எது தேச துரோகம்? என்பதை தெளிவாக வரையறுக்க வேண்டி நேரம் வந்துவிட்டது.. உச்ச நீதிமன்றம் கருத்து
டெல்லி: அரசை விமர்சிப்பதே தேச துரோகம் ஆகாது என்றும் தேச துரோகம் என்றால் என்ன என்பது குறித்துத் தெளிவாக வரையறுக்க வேண்டி நேரம் வந்துவிட்டது என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் தற்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. ஆனால், அக்கட்சியின் எம்பி கனுமுரி ரகு ராம கிருஷ்ணா ராஜு கொரோனா பரவல் குறித்த மாநில அரசின் நடவடிக்கைகளை தொடர்ந்து விமர்சித்து வந்தார்.
தஞ்சை மருத்துவமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் நிலையம்.. நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
அந்த எம்பி பங்கேற்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியதற்காக ஆந்திராவைச் சேர்ந்த டிவி 5 மற்றும் ஏபிஎன் ஆந்திர ஜோதி ஆகிய சேனல்கள் மீது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124 ஏ இன் கீழ் தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஆந்திர போலீசார்
ஆனால், இது சட்டத்துக்குப் புறம்பான செயல் என அந்த சேனல்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், "ஊடகங்களின் பேச்சு சுதந்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால், ஆந்திர அரசு ஊடகங்களை மவுனமாக்க முயல்கிறது. அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்கிறது. இது தொடர்பாக சேனல் நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தடை விதிக்க வேண்டும்" என்றும் கோரப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணை
இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்ததது. செய்தி சேனல்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் மற்றும் சித்தார்த் லுத்ரா, ஆந்திர போலீசாரின் இந்த நடவடிக்கை மின்னணு ஊடகங்களை ஒழிக்கவும் பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கவும் எடுக்கப்படும் ஒரு முயற்சி என்று வாதிட்டனர்,
தேச துரோகம்
அப்போது நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் கூறுகையில், ஐபிசி-இன் 124 ஏ மற்றும் 153 ஆகிய சட்டங்களின் விதிகளை நாம் தெளிவாக வரையைச் செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது என்றே நாங்கள் கருதுகிறோம். குறிப்பாகப் பத்திரிகைகளின் உரிமைகள் மற்றும் பேச்சு சுதந்திரம் பற்றி வரும்போது, இந்தப் பிரிவுகள் தெளிவாக விளக்கப்பட்டிருக்க வேண்டும். செய்தி சேனல்கள் கூறுவதை எல்லாம் தேச துரோகம் என்று நம்மால் வரையறை செய்ய முடியாது" என்றார்.
வரையறுக்க வேண்டும்
மேலும், நீதிபதிகள் கூறுகையில், "ஆந்திர போலீசார் குறிப்பிட்ட நிகழ்ச்சி குறித்துக் குற்றச்சாட்டைப் பதிவு செய்துள்ளனர். ஆனால் சேனல்கள் என்ன தவறு செய்தார்கள் என்பது குறித்து ஆந்திர போலீசார் தெளிவாக விளக்கவில்லை. அரசை விமர்சிப்பதே தேச துரோகம் ஆகாது" என்றனர்.
நடவடிக்கை கூடாது
இது தொடர்பாக ஆந்திர அரசும் மத்திய அரசும் 4 வாரங்களில் பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. மேலும், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் வரை 2 செய்தி சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தடை விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக எம்பி கனுமுரி ரகு ராம கிருஷ்ணா ராஜு சிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இருப்பினும் அவருக்கு மருத்துவ காரணங்களுக்காகக் கடந்த மே 21ஆம் தேதி ஜாமீன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது..