“அம்மனோட சாபத்துக்கு ஆளாகாதீங்க” பக்தர்களுக்கு வித்தியாச வார்னிங்.. எங்களுக்கு வேற வழி தெரியல ஆத்தா!
கோவை : மேட்டுப்பாளையம் அருகே, கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிலை ஒட்டியுள்ள பவானியாற்றில் குளித்து விட்டு தங்களது உடைகளை ஆற்றில் வீசிவிட்டுச் சென்று விடுவதால் பெரும் நீர் மாசுபாடு ஏற்பட்டு வருகிறது.
Recommended Video
இதைத் தவிர்க்க பக்தர்களை எவ்வளவோ கேட்டுக்கொண்டும் இந்த நிலையே தொடர்ந்துள்ளது. இந்நிலையில் அங்கு வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர் பக்தர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
"அம்மனோட சாபத்துக்கு ஆளாகாதீங்க" என பக்தர்களை எச்சரிக்கும் வகையில் வித்தியாசமாக வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டால் பொதுமக்கள் வியப்படைந்துள்ளனர்.

பிரசித்தி பெற்ற கோவில்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தேக்கம்பட்டியில் உள்ள பவானி ஆற்றங்கரை ஓரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வனபத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழாவில் நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துவது வழக்கம்.

துணிகளை அங்கேயே வீசிவிட்டு
அதேபோல் அமாவாசை தினங்களில் அம்மனுக்கு விரதம் இருந்து ஆடு,கோழி உள்ளிட்டவற்றை பலியிட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவர். அதேபோல் தங்களது முன்னோர்களுக்கு பவானியாற்றங்கரை ஓரத்தில் திதி கொடுத்தும் ஆசி பெற்றுச்செல்வதும் வழக்கமாக உள்ளது. அவ்வாறு திதி கொடுக்கவும், நேர்த்திக்கடனை செலுத்தவும் வரும் பக்தர்கள் கோவிலை ஒட்டியுள்ள பவானியாற்றில் குளித்து விட்டு தங்களது உடைகளை ஆற்றில் வீசிவிட்டுச் சென்று விடுகின்றனர்.

நீர் மாசுபாடு
இதனால் நீர் மாசுபடுவதோடு அதில் வசிக்கும் மீன்களும் செத்து மிதக்கின்றன. இதுகுறித்து கோவில் நிர்வாகத்தின் சார்பில் விளம்பர பலகை வைத்தும் சிலர் தங்களது உடைகளையும், பிளாஸ்டிக் பொருட்களையும் ஆற்றில் வீசிவிட்டுச் செல்வது தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் கோவிலை ஒட்டியுள்ள பவானி ஆற்றங்கரையோரத்தில் வைக்கப்பட்டுள்ள மற்றொரு பிளக்ஸ் பேனர் பக்தர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

வித்தியாசமான பேனர்
அந்த பேனரில், "அம்மனோட சாபத்திற்கு ஆளாகாதீங்க.. உடைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை குப்பையில் போடாதீங்க.. கூடையில் போடுங்க.. பழைய ஆடைகளும் ஏழைகளுக்கு பயன்படும்.. குப்பைகளை ஆற்றில் போடுபவர் அம்மனின் கோபத்திற்கு ஆளாவீர்கள்.. அம்மனின் அருள் பெறுங்கள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வித்தியாசமான பிளக்ஸ் போர்டு பக்தர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இதன் மூலமாவது நீர் மாசுபாடு குறையுமா என அப்பகுதியினர் எதிர்பார்த்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications