400 பணியாளர்கள், ஏவுகணை-செயற்கைகோள் கண்காணிப்பு கருவிகளுடன் இலங்கையை நோக்கி சீனா உளவு கப்பல் பயணம்
டெல்லி/ கொழும்பு: 400 பணியாளர்கள், ஏவுகணைகள்- செயற்கைகோள்களை கண்காணிக்கும் ரேடார்களுடன் இலங்கையை நோக்கி சீனாவின் உளவு கப்பல் புறப்பட்டுள்ளது. இந்த உளவு கப்பல் இலங்கையின் அம்பாந்தோட்டா துறைமுகத்தை வரும் 11-ந் தேதி வந்தடைய உள்ளது.
Recommended Video
சீனாவின் யுவான் வாங் கிளாஸ் என்கிற கப்பல், வான்வெளி ஆராய்ச்சி தொடர்பான கருவிகளுடன் இலங்கையில் ஒரு வாரம் முகாமிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் சீனாவில் இருந்து இலங்கை நோக்கி புறப்பட்டுள்ளது. இலங்கையின் அம்பந்தோட்டா துறைமுகத்துக்கு ஆகஸ்ட் 11-ல் வந்தடைகிறது சீனாவின் யுவான் வாங் கிளாஸ் கப்பல்.

ஆனால் விண்வெளி ஆராய்ச்சி என்ற பெயரில் உளவு கருவிகளுடன் உளவு கப்பலை இலங்கைக்கு அனுப்பி வைத்திருக்கிறது. சீனாவின் இந்த உளவு கப்பலானது இந்தியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை எளிதாக உளவு பார்க்கும் என்பதால் தொடக்கம் முதலே இந்தியா கடுமையாக எதிர்த்து வருகிறது.
இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீனாவின் கப்பலை இலங்கை அனுமதித்திருக்கிறது. தொடக்கத்தில் அப்படி ஒரு கப்பலை நாங்கள் அனுமதிக்கவில்லை என்று சொன்னது இலங்கை; ஆனால் இந்தியாவின் நெருக்கடியால் வேறுவழியே இல்லாமல் ஒப்புக் கொண்டது இலங்கை. இந்திய பெருங்கடல் பரப்பில் இலங்கை இப்போது தேவையில்லாத பதற்றச் சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.
சீனாவின் இந்த உளவு கப்பலில் மொத்தம் 400 பணியாளர்கள் இடம்பெற்றுள்ளனர். உளவு கப்பலில் இருந்தபடியே செயற்கைகோள்கள், ஏவுகணைகளை எளிதாக கண்காணிக்க முடியுமாம். அதாவது அம்பாந்தோட்டா துறைமுகத்தில் இருந்து இந்தியாவின் ஒடிஷா வீலர் தீவில் நடத்தப்படும் அனைத்து ஏவுகணை சோதனைகளையும் சீனாவால் கண்காணித்துவிட முடியுமாம்.
அத்துடன் கூடங்குளம் அணுமின் நிலையம், கல்பாக்கம் அணுமின் நிலையம் என தென்னிந்தியாவில் இந்தியாவில் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் அனைத்துமே சீனாவின் கண்காணிப்புக்குள் சிக்கிவிடும். இது இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகவும் பேராபத்தானது என்பதாலேயே சீனாவின் கப்பலுக்கு இந்தியா தொடக்கம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனாலும் சீனாவிடம் பெற்ற கடனுக்காக வேறுவழியே இல்லாமல் உளவு கப்பலை அனுமதித்துள்ளது இலங்கை. இதனால் சீனாவின் உளவு கப்பல் நடமாட்டத்தை இந்தியா தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications