என்னய்யா.. மாமனும் மச்சானும் ஒண்ணும் தெரியாதமாதிரி பேசிக்கிறீங்க.. சக அமைச்சரை கலாய்த்த கே.என்.நேரு!
கடலூர் : கடலூரில் ஆய்வுக் கூட்டத்திற்குச் சென்றிருந்த அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தையும், சிதம்பரம் நகராட்சி சேர்மன் செந்தில் குமாரையும் கிண்டல் செய்து பேசியுள்ளார்.
ஆய்வுக் கூட்டத்தில் சிதம்பரம் நகராட்சி தலைவர் செந்தில் குமார் கோரிக்கை எழுப்பும்போதும், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசும்போதும் அவர்களை கிண்டல் செய்து கமெண்ட் அடித்தார் அமைச்சர் கே.என்.நேரு.
ஆய்வுக் கூட்டத்தின்போது, அமைச்சர் கே.என்.நேரு, அதிகாரிகளிடம் கடுமை காட்டியபோதும், அவர் அடித்த ஜாலி கமெண்ட்களால் அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மத்தியில் அவ்வப்போது சிரிப்பலை எழுந்துள்ளது.

நேருவின் கிண்டல்
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு பொது இடங்களிலும் வெளிப்படையாக, சகஜமாக பேசக்கூடிய இயல்பு கொண்டவர். கட்சிக்காரர்கள் மத்தியில் அவரது கேலி கிண்டல்கள் பிரசித்தம். சக அமைச்சர்களையும் விட்டு வைக்காமல் கேலியாகச் சீண்டுவதும், கட்சிக்காரர்களை ஒருமையில் பேசுவதும் கே.என்.நேருவின் வழக்கம். அந்த வகையில் கடலூரில் ஆய்வுக் கூட்டத்திற்குச் சென்றிருந்த அமைச்சர் நேரு, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தையும், அவரது சகோதரி மகனான சிதம்பரம் சேர்மன் செந்தில் குமாரையும் கலாய்த்துள்ளார்.

அமைச்சர் ஆய்வுக்கூட்டம்
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசு திட்டப்பணிக குறித்த ஆய்வுக்கூட்டம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார். அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோரிக்கைகள்
இந்தக் கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் அய்யப்பன், சபா.ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன், சிந்தனைச் செல்வன் ஆகியோர் தங்கள் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படவேண்டிய அத்தியாவசிய பணிகள் குறித்து தெரிவித்தனர். மேலும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தங்கள் பகுதிகளுக்கு தேவையான புதிய திட்டப்பணிகள் குறித்து கோரிக்கை விடுத்தனர். அவர்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துப் பேசினார். அதிகாரிகளுக்கு உத்தரவுகளையும் பிறப்பித்தார்.

உன் மாமா சொல்லிட்டான்
இந்த ஆய்வுக் கூட்டத்தில் சிதம்பரம் நகராட்சித் தலைவர் செந்தில் குமார் பேசுகையில், சிதம்பரம் பேருந்து நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும், சாக்கடை தூர்வார 2 பேர் தான் இருக்கிறார்கள், அதற்கு உரிய நடவடிக்கைகளைச் செய்ய வேண்டும் என கோரிக்கைகளை வைத்தார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் கே.என்.நேரு, "எல்லாத்தையும் உன் மாமா சொல்லிட்டான்" என்றார். அருகில் இருந்த துறை செயலர் சிவதாஸ் மீனாவிடம், இவர் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னிர்செல்வத்தின் அக்கா மகன் என தெரியப்படுத்தினார்.

மாமனும் மச்சானும்
இதையடுத்து, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசும்போது, ஒவ்வொரு நகராட்சியிலும் வரி வசூல் செய்திருப்பது பற்றிய விவரங்களைக் கேட்டார். அப்போது சிதம்பரம் சேர்மனிடம் உங்க நகராட்சியில் எவ்வளவு வரி வசூல் செய்திருக்கீங்க எனக் கேள்வி எழுப்பினார். உடனே அமைச்சர் கே.என்.நேரு, என்னய்யா.. மாமனும் மச்சானும் ஒண்ணும் தெரியாத மாதிரி பேசிக்கிறீங்க? என கிண்டலாக கேட்க, கூட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.












Click it and Unblock the Notifications