சிங்காநல்லூர் சீனிலேயே விஜய் இல்லை.. லைக், ஷேர் அரசியல் செய்கிறார்.. காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீநிதி!
கோவை: சிங்காநல்லூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கேஆர் ஜெயராம் அவரின் தொழிலை கவனிக்கவே ஆர்வம் காட்டி வருகிறார் என்று காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீநிதி விமர்சித்துள்ளார். கோவை அரசியல் சீனிலேயே விஜய் இல்லை என்று கூறியுள்ளார். படித்தவர்கள் நிறைந்த கோவையில் மக்கள் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே இருக்கும் சூழலில், கொங்கு மண்டலத்தில் பிரச்சாரம் களைகட்டி இருக்கிறது. கடந்த முறை கோவையில் உள்ள 10 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது. இம்முறை பாதி தொகுதிகளையாவது கைப்பற்ற வேண்டும் என்பதில் திமுக கூட்டணி தீவிரமாக இருக்கிறது. அந்த வகையில் கோவை சிங்காநல்லூர் தொகுதி காங்கிரஸ்க்கு அளிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி சார்பாக ஸ்ரீநிதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக வேட்பாளர் ஜெயராமை எதிர்த்து களம் காணும் ஸ்ரீநிதி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த முறை இதே தொகுதிகளில் திமுக வேட்பாளர் கார்த்திக் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி வாய்ப்பை இழந்தார். அதனை இம்முறை சரிகட்டி வெல்ல வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் மும்முரமாக இருக்கின்றனர்.
இந்த நிலையில் ஸ்ரீநிதி ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், முதல்முறையாக தேர்தல் களத்திற்கு வந்துள்ளேன். எங்களின் பிரச்சாரம் அமோகமாக இருக்கிறது. எங்கள் கூட்டணி கட்சியினர் அனைவரும் சேர்ந்து பெண் வேட்பாளருக்கு நல்ல வரவேற்பை அளித்து வருகின்றனர். தொழிற்சங்கங்கள் அதிகமுள்ள பகுதி இது.
திமுக என்றும் காங்கிரஸ் கட்சியுடன் நட்புடன் இருக்கிறது. திமுக - காங்கிரஸ் இடையிலான உறவு 25 ஆண்டுகளுக்கு மேலாக நெருக்கமாக உள்ளது. திமுகவினர் அத்தனை நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் தங்களின் வேட்பாளராக எண்ணி ஆதரவாக நிற்கிறார்கள். திமுக மட்டுமல்லாமல் 23 கூட்டணி கட்சியினரும் ஆதரவாக இருக்கின்றனர்.
விஜய்யை பொறுத்தவரை சோசியல் மீடியா லைக், ஷேரில் வெல்லக் கூடியவர். ஆனால் கள அரசியல் என்பது வேறு மாதிரியானது. எங்களின் தொண்டர்களும், நிர்வாகிகள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். நாங்கள் மக்கள் பணியில் ஈடுபடுகிறோம். அதன் காரணமாகவே வாக்காளர்கள் எங்களை வீட்டிற்கு அழைத்து காபி கொடுக்கும் அளவிற்கு பழகுகிறார்கள்.
முதல்வர் ஸ்டாலினின் திட்டங்களை ஒவ்வொரு வீடாக சென்று சேர்த்து வருகிறோம். விஜய்க்கும் அரசியலுக்கும் சம்மந்தமே கிடையாது. கோவையில் படித்தவர்கள் அதிகம்.. அதனால் விஜய் பக்கம் மக்கள் செல்ல மாட்டார்கள். அதிமுக வேட்பாளர் கேஆர் ஜெயராம் சிங்காநல்லூர் தொகுதியிலேயே இருப்பதில்லை. அவரின் தொழிலை கவனிப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டி வருகிறார்.
மகளிர் உரிமைத் தொகை, முதியோர் உரிமைத் தொகை, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்காநல்லூர் பகுதி போக்குவரத்து நெரிசல் நிறைந்த ஒன்று. அதிமுக ஆட்சியில் மேம்பாலங்களின் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. 10 ஆண்டு கால ஆட்சியில் ஏராளமான திட்டங்களை கிடப்பில் போட்டுவிட்டார்கள்.
கோவை மக்களுக்கு திமுக ஏராளமான செயல் திட்டங்களை கொண்டு வந்துள்ளது. மெட்ரோ ரயில் திட்டம் மிகவும் உபயோகமாக இருந்திருக்கும். ஆனால் அந்த திட்டத்தை மத்திய அரசு நிராகரித்துவிட்டார்கள். கோவை தெற்கு எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் மெட்ரோ திட்டத்தை மத்திய அரசிடம் கொண்டு செல்லவில்லை. செம்மொழி பூங்கா, நூலகம், அவிநாசி மேம்பாலம் என்று ஏராளமானவை கொண்டு வரப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications