நெருங்கும் ஜூலை 9-இலங்கையில் வெடிக்கப் போகும் பூகம்பம் எது?பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ராஜினாமாவா?
கொழும்பு: இலங்கையில் ஒவ்வொரு மாதமும் 9-ந் தேதி அரசியலில் பூகம்பம் நிகழ்வதால் இந்த மாதம் 9-ந் தேதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பதவி விலகுவாரா? என்கிற பரபரப்பு நிலவுகிறது.
இலங்கையில் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே; ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சேக்களுக்கு எதிராக மக்கள் ஏப்ரல் 9-ந் தேதி போராட தொடங்கினர். கோத்தா கோ கம என்ற பெயரில் ஒரு மாதிரி கிராமம் கட்டமைக்கப்பட்டு கோத்தபாயவுக்கு எதிரான கிளர்ச்சி தொடங்கியது.
இலங்கை பொருளாதார நெருக்கடி: வெறிச்சோடி போன சாலைகள், எரிபொருளுக்கு மேலும் தட்டுப்பாடு
மகிந்த ராஜபக்சே
இதனையடுத்து தொடர் போராட்டங்கள் நடந்தன. கடந்த மே 9-ந் தேதியன்று பிரதமர் பதவியில் இருந்து விலகும் நிலைக்குத் தள்ளப்பட்டார் மகிந்த ராஜபக்சே. அத்துடன் போராடிய பொதுமக்களை தாக்குவதற்கு குண்டர்களை ஏவிவிட்டார் மகிந்த ராஜபக்சே. ஆனால் இந்த முயற்சி பூமராங்கானது. மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் வீடுகள், அலுவலகங்கள், சொத்துகள் மே 9-ந் தேதி தீக்கிரையாக்கப்பட்டன. இதனால் உயிருக்கு பயந்து மகிந்த ராஜபக்சே தப்பி ஓடினார்.
பசில் ராஜபக்சே
பொருளாதார நெருக்கடியில் சிக்கி அவதிப்படும் இலங்கை மக்களின் கோபம் தணியவும் இல்லை. அதேநேரத்தில் இலங்கை அரசியல்வாதிகளின் பதவி ஆசையும் போய்விடவில்லை. பிரதமர் பதவிக்காக இலவு காத்திருந்த பசில் ராஜபக்சே, ஜூன் 9-ந் தேதி தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது மனைவி அமெரிக்காவுக்கு தப்பி ஓடினார்.
ரணில் விக்கிரமசிங்கே
இதனால் வரும் 9-ந் தேதி இலங்கை அரசியலில் என்ன நடக்கும்? என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே பதவி விலகுவாரா? ரணில் விக்கிரமசிங்கே பதவியை இழப்பாரா? என்கிற விவாதம் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று இலங்கை நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சிகளின் வேலைத் திட்டம் வெற்றி பெற்றால் தமது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என ரணில் விக்கிரமசிங்கே பேசியிருக்கிறார்.
இலங்கை நாடாளுமன்றம்
இலங்கை நாடாளுமன்றத்தில், நாங்கள் வேலைத்திட்டங்களை முன்வைத்துள்ளோம். அதனை முன்னெடுக்க உதவுங்கள், வீதிக்கு இறங்க வேண்டிய தேவையில்லை. எதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பாராளுமன்றத்தை கூட்டி, விவாதத்தை நடத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம். எதிர்க்கட்சி தலைவர் அனுரகுமாரவின் வேலைத்திட்டம் வெற்றியளிக்குமாயின் நாங்கள் இராஜினாமா செய்ய தயார் என்றார். இதனால் இலங்கையில் மீண்டும் பரபரப்பு நிலவுகிறது.