இது திட்டமிட்டு செய்யப்பட்ட கிரைம்.. விடாதீங்க! கள்ளக்குறிச்சி கலவரம்.. உயர் நீதிமன்றம் காட்டம்!
கடலூர்: கள்ளக்குறிச்சி கலவரம் கோபம் காரணமாக நடந்தது போல தெரியவில்லை திட்டமிட்டு செய்தது போல இருக்கிறது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Recommended Video
கள்ளக்குறிச்சியில் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவி பலியான விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அங்கு படித்த 12ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் கடந்த 12ம் தேதி பலியானார். இதற்கு எதிராக நேற்று கள்ளக்குறிச்சியில் பெரும் கலவரம் நடைபெற்றது.
இந்த நிலையில் மாணவியின் வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மாணவியின் பெற்றோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதோடு தனது மகளுக்கு மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். தாங்கள் சொல்லும் மருத்துவர்களை வைத்தே பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.

வழக்கு
இந்த நிலையில் தமிழ்நாடு போலீசும் இந்த வழக்கில் இன்று அறிக்கை தாக்கல் செய்வதாக இருந்தது.
இந்த நிலையில்தான் இன்று நடந்த வழக்கு விசாரணையில் நீதிபதி சதிஷ் குமார் சரமாரி கேள்விகளை எழுப்பினார். அதில்,
நீங்கள் கோர்டில் வழக்கு தொடுத்து இருக்கிறீர்கள். அப்படி இருக்கும் போது கோர்ட் மீது தானே முழு நம்பிக்கை வைக்க வேண்டும்? ஆனால் மொத்த மாநிலமும் பெரும் தொகை கொடுக்கும் அளவிற்கு மோசமான சம்பவம் நடந்து விட்டதே? எப்படி இந்த கலவரம் நடக்கலாம்? என்று நீதிபதி மாணவியின் பெற்றோர் தரப்பிடம் கேள்வி எழுப்பினர்.

மாணவி தரப்பு
இதற்கு பதில் அளித்த மாணவி தரப்பு வழக்கறிஞர், பெற்றோருக்கும் கலவரத்திற்கும் தொடர்பு இல்லை. மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. வாட்ஸ் ஆப் மூலம் முன்னாள் மாணவர்கள் திரண்டு இருக்கிறார்கள். அவர்கள்தான் கலவரத்தை நடத்தி இருக்க வேண்டும், என்று குறிப்பிட்டார்.
நீதிபதி: கலவரம் செய்ய யார் அனுமதி கொடுத்தது? 4500 மாணவர்களின் டீசியை எரிக்க யார் அனுமதி கொடுத்தது? இதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் எங்கள் கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியாது. வன்முறை திட்டமிடப்பட்டது எப்படி? போராட்டம் நடத்தப்பட்டது எப்படி?
பெற்றோர் தரப்பு: பெற்றோருக்கும் கலவரத்திற்கும் தொடர்பு இல்லை. மாணவியின் அப்பா இப்போதுதான் வெளிநாட்டில் இருந்தே வந்துள்ளார். அவருக்கு எதுவும் தெரியாது.

நீதிபதி கேள்வி
நீதிபதி - போலீஸ் தரப்பை பார்த்து: தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு இல்லையோ என்று எண்ணும் சூழ்நிலையை நீங்கள் உருவாக்கிவிட்டீர்கள். இந்த நாட்டிற்கு என்ன செய்தி நீங்கள் சொல்ல போகிறீர்கள்?
போலீஸ் தரப்பு: நாங்கள் யாரையும் காப்பாற்றும் எண்ணத்தில் இல்லை. முறையாக எப்ஐஆர் பதிவு செய்துள்ளோம். தற்போது வரை 5 பேரை கைதும் செய்து இருக்கிறோம். இப்போது சிபிசிஐடிக்கு மாற்றிவிட்டோம் வழக்கை.

கோபம்
நீதிபதி: போராட்டம் செய்தவர்களை கண்டுபிடியுங்கள். தனிப்படை அமையுங்கள். போராட்டக்காரர்களை கைது செய்தால் மட்டும் போதாது. அவர்கள் கையில் சட்டங்களை எடுக்க கூடாது. போலீஸ் யார் கட்டுப்பாட்டிலும் இருக்க கூடாது. நீங்கள் சட்டத்தை நிலைநாட்ட வேண்டும். நான் டிவியில் அனைத்தையும் பார்த்தேன்.
போலீஸ்: சாதாரண போராட்டம் கலவரமாக மாறிவிட்டது.

சந்தேகம்
நீதிபதி: உங்கள் உளவுத்துறை அறிக்கை எங்கே? கைது செய்தால் மட்டும் போதுமா? சமூக வலைத்தளங்களில் தனியாக விசாரணை நடத்துகிறார்கள். நீங்கள் அவர்களுக்கு எதிராக என்ன செய்தீர்கள்? இதை நினைத்தாலே வருத்தமாக இருக்கிறது. இந்த கலவரம் கோபம் காரணமாக நடந்தது போல தெரியவில்லை. திட்டமிட்டு செய்தது போல இருக்கிறது. இந்த கலவரம் திட்டமிட்டு செய்யப்பட்ட குற்றம். வாட்ஸ் அப் குரூப் அட்மினை கைது செய்ய தமிழக டிஜிபி நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றம் இந்த விசாரணையை கண்காணிக்கும். இதில் எடுக்கப்படும் ஆக்சன் எதிர்காலத்தில் மற்றவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும், என்று குறிப்பிட்டனர்.












Click it and Unblock the Notifications