இலங்கைக்கு தேவையில்லாமல் பிரஷர் தரக் கூடாது.. ஆதரவுதான் தரனும்.. சீன தூதருக்கு டோஸ் விட்ட இந்தியா!
கொழும்பு: இலங்கைக்கு அழுத்தம் தரும் வகையிலான நடவடிக்கைகளை சீனா மேற்கொள்ளக் கூடாது; நெருக்கடியான இக் காலகட்டத்தில் ஆதரவுதான் இலங்கைக்கு தேவை என இலங்கைக்கான இந்திய தூதரகம் கடுமையாக சாடியுள்ளது.
இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு கடுமையாக போராடி வருகிறது. இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது அந்த நாட்டு அரசியலையே தலைகீழாக மாற்றிப் போட்டுள்ளது.
இலங்கை பொருளாதார சீரழிவால் பெரும் இன்னல்களை சந்தித்த பொதுமக்களின் கோபம், மக்கள் புரட்சியாக வெடித்தது. இதனால் பிரதமர் மகிந்த ராஜ்பகசே பதவி விலகினார். இலங்கையின் ஜனாதிபதி கோத்தபாயவும் ராஜினாமா செய்துவிட்டு இலங்கையைவிட்டு வெளியேறி தப்பி ஓடிவிட்டார். கோத்தபாய ராஜபக்சே, தற்போது தாய்லாந்தில் வீட்டு சிறையில் இருக்கிறார்.
இலங்கையின் ஜனாதிபதியாகி இருக்கும் ரணில் விக்கிரமசிங்கே, ஐஎம்எப் மற்றும் பல்வேறு நாடுகளிடம் இருந்து கடன்பெறுவதில் தீவிரமாக இருந்து வருகிறது. இலங்கைக்கு இந்தியா ஏற்கனவே பல்லாயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கி உள்ளது. தமிழ்நாடு அரசும் இலங்கை மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி உள்ளது.
இலங்கையில் உளவு கப்பல்.. செயற்கைக்கோளை வைத்து பிளான் செய்த இந்தியா.. கண்காணிக்க முடியாமல் ஓடிய சீனா
ஆனால் சீனாவோ இந்த நெருக்கடியான நிலையில் இந்தியாவை உளவு பார்க்கும் கப்பலை இலங்கைக்கு அனுப்பி வைத்தது. இதனால் தெற்காசிய அரசியலில் குறிப்பாக இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பெரும் பதற்றம் நிலவியது. வங்கக் கடலில் உள்ள இலங்கையின் அம்பாந்தோட்டையில் நிறுத்தப்பட்ட சீனாவின் உளவு கப்பல், இந்தியாவை எளிதாக கண்காணிக்கும் ராடார்களை கொண்டிருந்தது. சீனா கப்பலின் நடமாட்டத்தை கண்காணிக்க இந்தியாவும் அதிநவீன கண்காணிப்பு விமானத்தை இலங்கைக்கு வழங்கியது.சீனாவின் இத்தகைய போக்கை தொடர்ந்து இந்தியா கடுமையாக எதிர்த்தும் வருகிறது.
இந்நிலையில் இலங்கைக்கான சீனாவின் தூதர் குய் சென்ஹாங், இலங்கையின் இறையாண்மை, சுதந்திரத்தில் அண்டை நாடுகள் தலையிடுவதாக இந்தியாவை விமர்சித்திருந்தார். இதற்கு உடனடியாக இலங்கைக்கான இந்திய தூதரகம் கடுமையாக பதிலடி கொடுத்துள்ளது. இலங்கைக்காக இந்திய தூதரகம் தமது ட்விட்டர் பக்கத்தில், இலங்கைக்கான சீன தூதரின் கருத்துகளை நாம் கவனத்தில் கொண்டுள்ளோம். இலங்கைக்கான சீன தூதர் அடிப்படை ராஜதந்திர நெறிமுறைகளை மீறி இருக்கிறார். இப்படியான மீறல்கள் அவரது தனிப்பட்ட பண்பு அல்லது ஒரு பொதுவான அணுகுமுறையின் வெளிப்பாடாக இருக்கலாம். இலங்கையின் அண்டை நாடான இந்தியா மீதான அவரது நாட்டின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். ஆனால் இந்தியா அப்படியானது இல்லை.
இலங்கைக்கு ஆராய்ச்சிக் கப்பலை அனுப்பிவிட்டு அதனை பிராந்திய அரசியலுடன் இணைக்கிறது சீனா. இலங்கைக்கு இப்போது தேவை ஆதரவுதான். இன்னொரு நாட்டினது செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்தித்தான் ஆக வேண்டும் என்கிற தேவையற்ற அழுத்தங்கள் இலங்கைக்கு தேவை இல்லை என சாடியிருக்கிறது.
இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் ட்விட்டர் பதிவு:
சீனத் தூதுவரின் கருத்துகள் குறித்து நாம் கவனஞ்செலுத்தியுள்ளோம். அடிப்படை இராஜதந்திர நெறிமுறைகளை அவர் மீறுவது, ஒரு தனிப்பட்ட பண்பாகவோ அல்லது ஒரு பொதுவான தேசிய அணுகுமுறையின் பிரதிபலிப்பாகவோ இருக்கலாம். இலங்கைக்கு வடக்கே அமைந்திருக்கும் அயல்நாட்டின் மீதான அவரது நோக்கு, அவரது சொந்த நாட்டினுடைய நடத்தையின் பிரதிபலிப்பாக இருக்கலாம். ஆனால், இந்தியா அவ்வாறானதொன்றல்ல என்பதனை நாம் அவருக்கு உறுதிப்படுத்துகின்றோம். விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சிக்குரியதெனக்கூறப்படும் கப்பலொன்றின் வருகைக்கு பூகோள அரசியல் சூழலை பொருத்துவிக்கும் அவரது நடவடிக்கை ஒரு பாசாங்கான செயலாகும். தற்போது, மறைமுகமானதும் கடன்களை அடிப்படையாகக் கொண்டதுமான நிகழ்ச்சிநிரல்களே , குறிப்பாக சிறிய நாடுகளுக்கு மிகவும் பாரிய சவாலாக உள்ளன. அத்துடன், அண்மைக்காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் ஓர் எச்சரிக்கை என்பதும் குறிப்பிடத்தக்கது. லங்கைக்கு தற்போது ஆதரவு தேவையாக உள்ளதே தவிர மற்றொரு நாட்டின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலான தேவையற்ற சர்ச்சைகளோ, அழுத்தங்களோ அல்ல.