்து வருகிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications