முக்கியம்! கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு.. ஜிப்மர் ஆய்வறிக்கையை நாளை பெற்றோரிடம் வழங்கும் கோர்ட்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளியில் படித்த 12ம் வகுப்பு மாணவி மர்மமரணம் அடைந்த நிலையில் ஜிப்மர் மருத்துவ குழுவின் ஆய்வறிக்கையை கேட்டு மாணவியின் பெற்றோர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம் ஆய்வறிக்கையை நாளை வழங்குவதாக அறிவித்துள்ளது. இதன்மூலம் வழக்கு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூரில் தனியார் பள்ளியில் கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி விடுதியில் தங்கி 12ம் வகுப்பு படித்தார். கடந்த மாதம் 12ம் தேதி மாணவி மர்மமான முறையில் இறந்தார்.
இதையடுத்து மாணவியின் இறப்புக்கு நீதிகேட்டு குடும்பத்தினர் உள்பட ஏராளமான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த மாதம் 17ம் தேதி நடந்த போராட்டம் கலவரமானது. பள்ளிக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் சூறையாடி, வாகனங்களை தீவைத்து எரித்தனர்.

ஜிப்மர் மருத்துவ குழு
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் மாணவியின் உடல் 2வது முறையாக உடற்கூராய்வு செய்யப்பட்டது. அதன்பிறகு உடற்கூராய்வு அறிக்கைகளை ஆய்வு செய்ய புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ குழு அமைக்கப்பட்டது.

ஜிப்மர் குழு ஆய்வறிக்கை
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து மாணவியின் உடலை பெற்றுக்கொண்ட பெற்றோர் நல்லடக்கம் செய்தனர். இதையடுத்து 2 உடற்கூறாய்வு அறிக்கைகைளை ஜிப்மர் மருத்துவக்குழு ஆய்வு செய்தது. இந்த ஆய்வறிக்கையானது நேற்று விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாணவியின் பெற்றோர் மனு
இந்நிலையில் தான் மாணவியின் பெற்றோர் சார்பில் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று புதிதாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதாவது மாணவியின் 2 உடற்கூறாய்வு தொடர்பான அறிக்கைகள், வீடியோ பதிவு, ஜிப்மர் ஆய்வறிக்கை உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதுபற்றி மாணவி தரப்பு வழக்கறிஞர் காசி விஸ்வநாதன் கூறியுள்ளதாவது:

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மனு
‛‛நீதிமன்றத்தில் நேற்று ஜிப்மர் மருத்துவ குழுவின் ஆய்வறிக்கை நேற்று சமர்ப்பிக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து 2 உடற்கூறாய்வு அறிக்கை, வீடியோ பதிவு, ஜிப்மர் மருத்துவ குழுவின் ஆய்வறிக்கை உள்ளிட்டவற்றை கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளோம். இதுதொடர்பாக ஜூலை 22ம் தேதி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதில் ஜிப்மர் குழு ஆய்வறிக்கை தாக்கல் செய்த பிறகு அதற்கான நகல்களை பெற்று கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நீதிமன்ற உத்தரவை வைத்து மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது'' என கூறியுள்ளார்.

நாளை வழங்குவதாக அறிவிப்பு
இந்நிலையில் தான் இன்று இந்த மனு மீது நீதிபதி புஷ்பராணி விசாரணை நடத்தினார். இதையடுத்து ஜிப்மர் குழு தாக்கல் செய்த ஆய்வறிக்கை உள்ளிட்டவற்றை நாளை பெற்றோரிடம் வழங்குவதாக நீதிமன்றம் கூறியது. இதன்மூலம் நாளை மாணவியின் மர்மமரணத்துக்கான காரணம் உள்ளிட்ட விபரங்களை அவர்களின் பெற்றோர் அறிந்து கொள்ள முடியும். இதனால் மாணவியின் மர்மமரணம் தொடர்பான வழக்கு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications