ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் 2 ஓட்டு வித்தியாசத்தில் வென்ற பெண் வேட்பாளர்
கடலூர்- மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியம் தில்லைநாயகபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் இடைத்தேர்தலில் மகாவதி 2 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
கடலூர்: மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தில்லைநாயகபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட பெண் வேட்பாளர் இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
ஊராட்சித் தலைவராக பொறுப்பேற்க உள்ள அந்த வெற்றி வேட்பாளரின் பெயர் மகாவதி என்பதாகும். இவர் ஏற்கனவே இதே ஊரில் ஊராட்சித்தலைவராக இருந்த நாகூரான் என்பவரின் மனைவியாவார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊராக உள்ளாட்சித் தேர்தலில் கடலூர் மாவட்டம் மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தில்லைநாயகபுரம் ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்றார் நாகூரான். அவர் திடீரென உயிரிழந்த நிலையில், அந்த ஊராட்சிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்த இடைத்தேர்தலில் ஏற்கனவே ஊராட்சித் தலைவராக இருந்த நாகூரான் மனைவி மகாவதி உள்ளிட்ட நான்கு பேர் போட்டியிட்டனர். இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் மொத்தம் பதிவான 723 வாக்குகளில் மகாவதி 268 வாக்குகள் பெற்றார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கலையரசி என்ற வேட்பாளர் 266 வாக்குகள் பெற்ற நிலையில், மகாவதி இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2 வாக்குகள் வித்தியாசத்தில் மகாவதி வெற்றி பெற்றுள்ள சம்பவம் அந்த ஊராட்சியில் மட்டுமின்றி கடலூர் மாவட்டத்திலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கணவர் வென்று அமர்ந்த பதவியை மீண்டும் தக்கவைத்துக்கொண்டுள்ளார் மகாவதி.
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் கடந்த 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதே போன்று பிற மாவட்டங்களில் விடுப்பட்ட பதவிகளுக்கான தேர்தலும் நடைபெற்று முடிந்தது. 74 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு உடனுக்குடன் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
வாக்கு எண்ணும் பணியில் 30,245 அலுவலர்களும் பாதுகாப்புப் பணியில் 6,278 போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் அனைத்தும் சிசிடிவி கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட உள்ளன. https://tnsec.tn.nic.in என்ற இணையதளத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. தற்போதைய நிலவரப்படி திமுக பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
திமுக கூட்டணி கட்சியினர் பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய குழு 1வது வார்டு திமுக வேட்பாளர் விஜயலட்சுமி கருணாகரன் 56 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை - ஆயுதபூஜை நாளில் கோவை, நீலகிரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு
தேனி மாவட்டம் போடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நாகலாபுரம் கிராமத்தில் 4வது வார்டு பகுதிக்கு கடந்த 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மூன்று நபர்கள் போட்டியிட்டதில் பெருமாள் என்பவர் 103 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார். மொத்தம் பதிவான 254 வாக்குகளில் 103 வாக்குகள் பெற்று 4வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்ததை அடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் அவருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பொன்மனி என்பவர் 52 வாக்குகளும், ராஜாராம் என்பவர் 99 வாக்ககளும் பெற்று தோல்வி அடைந்தனர்.