இலங்கைக்கு உதவுகிறதா சீனா... மகிந்த ராஜபக்சேவின் ராஜதந்திரம் பலிக்குமா?
கொழும்பு: இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி வரும் நிலையில் சீனா உதவ உறுதி அளித்துள்ளதாக அந்நாட்டின் பிரதமர் மகிந்த ராஜபக்சே கூறினார். சீனாவின் பிரதமர் லீ கெகியாங்குடன் அவர் தொலைபேசியில் பேசிய பிறகு இந்த தகவலை தெரிவித்தார். இலங்கைக்கு 2.5 பில்லியன் டாலர் அளவுக்கு சீனா உதவுவதாக இலங்கைக்கான சீன தூதர் அறிவிப்பு கிடப்பில் கிடக்கும் நிலையில் மகிந்த ராஜபக்சே இப்படி கூறியுள்ளார்.
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல்வேறு நகரங்களில் ஆளும் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இக்கட்டான நிலையில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு இந்தியா உதவி செய்தது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்களை வழங்குவதுடன், நிதி உதவியும் செய்து வருகிறது.

சீன பிரதமருடன் பேச்சு
இருப்பினும் இலங்கையின் நிலை என்பது படுபாதாளத்தில் உள்ளது. இதனால் பொருளாதார நெருக்கடியில் இருந்து எளிதில் இலங்கையில் மீள முடியவில்லை. குறிப்பாக வெளிநாடுகளுக்கான கடன், வட்டி திருப்பி செலுத்துவதை இலங்கை நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில் தான் இலங்கைக்கு உதவி செய்ய வேண்டும் என அதன் பிரதமர் மகிந்த ராஜபக்சே, சீன பிரதமர் லீ கெகியாங்குடன் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது அவர் இலங்கைக்கு உதவி செய்வதாக அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

உதவுவதாக உறுதி
இதுபற்றி இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில், ‛‛சீன பிரதமர் லீ கெகியாங்குடன் மிகவும் ஆக்கப்பூர்வமான உரையாடலை மேற்கொண்டேன். இந்த கடினமான காலங்களில் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நல்வாழ்வை பாதிக்கும் விஷயங்களில் இருந்து மீண்டு வர சில முக்கிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கான உறுதியை அவர் வழங்கினார். இதனால் இலங்கை சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.

ஆக்கப்பூர்வமாக செயல்பட
இதுபற்றி சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ‛‛இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கு லீ கெகியாங் உதவதாக கூறியுள்ளார். இலங்கைக்குத் தேவையான வாழ்வாதார உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார். இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடாத கொள்கையின் அடிப்படையிலும், இலங்கையின் விருப்பத்திற்கு மதிப்பளிக்கும் வகையிலும் இந்த உதவி செய்யப்படும். மேலும் இலங்கை-சீனா சார்ந்த சமூக பொருளாதார வளர்ச்சியில் ஆக்கப்பூர்வமாக செயல்பட சீனா தயாராக இருப்பதாகவும் லீ கெகியாங் கூறினார்'' என கூறப்பட்டுள்ளது.

கிடப்பில் 2.5 பில்லியன் டாலர் உதவி
இலங்கைக்கான சீன தூதர் குய் ஜின்ஹாங், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி எல் பீரிஸை சந்தித்து பேசியதற்கு மறுநாள் இருநாட்டு பிரதமர்களின் தொலைபேசி உரையாடல் நடந்துள்ளது. இலங்கைக்கு 2.5 பில்லியன் டாலர் வரை உதவி செய்ய சீனா விரும்புவதாக இலங்கைக்கான சீன தூதர் குய் ஜின்ஹாங் கூறிய நிலையில் இதுபற்றி இதுவரை சீனா தரப்பில் எதுவும் சொல்லப்படவில்லை. இந்நிலையில் தான் தற்போதைய பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

இலங்கை-சீனா உறவு
இலங்கை விமான நிலையம், துறைமுகங்கள் கட்டும் திட்டங்களுக்காக சீனாவில் இருந்து கடன் வாங்கி இருந்தது. கடன், முதலீடு என 8 மில்லின் அமெரிக்க டாலருக்கும் மேல் இலங்கைக்கு சீனா வழங்கியுள்ளது. இதில் இந்த ஆண்டு மட்டும் சுாமர் 1.5 முதல் 2 பில்லியன் டாலர் வரை சீனாவுக்கு, இலங்கை கடன் செலுத்த வேண்டியள்ளது. இதனால் பொருளாதார நெருக்கடியால் கடன் செலுத்துவதில் இருந்து சலுகை வழங்க வேண்டும் என இலங்கை, சீனாவிடம் வலியுறுத்தியது. இதற்கு சீனா செவிசாய்க்காத நிலையில் வெளிநாட்டு கடன், வட்டி தொகை செலுத்துவதை இலங்கை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications