ஈழத் தமிழர் பிரச்சனை- இந்தியா மீண்டும் தலையீடு? தமிழ் கட்சி தலைவர்கள்- கோத்தபாய பேச்சுவார்த்தை?
டெல்லி/கொழும்பு: இலங்கை தமிழர் பிரச்சனையில் இந்திய அரசு மீண்டும் தலையிட உள்ளதாகவும் விரைவில் ஈழத் தமிழ் கட்சித் தலைவர்களுடன் இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தக் கூடும் என இலங்கை பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டுள்ளன. அதேநேரத்தில் இந்தியாவிடம் இருந்து பெருமளவு நிதியைப் பெறுவதற்காக கோத்தபாய ராஜபக்சே நடத்தும் நாடகம்; இதனால் ஈழத் தமிழருக்கு ஒரு தீர்வும் கிடைக்கப் போவது இல்லை என்கிற கருத்தையும் தமிழ்த் தரப்பு முன்வைக்கிறது.
இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலைக்குள்ளானதால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உள்ளிட்ட ஆயுதக் குழுக்கள் இலங்கை ராணுவத்துடன் யுத்தம் நடத்தின. இலங்கை பிரச்சனையில் மறைந்த பிரதமர் இந்திரா காந்தி முதன் முதலில் தலையிட்டார்.
அடிச்சி போட்ட மாதிரி உடம்பு வலி.. ஓமிக்ரான் லேசான பிரச்சினையில்லை.. வாட்டும் அறிகுறிகள்!
இந்தியாவில் ஈழப் போராளிகளுக்கு பயிற்சியும் ஆயுதங்களும் கொடுத்து இலங்கைக்கு அனுப்பி வைத்தார். வங்கதேச விடுதலை பாணியில் ஈழத் தமிழர் விடுதலைக்கான வியூகம் வகுத்திருந்தார் இந்திராகாந்தி. ஆனால் சீக்கியர் பாதுகாவலர்களால் இந்திரா காந்தி சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார். இதன் பின்னர் ராஜீவ்காந்தியும் இலங்கை விவகாரத்தில் தலையிட்டார். 1987-ம் ஆண்டு இலங்கை அதிபராக இருந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனாவுடன் ராஜீவ்காந்தி ஒப்பந்தம் போட்டார். இந்திய அமைதிப்படையும் இலங்கை தமிழர் பகுதியில் களமிறக்கப்பட்டது. ஆனால் விரும்பத்தகாத நிகழ்வுகளால் இந்திய அமைதிப்படைக்கும் விடுதலைப்புலிகளுக்கும் யுத்தம் மூண்டது. இதன்பின்னர் 1990ல் இலங்கையில் இருந்து இந்திய அமைதிப்படை தாயகம் திரும்பியது.
ராஜீவ் படுகொலைக்கு பின்னர்..
1991-ம் ஆண்டு மே 21-ந் தேதி சென்னை அருகே ஶ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இப்படுகொலைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்தான் காரணம் என குற்றம்சாட்டி அந்த அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இதன்பின்னர் ஈழத் தமிழர் பிரச்சனையில் இருந்து இந்தியா ஒதுங்கிக் கொண்டது. இந்த கால கட்டத்தில் இருந்து இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்து இலங்கையும் விலகி மெல்ல மெல்ல சீனா பக்கம் சாய்ந்தது. இப்போது தென்னிலங்கையில் சீனாவின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு கிழக்கிலும் கால் பதிக்க சீனா முயற்சிக்கிறது. இந்திய எல்லையில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் காலூன்ற சீனா முயற்சிப்பதை இந்தியாவும் ரசிக்கவில்லை.
திவாலான இலங்கை
இன்னொரு பக்கம் இலங்கையின் நிதிநிலைமை படுமோசமாகிவிட்டது. திவாலாகிப் போன இலங்கை, சீனாவிடம் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் சில பகுதிகளை சீனாவுக்கு தாரை வார்க்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது. இந்த நிலையில் இந்தியா, இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறது. இந்தியாவின் கைகளை இறுகப்பற்றிக் கொண்டு கரைசேர முடியுமா? என கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறது இலங்கையில் ஆளும் ராஜபக்சேக்கள் குடும்பம்.
இந்தியா மீண்டும் தலையீடு?
இந்தப் பின்னணியில்தான் இலங்கை தமிழ் பத்திரிகைகளில் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. ஈழத் தமிழர் அதிகாரப் பகிர்வு தொடர்பாக விரைவில் தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களுடன் இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்பதுதான் அந்த செய்தி. இலங்கை ஆங்கில ஊடகங்களும் இதனை எழுதி இருக்கின்றன. இதன் பின்னணியில் இந்தியா இருக்கிறது என்றும் அந்த செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன. அதாவது 1987-ம் ஆண்டுக்குப் பின்னர் ஈழத் தமிழர் அரசியல் விவகாரத்தில் இந்தியா முதல் முறையாக தலையிட இருக்கிறது என்பதையே இது வெளிப்படுத்துகிறது.
ராஜபக்சேக்களின் நாடகம்
ஆனால் ஈழத் தமிழர் தலைவர்களில் ஒருதரப்பினர் இந்தியாவின் தலையீட்டால் ஒரு அதிகாரமும் கிடைக்காது. இது அப்பட்டமாக ராஜபக்சே குடும்பத்தினர் நடத்துகிற பக்கா நாடகம். இந்தியாவின் நிதி உதவியை லாவகமாகப் பெறுவதற்காக தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என பசப்பு காட்டுகிற வேலைதான்... ஈழத் தமிழர்களுடன் அதிகாரப் பகிர்வுக்கான பேச்சுவார்த்தை என இன்னொரு முறை உலக நாடுகளை ஏமாற்றுகிற சிங்களத்தின் நரித்தனம்தான் இது எனவும் கொந்தளிக்கின்றனர்.
பாஜகவின் கணக்கு இதுவா?
ஈழத் தமிழர் பிரச்சனையில் மத்திய பாஜக அரசு தலையிடுவதன் மூலம், தமிழகத்தில் பாஜகவுக்கு எதிராக இருக்கும் கோபம் தணியும் என்று கூட டெல்லி கணக்குப் போட்டிருக்கலாம். இதற்காக கூட இப்படியான ஒரு பேச்சுவார்த்தைகளுக்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கலாம் என்பது மூத்த பத்திரிகையாளர்களின் கருத்து.