கல்யாண மண்டபம் ஆன பஸ் ஸ்டாப்! சிக்கிய கல்லூரி மாணவனுக்கு இறுகும் பிடி! இருவர் மீதும் பாய்ந்தது போக்சோ!
கடலூர் : சிதம்பரம் பேருந்து நிலையத்தில் மாணவிக்கு தாலி கட்டிய விவகாரம் தொடர்பாக தாலி கட்டிய மாணவன், மற்றும் அந்த வீடியோவை பதிவிட்டவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் காந்தி சிலை உள்ளது. அதன் அருகில் பல்வேறு சிறு கிராமங்களுக்கு செல்வதற்காக சிற்றுந்து பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த நிழற்குடையில் பள்ளி சீருடையில் இருக்கும் மாணவி ஒருவருக்கு மாணவன் ஒருவர் மஞ்சள் கயிறு மூலம் தாலி கட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது.
இது குறித்து பல்வேறு பகுதிகளில் விசாரணை செய்ததில் சிதம்பரம் அருகே உள்ள பெராம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி என்பது உறுதி செய்யப்பட்டது,

தாலி கட்டிய மாணவன்
மேலும் தாலி கட்டிய மாணவன் சிதம்பரம் அருகே உள்ள வடகரிராஜபுரம் கிராமத்தை சேர்ந்த அருண்குமார் தனியார் பாலிடெக்னிக் மாணவன் என்பதும் தெரிய வந்தது. மாணவி ஒருவருக்கு கல்லூரி மாணவர் தாலி கட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. பள்ளி செல்லும் மாணவிகள் மற்றும் மாணவர்கள் இது போன்ற செயல்படுகளால் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

பெற்றோர்கள் அதிர்ச்சி
இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்த நிலையில். சிதம்பரம் நகர காவல்துறையினர் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மாணவன் மற்றும் மாணவியிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இவர்கள் 2 பேரிடமும் கடலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் முகுந்தன் மற்றும் ரம்யா ஆகியோர் விசாரணை நடத்தினர். அதோடு 2 பேருக்கும் கவுன்சிலிங் வழங்கப்பட்டது.

மாணவன் கைது
இதனைத்தொடர்ந்து மாணவி கடலூரில் உள்ள காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மாணவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் பாலிடெக்னிக் மாணவனிடம் 2-வது நாளாக 7 மணி நேரம் விசாரணை நடத்திய போலீசார், மாணவனை குழந்தை திருமண தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதனை தொடர்ந்து மாணவனை பண்ருட்டி சிறார் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பினர்.

போக்சோ சட்டம்
இந்நிலையில் சிதம்பரத்தில் பள்ளி சீருடையில் இருந்த மாணவிக்கு பாலிடெக்னிக் மாணவன் தாலி கட்டிய வீடியோவை வெளியிட்ட பாலாஜி கணேஷ் என்பவர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே மாணவன் அருண்குமார் மற்றும் வீடியோவை வெளியிட்ட பாலாஜி கணேஷ் ஆகியோர் மீது கூடுதலாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications