சிதம்பரம் நடராஜர் கோவில் அறநிலையத்துறை வசமாகுமா? தமிழ் உணர்வாளர்கள் கையெழுத்து இயக்கம்
சிதம்பரம் நடராஜர் கோவிலை அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வரவேண்டும் தமிழ் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பொதுமக்கள் கையெழுத்து இயக்கம் நடந்தது.
கடலூர்: சிற்றம்பல மேடையில் நின்று நடராஜரை தரிசிக்க கட்டணம் வசூலிக்க கூடாது, நடராஜர் கோவிலுக்கு சொந்தமான நகைகள் நிலங்கள் மற்றும் சொத்து விபரங்கள் அதிகாரப்பூர்வமான இணைய தளத்தில் வெளியிட வேண்டும் என தமிழ் உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் கூறியுள்ளனர். சிதம்பரம் நடராஜர் கோவிலை அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வரவேண்டும் எனவும் பொது மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தியுள்ளனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாயத்தலமாக உள்ளது. பொற்சபையாகவும் திகழ்கிறது நடராஜர் கோவில்.
இங்கு கடந்த சில மாதங்களாக பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வந்தது. பக்தர்கள் கனகசபை மீதேறி தரிசனம் செய்ய அரசு ஆணை பிறப்பித்தது. அதுமுதல் பக்தர்கள் கனகசபை மீதேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதே நேரத்தில் கோவில் சொத்துக்கள், நகைகள், வரவு செலவு கணக்குகள் குறித்து இரண்டு நாட்கள் ஆய்வு நடைபெறும் என்று பொது தீட்சிதர்களுக்கு அறநிலையத்துறை நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பொதுதீட்சிதர்கள் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த கோவிலில் அறநிலையத்துறை உத்தரவின் பேரில் கண்காணிப்பு குழுவினர் கடந்த வாரம் 2 நாட்கள் ஆய்வு செய்ய சென்றனர். இதற்கு கோவில் பொது தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு அவர்கள் அதிகாரிகளின் ஆய்வுக்கு எந்தவித ஒத்துழைப்பும் வழங்கவில்லை. உச்சநீதிமன்றம் உத்தரவின்படி தனிக்குழு அமைத்தால் தான் ஒத்துழைப்பு தருவோம் என்று பொது தீட்சிதர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோயில் நலனில் அக்கறை உள்ள நபர்கள் தங்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை விசாரணை குழுவிடம் தெரிவிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள விளம்பர அறிக்கையில், கடலூர் மாவட்டம் சிதம்பரம் சபாநாயகர் கோயில் குறித்து விசாரணை மேற்கொள்ள தமிழ்நாடு இந்து சமய அறநிலைய அறக்கொடைகள் சட்டத்தின் சட்டப்பிரிவு 23 மற்றும் 33-ன் படி ஆணையாரால் அமைக்கப்பட்ட விசாரணை குழுவிடம், கோயில் மீது அக்கறை உள்ள நபர்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளது.
கோவில் நலனில் அக்கறை உள்ள நபர்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வருகிற 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் 3 மணிவரை நேரில் தெரிவிக்கலாம். அதோடு மின் அஞ்சல் முகவரியிலும் அனுப்பலாம் என அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
2 மேட்டர் + 3 பிளான்.. எடப்பாடிக்கு சிக்கல் போலயே..
இதனிடையே தமிழகத்தின் பிற கோவில்களில் உள்ளது போன்று உண்டியல் வைத்து மக்களிடம் காணிக்கை பெற வேண்டும், அனைத்து விதமான பூசை அர்ச்சனைகளுக்கு உரிய ரசீது தரவேண்டும், சிற்றம்பல மேடையில் நின்று நடராஜரை தரிசிக்க கட்டணம் வசூலிக்க கூடாது, நடராஜர் கோவிலுக்கு சொந்தமான நகைகள் நிலங்கள் மற்றும் சொத்து விபரங்கள் அதிகாரப்பூர்வமான இணைய தளத்தில் வெளியிட வேண்டும், நடராஜர் கோவிலை அரசு இந்து அறநிலையத் துறைக்கு கீழ் கொண்டு வர வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பொதுமக்கள் கையெழுத்து இயக்கம் கடலுார் மஞ்சகுப்பம் பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்றது.
கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வக்கீல் திருமார்பன் தலைமை தாங்கினார். பொதுமக்கள், கல்லுாரி மாணவர்கள், தொழிலாளர்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் சிதம்பரம் நடராஜர் கோவிலை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கையெழுத்திட்டனர்.